ஞாயிறு, 3 மே, 2020

நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச்சாவடிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


மே 3, வரலாற்றில் இன்று.

 இந்தியாவில் முதல் சினிமா 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியான தினம் இன்று (1913).

இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது?

இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 106 முடிந்து, 107இல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்திய மக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம்.

நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?  அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்டம் என்று அறிவியலின் உச்ச சுகங்களைக் கண்டுகொண்டிருக்கும் நாம், அனைத்தையும் மறந்து, 1913ல் மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்போம்.

திரையில் காணும் முதல் திரைப்படம் என்ற அனுபவமே அலாதியான ஓர் ஆச்சரியம் தான் அவர்களுக்கு. நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களை திரையில் காணும்போது, ஓடிவரும் காட்சியில், திரையைக் கிழித்து நம் மேல்வந்து விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சியிருப்பார்கள். படத்தில் நெருப்பு சார்ந்த காட்சிகள் இருந்திருந்தால், அச்சத்தோடும், அதிர்ச்சியோடும் கண்டு களித்திருப்பார்கள். வீடியோவிற்கு என தனி ரீல் பெட்டிகள், ஒலிக்கு தனியாக ஆம்ப்ளிஃபயர் என்று அனைத்துமே வித்தியாசமாகத்தானே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறை காணாத, சினிமாவின் அறிமுகநிலை அது.

இந்த சினிமா வரலாற்றுக்கு அடிகோலாக, சினிமா மேல் ஆர்வத்தையும், சினிமாவிற்கு கலைஞர்களை ஈர்க்க ஆதாரமே இந்த ராஜா ஹரிச்சந்திரா தான். இந்தியாவின் முதல் முழுநீள மெளனப்படம் (Silent Film). 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் மராத்திய மண்ணில் தயாரானது. இப்படத்தை இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகிப் பால்கே எழுதி, இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் பண்பாடு சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், மக்களின் மனநிலைக்கு ஏற்ற படங்களாகவே உருவானது. அதாவது புராணங்கள், இதிகாசங்களைச் சார்ந்த நாடக பாணியிலான படங்களே உருவானது. நாடகங்களின் தாக்கங்கள் நிறைந்திருந்த காலகட்டத்தில் வெளியான ராஜா ஹரிச்சந்திரா படமும், புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைக்கருவே.

நீதிநேர்மை தவறாத மன்னராக ராஜா ஹரிச்சந்திரா, தன்னுடைய ராஜ்யத்தை துறந்து, தன் மனைவி, மகனுடன் சென்று முனிவர் விஸ்வாமித்ரருக்கு இனி ராஜ்யம் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்துகொடுப்பது போன்றதொரு கதைக்களமே திரைப்படம். இந்தப் படத்தை எடுத்துமுடிக்க 7 மாதங்களும், 21 நாட்களும் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி படத்திற்கான டைட்டில் ஆங்கிலம், மராத்தி மற்றும் ஹிந்தியில் போடப்பட்டிருக்கிறது.  மராத்தியின் பிரபல நாடகநடிகரான தத்தாத்ரேயா தமோதர், ராஜா ஹரிச்சந்திர மன்னராக நடிக்க, ராணியாக நடித்தவரும் ஓர் ஆண் கலைஞரே. அந்த நேரத்தில் பால்கேவிற்கு பெண் நடிகர் கிடைப்பதில் சிக்கல் இருந்த சமயம். அதையும் தாண்டி படத்தை சவால்களுக்கு மத்தியில் எடுத்துமுடித்தார் பால்கே.

இந்தப் படத்தை முதன்முறையாக பாம்பே  Coronation Cinema என்ற இடத்தில் திரையிடப்பட்டது. அந்தசமயம் மக்கள் கூட்டம் அரங்கத்தையும்  தாண்டி வீதிவரைக்கும் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,  பட அச்சுகள் தயாரிக்கப்பட்டு கிராமப் பகுதிகளுக்கும் திரையிட்டுக் காட்டினார் இயக்குநரான பால்கே.

