செவ்வாய், 17 மார்ச், 2020

சமற்கிருத மொழிச் சட்டம், ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்_ மாநிலங்களவையில் வைகோ எம்.பி

சமற்கிருத மொழிச் சட்டம்,
ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்

மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை

3 புதிய சமற்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்டமுன்வரைவின் மீது, 16.03.2020 அன்று, மாநிலங்கள் அவையில் வைகோ முன்வைத்த கருத்துகள்

அவைத் துணைத்தலைவர் அவர்களே,

இந்தி எதிர்ப்புக் களத்தில் கூர் தீட்டப்பட்டவன் என்ற முறையில், சமற்கிருத மொழிச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

இது, பெருங்கேடு விளைவிக்கின்ற அழிவுச் சட்டம் என்றே கூறலாம். நாடு முழுமையும் சமற்கிருதமயம் ஆக்கி, வேறு எந்த மொழிக்கும் இங்கே இடம் எல்லை என ஆக்க முனைகின்ற  முயற்சி, இந்தியாவைத் துண்டுதுண்டாக ஆக்கி விடும்.

இந்தப் பல்கலைக்கழகங்கள், தேர்வுகள் நடத்துவது, தர மதிப்பு மற்றும் ஏனைய வழிகளில் பட்டயச் சான்றிதழ்கள் தரலாம்; பட்டங்கள் வழங்கலாம்; கல்வி தொடர்பான ஏனைய சான்றிதழ்களைத் தரலாம்.

அந்த ஏனைய வழிமுறைகள் என்ன? அதுதான் குருகுலக் கல்வி.

2019 ஏப்ரல் மாதம், உஜ்ஜைன் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமையும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், குருகுலக் கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே, அந்தத் தீர்மானத்தின் கருத்து.

இதற்காக, எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கின்றார்கள்? அதைக் கேட்டால், நடுநிலையான இந்த அவையின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.

அதாவது, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த அரசு ஒதுக்கி இருக்கின்ற ஒட்டுமொத்தத் தொகையை விட 22 மடங்கு கூடுதல் பணத்தை, சமற்கிருதம் என்ற ஒரே மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கி இருக்கின்றார்கள்.

இந்த அவையில் இருக்கின்ற, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி மற்றும் ஏனைய மொழிகளைப் பேசுவோர், இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சமற்கிருதமும், இந்தியும், தென்னிந்திய மொழிகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்.

கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்; எனக்கு சமற்கிருத மொழியை எழுத, பேச, படிக்கத் தெரியும் என ஒரு சான்றிதழை, ஒரு மாணவன் கொடுத்தால் போதும்; அந்த மாணவன் பத்து அல்லது 12 ஆம் வகுப்பில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். அவர்கள், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவிஇயல் என வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியது இல்லை. நம்ப முடிகின்றதா?

சமற்கிருத மொழியை வளர்ப்பதற்காக, 643.24 கோடி செலவில் தேசிய சமற்கிருதக் கல்லூரியைத் (Rashtriya Sanskrit Sansthan) தொடங்கினார்கள். ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கியது வெறும் 4 கோடி 65 இலட்சம்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய ஒட்டுமொத்தத் தொகை வெறும் 21 கோடிதான்.

சமற்கிருத மொழியைப் பரப்புவதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, 2015 ஆம் ஆண்டு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியைத் தலைவராகக் கொண்டு, 13 பேர் கொண்ட ஒரு குழுவை அறிவித்தார்.

அந்தக் குழு, 2016 பிப்ரவரி 17 ஆம் நாள், தங்களுடைய ஆய்வு அறிக்கையை வழங்கியது.

சமற்கிருத மொழியை வளர்ப்பதற்கான தொலைநோக்குத் திட்ட வரைவு (Vision, Road Map for development of Sanskrit) என்பது அதன் தலைப்பு.

நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன். உங்களுடைய குரு மனு, சாதிகளை அறிமுகப்படுத்தி, மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினையை ஏற்படுத்தியவர். எங்களுடைய ஆசான் திருவள்ளுவர். ஈடு இணை அற்ற ஒரு பொதுமறையை இந்த உலகத்திற்குத் தந்தவர். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர்.

உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். அதுவே, அனைத்து மொழிகளுக்கும் தாய்.

