திங்கள், 3 அக்டோபர், 2022

Ministry of Minority Affairs~ Scholarships Scheme details...

பள்ளிக்கல்வித்துறை ~ அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்‌ கூட்டம்‌ 16.09.2022 மற்றும்‌ 17.09.2022 அன்று நடைபெற்றது~ கூட்டத்தில்‌ விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்‌ ...

click here...

மாதிரிப்‌ பள்ளி (Model School) 2022-2023 - முதுகலை பாட ஆசிரியர்கள்‌ - ஆஷா நிவாஸ்‌.ல்‌ பிழைத்திருத்தம்‌ மற்றும்‌ EMIS Portal இல்‌ - பதிவிறக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ அவர்களை பணியிலிருந்து விடுவித்தல்~மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


click here...

ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்...


ஜான் பெர்க்கின்ஸ்

 01 Oct 2022

சர்வதேச பொருளாதாரம், அதன் இயங்குமுறை தொடர்பில் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல்  வாக்குமூலம்’ உலகளாவிய அளவில் வாசகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களில் ஒன்று. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் இது. தமிழில் ஏற்கெனவே இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், இப்போது அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பை ‘மஞ்சுள் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது. பி.எஸ்.வி.குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் இந்நூல் வாசிப்புக்கு எளியதாகவும், நூல் வடிவில் விரிவாக்கப்பட்டதாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

ஜான் பெர்க்கின்ஸ் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற  பெரிய அமைப்புகளுக்குப் பொருளாதார ஆலோசகராகச் செயல்பட்டவர். சர்வதேச அளவில் இயங்கிவரும் முன்னணிப் பெருநிறுவங்களில் தலைமைப் பொருளாதார நிர்வாகியாகவும் பணியாற்றியவர். சர்வதேச அளவில் இவரது எழுத்துகள் மட்டுமின்றி, உரைகளுக்கும் வரவேற்பு அதிகம். நம்முடைய அரசியலையும் பொருளாதாரத்தையும் சர்வதேச அமைப்புகள் எப்படித் தீர்மானிக்கின்றன என்பதை விவரிக்கும் நூல் இது. முக்கியத்துவம் கருதி நூலில் இருந்து ஒரு பகுதியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. 

பெருநிறுவனங்களின் ஆலோசனையாளர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, உலகெங்குமுள்ள பல நாடுகளைத் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றிப் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுகின்ற தொழில்முறை நபர்கள்தாம் பொருளாதார அடியாட்கள்.

உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி நிறுவனம், பிற சர்வதேச நிதியுதவி நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை மடை மாற்றி, பெருநிறுவனங்களின் பாக்கெட்டுகளையும்,  இப்புவியின் இயற்கை வளங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ஒரு சில செல்வந்தர்களின் பாக்கெட்டுகளையும் நிரப்புவதே அவர்களுடைய தலையாய பணியாகும்.

பொருளாதார அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வது, ஜனநாயகத் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வது, லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, பெண்களைப் போகப் பொருட்களாகப் பயன்படுத்திக் காரியம் சாதிப்பது, இவ்வளவு ஏன், கொலைகூடச் செய்வது இவர்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகின்ற உத்திகளாகும். வரலாறு நெடுகிலும் பேரரசுகள் கடைபிடித்து வந்த போக்கைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர் என்றாலும், உலகமயமாக்கம் நடந்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், அந்த உத்திகள் புதிய, பயங்கரமான பரிமாணங்களை எடுத்துள்ளன. 

இது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஏனெனில், ஒரு சமயத்தில் நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்

1982இல் ‘ஒரு பொருளாதார அடியாளின் மனசாட்சி’ என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். மேற்குறிப்பிடப்பட்ட பத்தியுடன்தான் அதை நான் தொடங்கினேன். இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கு அப்புத்தகத்தை நான் அர்ப்பணித்திருந்தேன். எக்குவடோர் நாட்டு அதிபர் ஜெயிம் ரோல்டோஸும் பனாமா நாட்டு அதிபர் ஓமர் டோரிஜோஸும்தான் அவர்கள் இருவரும். நான் பெரிதும் மதித்தத் தலைவர்கள் அவர்கள்.