ராஜா ஹரிச்சந்திரா படத்தின் வெற்றி பால்கேவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. பல படங்களை இயக்கவும், தயாரிக்கவும் இப்படம் வழிகாட்டியாக அமைந்தது.

பால்கேவிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமா இந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சமாக, உலக சினிமா தரத்திற்குச் செல்ல, இப்படமே ஆதாரம்.
மே 3, வரலாற்றில் இன்று.

அழகியலையும் அறிவியலையும் குழைத்து தந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று.

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்.

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935ஆம் ஆண்டு.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!

* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.
மே 3, வரலாற்றில் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை துவக்கப்பட்ட தினம் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை முதன் முதலாக 1941ஆம் ஆண்டு மே 3 அன்று தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அரை மணிநேரம் தமிழில் தென்இந்தியா மற்றும் இலங்கைக்கு உலகச் செய்திகள் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்கிறது.
மே 3, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான ஜாகிர் உசேன் (Zakir Husain) நினைவு தினம் இன்று.

# ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் (1897) பிறந்தார். இவரது ஆரம் பக் கல்விக்குப் பிறகு, குடும்பம் உத்தரப் பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தது. தந்தை பிரபல வழக்கறிஞர். 10 வயதில் தந்தையும் அடுத்த 4 ஆண்டுகளில் தாயும் இறந்தனர்.

# சுய முயற்சியால் படித்தவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கு படித்த போது, காந்தியடிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவரது ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது.

# தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அலிகாரில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1920-ல் டெல்லிக்கு மாற்றப் பட்டது. ஜமியா மில்லியா இஸ்லாமியா எனப் பெயர் மாற்றப்பட்டது.

# ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1927-ல் நாடு திரும்பியவர், மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சீரிய தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணி புரிந்தார்.

# சுதந்தரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை சோதனை முறையில் இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

# இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராகத் திகழ்ந்தார். ஆதாரக் கல்வி முறை, கல்வி வளர்ச்சி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் ‘ரிபப்ளிக்’ நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

# இவர் ஜமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் தூய்மையாக கல்லூரிக்கு வருவதை வலியுறுத்தினார். ஆனாலும், மாணவர்கள் அழுக்கு ஷுவுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், கல்லூரி வாசலில் பிரஷ், பாலிஷுடன் நின்றுகொண்டார். அழுக்கு ஷுவுடன் வந்த மாணவர்களிடம், ‘காலைக் காட்டு. நான் பாலிஷ் போடுகிறேன்’ என்றார். வெட்கம் அடைந்த மாணவர்கள் இனி அழுக்கு ஷுக்களுடன் வருவதில்லை என உறுதியேற்றனர்.

# காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்துக்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

# 1956-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பிஹார் ஆளுநராகப் பதவியேற்றார். 1962-ல் குடியரசு துணைத் தலைவராகவும், 1967-ல் 3-வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்’ என்று கூறியவர்.

# கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 1954-ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கெய்ரோ பல்கலைக்கழகங்கள் இலக்கிய மேதை பட்டம் வழங்கின. 1963-ல் பாரத ரத்னா விருது பெற்றார். நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் 72-வது வயதில் (1969) மறைந்தார்.
மே 3, வரலாற்றில் இன்று.

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், தற்காலச் சமூகத்தின் நிலை, அறிவியல், அரசின் செயல்பாடு, கலாச்சாரம், வியாபாரம், விளையாட்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்தமாகவும் உண்மையான நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை பொறுப்புணர்வுடன் வெளியிடவும், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமைக்கான பத்திரிக்கை சுதந்திரத்தினை காப்பதற்கும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1986-ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப்பற்றி எழுதியதற்காக கொலை செய்யப்பட்டார். இதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும்விதமாக மே-3 ஆம் நாளினை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது.

 இந்நாளில் யுனெஸ்கோ அமைப்பு உலகில் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளருக்கான விருதினை வழங்கி கௌரவிக்கிறது.