Pages - Menu

*பயன்பாடு இல்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது உறுதிசெய்தல் மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்*

*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவு தினம் இன்று(1911).*

*17 வயதில் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்வதே அவரது கனவாக இருந்தது.*
 *ஆனால் அதற்கான உடல் கட்டு இல்லை மற்றும் கண் பார்வை குறைவு. அதனால் நிராகரிக்கப்பட்டார். பின்பு அமெரிக்க இராணுவத்தில் ஏஜன்ட் ஆக பணியாற்றினார். பின்னர் 3 ஆண்டுக்கு பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். அவர் செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச் என்ற பத்திரிகை மூலமாக அரசியல்வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் பின்னால் உள்ள திரைமறைவு நிகழ்வுகளையும்,போர்கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்து காட்டினார்.*

*புலிட்சர்,  1911 ஆம் ஆண்டில் அவர் இறக்குமுன்னர் பத்திரிகையாளர்களுக்கு விருது அளிக்க குறிப்பிட்ட தொகைப் பணத்தைக் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார்.*
*இத்தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
 *முல்லை பெரியாறு அணை கட்டுவதன் முதன்மை நடவடிக்கையாக அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையில் 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தினம் இன்று.*

*அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது.*


*இராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். இவ்வணை கட்டுவதற்கான இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.*

*பல சோதனைகளைக் கடந்து பென்னி குக்கின் விடாமுயற்சி காரணமாக முல்லைப் பெரியாறு அணை 1895ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------
*எழுத்தாளர்*
*லா. ச. ராமாமிர்தம் நினைவு தினம் இன்று.*


*லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.*


*1916 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.*


*லா.ச.ரா.வின் முதல் கதை அவரது 18ஆவது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989இல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.*

*லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.*

*அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.*

*அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.*

*லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91ஆவது வயதில், சென்னையில் காலமானார்.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*அமரர் கல்கியின்* *பொன்னியின் செல்வன்  வரலாற்றுப் புதினம்  தொடராக முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த தினம் இன்று (1950).*


*இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. *பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக்* *குழுக்களால் நாடகமாகவும்*
*அரங்கேற்றப்பட்டுள்ளது.*

*இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.*