ஒரு பொருளாதார அடியாள் என்ற முறையில் தொழில்முறைரீதியாக நான் அவர்கள் இருவருடனும் பழகிவந்தேன். அவர்கள் இருவருமே தனித்தனியே ஒரு கொடூரமான விமான விபத்தில்தான் உயிரிழந்தனர். அவர்கள் இருவருடைய மரணங்களும் விபத்துகள் அல்ல. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய பேரரசு ஒன்றை நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த பெருநிறுவன, அரசாங்க மற்றும் சர்வதேச வங்கிகளின் தலைவர்களின் கூட்டணியை அவர்கள் எதிர்த்ததுதான் அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம். அவர்கள் இருவரையும் எங்களுடைய வழிக்குக் கொண்டுவருவதற்கு, பொருளாதார அடியாட்களாகிய நாங்கள் தவறியிருந்ததால், அமெரிக்க சிஐஏ அமைப்பின் ஆசி பெற்று இயங்கிவந்த, ‘ஜாக்கல்கள்’ என்ற வேறு விதமான அடியாட்கள் களத்தில் இறங்கிக் காரியத்தை முடித்தனர்.

நான் எழுதத் தொடங்கிய புத்தகத்தைக் கைவிடும்படி நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். அடுத்த இருபது ஆண்டுகளில் இதை மீண்டும் எழுத நான் நான்கு முறை முயன்றேன். உலகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களே ஒவ்வொரு முறையும் என்னை எழுதத் தூண்டின. 1989இல் பனாமா நாட்டுக்குள் அமெரிக்கப் படையினர் புகுந்த சம்பவம், முதல் வளைகுடாப் போர், சோமாலியாவில் நடைபெற்றச் சம்பவங்கள், ஒசாமா பின் லேடனின் வளர்ச்சி ஆகியவையே அவை. ஆனால், ஒவ்வொரு முறையும், லஞ்சமும் அச்சுறுத்தலும் மேலே தொடரவிடாமல் என் கைகளைக் கட்டிப்போட்டன.

2003இல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்த ஒரு பிரபலமான பதிப்பகத்தின் தலைவர், ‘ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்’ நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்தார். அதை அவர், “இந்த உலகிற்குக் கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு  விறுவிறுப்பான கதை” என்று வர்ணித்தார். ஆனால், தன்னுடைய நிறுவனத்தின் சர்வதேசத் தலைமையகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தான் அதைப் பதிப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கக்கூடும் என்பதால் தன்னால் அதைப் பிரசுரிக்க முடியாது என்று வருத்தத்துடன் என்னிடம் கூறினார். அதை ஒரு புனைகதையாக எழுதும்படி எனக்கு அவர் அறிவுறுத்தினார். நான் அதற்கு ஒப்புக்கொண்டால், “ஜான் லே கேர் அல்லது கிரஹாம் கிரீன் போன்ற ஓர் எழுத்தாளராக உங்களை என்னால் சந்தைப்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்

ஆனால், இது ஒரு புனைகதையல்லவே! இது என் வாழ்க்கையின் உண்மைக் கதை. நமக்குத் தோல்விகளைக் கொண்டுவந்து கொடுத்த ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டக் கதை இது. எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்திற்கும் சொந்தமாக இல்லாத, ஒரு துணிகரமான பதிப்பாளர் இதை வெளியிட முன்வந்தார்.

லஞ்சங்களை ஒதுக்கித் தள்ளவும் அச்சுறுத்தல்களை அலட்சியம் செய்யவும் இறுதியில் எது என்னைத் தூண்டியது?

இதற்கான சுருக்கமான பதில், என்னுடைய ஒரே மகள் ஜெஸிக்கா!

அவள் அப்போதுதான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியுலகிற்குள் அடியெடுத்து வைத்திருந்தாள். நான் இந்நூலைப் பிரசுரிக்க உத்தேசித்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அது குறித்து நான் அச்சம் கொண்டிருந்ததாகவும் நான் அவளிடம் தெரிவித்தபோது, அதற்கு அவள், “கவலைப்படாதீர்கள் அப்பா! அவர்களால் உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், நீங்கள் விட்ட இடத்திலிருந்து நான் அதைத் தொடர்கிறேன். என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நான் பெற்றுத் தரத் திட்டமிட்டிருக்கின்ற பேரக்குழந்தைகளுக்காகவாவது நாம் இதைச் செய்தாக வேண்டும்” என்று கூறினாள்.

என் முடிவுக்கான நீண்ட பதில் இது: என்னை வளர்த்த என் தாய்நாட்டின் மீது நான் கொண்டிருந்த அர்ப்பணிப்பு; அமெரிக்காவை நிறுவிய மாமனிதர்கள் வெளிப்படுத்தியிருந்த உன்னத லட்சியங்கள் மீது நான் கொண்டிருந்த ஈடுபாடு; அனைத்து இடங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் ‘வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான நாட்டம்’ ஆகியவற்றுக்கு வாக்குறுதி அளித்த அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நான் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை; 2001 செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு, அமெரிக்காவை ஓர் உலகப் பேரரசாக மாற்றப் பொருளாதார அடியாட்கள் முயன்றுகொண்டிருந்ததைப் பொறுத்துக்கொண்டு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதில் நான் கொண்டிருந்த உறுதி. 

நான் இக்கதையை உலகிற்கு எடுத்துச் சொல்லியதற்காக நான் ஏன் கொல்லப்படவில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இப்புத்தகமே ஒரு விதத்தில் என்னுடைய காப்பீடாக அமைந்துவிட்டது. இதைப் பற்றி விரிவாக இனி வரும் அத்தியாயங்களில் நான் எழுதியுள்ளேன்

இது ஓர் உண்மைக் கதை. இதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வாழ்ந்துள்ளேன். இதில் நான் விவரித்துள்ள காட்சிகள், மக்கள், உரையாடல்கள், உணர்வுகள் ஆகிய அனைத்துமே என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவையாகும். இது என்னுடைய தனிப்பட்ட கதையாக இருந்தாலும், நம்முடைய வரலாற்றைச் செதுக்கியுள்ள, இன்று நாம் இருக்கின்ற நிலைக்கு நம்மை இழுத்து வந்துள்ள, நம்முடைய குழந்தைகளின் வருங்காலத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ள உலக நிகழ்வுகளின் ஊடாக நிகழ்ந்த கதை இது. இந்த அனுபவங்களையும் மக்களையும் உரையாடல்களையும் துல்லியமாகச் சித்தரிக்க என்னால் முடிந்த அளவு நான் முயற்சித்துள்ளேன்.

வரலாற்று நிகழ்வுகளை நான் விவரிக்கின்றபோதும், மற்றவர்களுடனான என்னுடைய உரையாடல்களை நான் மறுஉருவாக்கம் செய்கின்றபோதும், நான் பலவற்றின் உதவியுடன் அவற்றை மேற்கொள்கிறேன்: ஏற்கனவே பிரசுரமாகியுள்ள ஆவணங்கள்; என்னுடைய தனிப்பட்டக் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள்; என்னுடைய மற்றும் பிறருடைய மலரும் நினைவுகளில் உதித்தவை; முன்பு நான் எழுதத் தொடங்கி, பிறகு பாதியில் கைவிட்ட முந்தைய ஐந்து கையெழுத்துப் பிரதிகள்; பிற நூலாசிரியர்களின் வரலாற்றுப் பதிவுகள் – குறிப்பாக, முன்பு ரகசியமாக வைக்கப்பட்டு, காலக்கெடு முடிந்த பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள். சில இடங்களில், நான் ஒருவருடன் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய உரையாடல்களை, இந்நூலின் நடையோட்டத்திற்கு ஏதுவாக ஒரே உரையாடலாக இணைத்து வழங்கியிருக்கிறேன்.

நாங்கள் உண்மையிலேயே எங்களைப் பொருளாதார அடியாட்கள் என்று அழைத்துக்கொண்டோமா என்று என்னுடைய பதிப்பாளர் என்னிடம் கேட்டார். “ஆம், நாங்கள் எங்களை அப்படித்தான் அழைத்துக்கொண்டோம்” என்று நான் அவரிடம் உறுதி கூறினேன். இன்னும் சொல்லப்போனால், 1971இல் நான் வேலையில் சேர்ந்தபோது, என்னுடைய பயிற்றுவிப்பாளராக இருந்த கிளாடின், என்னிடம், “உங்களை ஒரு பொருளாதார அடியாளாக உருவாக்குவதுதான் என்னுடைய வேலை. இதுபற்றி உங்களுடைய மனைவி உட்பட யாரிடமும் நீங்கள் மூச்சுவிடக்கூடாது” என்று கூறிவிட்டு, இன்னும் தீவிரமான ஒரு குரலில், “நீங்கள் இதற்குள் வந்துவிட்டால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நீங்கள் இதற்குள்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

என்னிடமிருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கப்படும் என்பது குறித்து கிளாடின் ஒளிவுமறைவின்றிக் கூறினார். என்னுடைய வேலையை அவர் என்னிடம் இவ்வாறு விவரித்தார்: “அமெரிக்க வர்த்தக நலன்களைத் தூக்கிப் பிடிக்கின்ற, ஒரு பரந்துபட்ட பின்னலமைப்பின் ஒரு பகுதியாக ஆகும்படி உலகத் தலைவர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். இறுதியில் அத்தலைவர்கள், பெரும் கடன் எனும் வலைக்குள், என்றென்றும் மீள முடியாத விதத்தில் மாட்டிக் கொள்வர். அது அவர்களுடைய விசுவாசத்தை உறுதி செய்யும். நாம் விரும்புகின்றபோதெல்லாம், நம்முடைய அரசியல், பொருளாதார, மற்றும் ராணுவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நம்மால் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்குப் பதிலீடாக, அவர்கள் தங்களுடைய மக்களுக்கு, தொழிற்பேட்டைகள், மின் திட்டங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை வழங்கி, நாட்டுத் தலைவர்கள் என்ற முறையில் தங்களுடைய நிலையை அவர்களால் வலுப்படுத்திக்கொள்ள முடியும். இதன் விளைவாக, அமெரிக்கப் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் முதலாளிகள் கொழிப்பர்.”

இதில் நாங்கள் தோல்வியுற்றால், பொருளாதார அடியாட்களாகிய எங்களைவிட அதிக பயங்கரமான அடியாட்களாகிய ‘ஜாக்கல்கள்’ களத்தில் இறக்கிவிடப்படுவர். அவர்களும் தங்களுடைய முயற்சியில் தோல்வியுற்றால், இறுதியில் அந்த வேலை ராணுவத்தின் தலையில் விழும்.


இந்நூலின் முதல் வடிவம் வெளிவந்து கிட்டத்தட்டப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, ஒரு புதிய பதிப்பிற்கான தேவை வந்துவிட்டிருந்ததை நானும் என் பதிப்பாளரும் உணர்ந்தோம். முதற்பதிப்பு என் வாழ்வில் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதையும், என்னை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார அடியாள் அமைப்புமுறையை மாற்றுவதற்கும் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதையும், விஷயங்களை மாற்றுவதற்குத் தங்களால் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள தாங்கள் ஆவலோடு இருந்ததாக, ஆயிரக்கணக்கான வாசகர்கள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக எனக்குத் தெரிவித்தனர். இப்புதிய பதிப்பு அவர்களுடைய கேள்விகளுக்கான என்னுடைய பதிலாகும்.

அதோடு, இப்போது உலகம் முற்றிலும் மாறியிருப்பதால், ஒரு புதிய பதிப்பை வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன். பெருமளவுக்கு, கடன் மற்றும் பயத்தின் அடிப்படையில் அமைந்திருந்த பொருளாதார அடியாள் அமைப்புமுறை, 2004இல் இருந்ததைவிட இப்போது மேலும் வஞ்சகத்தனமானதாக மாறியுள்ளது. பொருளாதார அடியாட்கள் தங்களுடைய பதவிகளை விரிவாக்கியுள்ளதோடு, புதிய கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், புதிய மாறுவேடங்கள் தரிக்கின்றனர். இவற்றுக்கு மொத்த உலகமே பலியாகியுள்ளபோதிலும், அமெரிக்கா அதற்கு ஒரு பெரிய விலையைக் கொடுத்துள்ளது. பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சுற்றுச்சூழல்ரீதியான பேரழிவின் விளிம்பில் நாம் இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். நாம் கண்டிப்பாக மாறியாக வேண்டும்.

எனவே, இக்கதை சொல்லப்பட்டே ஆக வேண்டும். நாம் இப்போது ஒரு பயங்கரமான, நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு மாபெரும் சந்தர்ப்பத்திற்கான காலமாகவும் திகழ்கிறது. இந்தக் குறிப்பிட்டப் பொருளாதார அடியாள் ஒருவனின் கதை, இன்று நாம் இருக்கின்ற இடத்திற்கு நாம் எப்படி வந்து சேர்ந்துள்ளோம் என்பதையும், தீர்க்கப்படவே முடியாது என்பதுபோலத் தோன்றுகின்ற ஒரு நெருக்கடியை நாம் ஏன் எதிர்கொண்டுள்ளோம் என்பதையும் குறித்தக் கதையும்கூட.

நான் ஒரு பொருளாதார அடியாளாக இயங்கிக்கொண்டிருந்தபோது, அது சிறியதொரு குழுவாகவே இருந்து வந்தது. ஆனால், அதைப் போன்ற பாத்திரங்களை வகிக்கின்ற நபர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளனர். இன்று அவர்கள் நயமான பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்; எக்ஸன், வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ், மான்சன்டோ போன்ற ‘ஃபார்ச்சூன் 500’ பெருநிறுவனங்களின் தாழ்வாரங்களில் அவர்கள் உலவிக்கொண்டிருக்கின்றனர். அந்நிறுவனங்கள் தம்முடைய சொந்த நலன்களுக்காகப் பொருளாதார அடியாள் அமைப்புமுறையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஒரு விதத்தில் பார்த்தால், இப்புதிய பதிப்பு, பொருளாதார அடியாட்களின் இப்புதிய அவதாரங்கள் பற்றிய ஒரு கதையும்கூட.

இது உங்களுடைய கதையும்கூட. உங்களுடைய உலகம் மற்றும் என்னுடைய உலகத்தின் கதை இது. இதில் நாம் எல்லோருமே உடந்தைதான். நம்முடைய உலகிற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார அடியாட்களுடன் நாம் ஒத்துழைப்பதாலேயே அவர்கள் தங்களுடைய வேலையில் வெற்றி பெறுகின்றனர். அவர்கள் நம்மை மயக்குகின்றனர், நம்மை முகஸ்துதி செய்து தம் வசப்படுத்துகின்றனர், நம்மை அச்சுறுத்துகின்றனர். ஆனால், அவர்களுடைய செயல்களை நாம் கண்டும் காணாததுபோல நம் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொள்கின்றபோதும், அவர்களுடைய தந்திரங்களுக்குப் பலியாகின்றபோதும் மட்டுமே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

இந்நூலை நீங்கள் படிக்கின்றபோது, நான் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் நான் கற்பனைகூடச் செய்திராத நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கக்கூடும். அந்நிகழ்வுகளையும், வருங்காலத்தில் நிகழவிருக்கின்ற நிகழ்வுகளையும் புரிந்துகொள்ள உங்களுக்கு ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்ற ஒன்றாக நீங்கள் இப்புத்தகத்தைப் பார்க்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதுதான் அது குறித்த தீர்வுக்கான முதற்படி. ஒரு பாவத்தை ஒப்புக்கொள்வது என்பது அதிலிருந்து மீள்வதற்கான தொடக்கமாகும். இந்நூல் நம்முடைய விமோசனத்திற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக அமையட்டும். ஒரு புதிய அர்ப்பணிப்பு நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல இது நம்மை ஊக்குவிக்கட்டும். கௌரவமான, சமூக நீதி கோலோச்சுகின்ற ஒரு சமதர்மச் சமுதாயம் குறித்த நம்முடைய கனவை நனவாக்குவதை நோக்கி இது நம்மை உந்தித் தள்ளட்டும்.

– ஜான் பெர்க்கின்ஸ்
அக்டோபர் 2015