இந்தச் சட்ட முன்வரைவு, இந்த அவையால் ஏற்கப்பட்டுச் சட்டம் ஆனால், அது இந்திய ஒற்றுமையை உடைத்துத் துண்டுதுண்டாக்கி விடும்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கின்றேன். எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றேன்.

அனைத்து மாநில அரசுகளும், இந்தச் சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.03.2020

தாய்மொழிப்போராளி முஜிபூர்ரஹ்மான் இந்து தமிழ் திசை நாளிதழ் தலையங்கம்

மொழிக்கான போராட்டங்கள் தொடர்கின்றது!
மதம் கடந்து,
எல்லைக் கடத்து,
இனம் கடந்து மொழிக்கான போராட்டங்கள் வெல்லட்டும்!

தாய்மொழிப்போராளி!
முஜிபூர்ரஹ்மான்
நன்றி:இந்து தமிழ் திசை/17.03.2020.
---------------------------------
“எனது அன்பான சகோதரர்களே, கனத்த இதயத்துடன் இன்று உங்கள் முன் வந்துள்ளேன்.” 1971 மார்ச் 7 அன்று வங்கத் தலைநகர் டாக்காவில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றிய உரையின் ஒவ்வொரு வரியிலும் தாங்கொணா வலி நிறைந்திருக்கிறது. 20 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் முஜிபுர், “மன வருத்தத்துடன் நமது 23 ஆண்டு காலச் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது வங்க மக்கள் ரத்தம் சிந்தினார்கள் என்பதன்றி வேறு எதுவும் தெரியவில்லை. அப்பாவிகளின் ரத்தம், கண்ணீர். இதுவே நமது வரலாறு!”

டாக்கா, சிட்டகாங், குல்னா, ரங்க்பூர், ராஜ்சஹி தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. கொடூரத் தாக்குதலில் அப்பாவிகள் கொத்துக் கொத்தாக மாய்ந்துபோயினர். “அமைதியான முறையில் ஹர்த்தால் நடத்த அழைப்புவிடுத்தேன். மக்களும் தெருவுக்கு வந்தனர். பதிலுக்கு என்ன கிடைத்தது? கையில் ஆயுதம் இல்லாத மக்கள் மீது ஆயுதங்களைத் திருப்பினார்கள். இவை எங்கள் மக்களின் பணத்தில் வெளி எதிரியிடமிருந்து எங்களைக் காப்பதற்காக வாங்கப்பட்டவை. ஆனால், இன்று எம் சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுகிறது” என்றார். விடுதலைக்காக, உரிமைகளுக்காகப் பொறுப்பான தலைவனின் அறைகூவலாக ஒலித்தது முஜிபுரின் குரல். வங்க விடுதலைப் போர் தொடங்கியது.

1947-ல் நமக்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திரம் பெற்றபோதும் 1970 டிசம்பரில்தான் பாகிஸ்தானில் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தம் 300 இடங்கள். இதில், கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த அவாமி லீக் கட்சி, 160 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றது. அதன் தலைவர் முஜிபுர் ரஹ்மான். அவர்தான் பிரதமராகப் பொறுப் பேற்றிருக்க வேண்டும். ஆனால், மேற்கு பாகிஸ்தானியத் தலைவர்களும் மக்களும் இதற்கு உடன்படவில்லை. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவிக்கு வரத் துடித்தார் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜுல்பிகர் அலி புட்டோ. கிழக்குப் பகுதியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வங்க மக்கள் போராட்டத்தில் குதித்தனர். உலகில் முதன்முறையாக, மொழி அடிப்படையில் ஒரு தேசம் உருவாகும் களம் ஏற்பட்டது.

ஏனெனில், அது ஒரு வரலாற்றுத் தருணம். மதங்களால் மட்டுமே நாடுகளை ஒருங்கிணைத்துவிட முடிவதில்லை. மொழி அடையாளம் அதனிலும் தீவிரமானது. பாகிஸ்தான் பிறந்தபோதே வங்க மொழியின் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளி உருதுவை ஒற்றை ஆட்சிமொழியாக ஏற்றது.
கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம் வங்காளிகளால் நிறைந்தது. இது ஆறாத ரணமாக அவர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. மேலும், சுதந்திரத்துக்குப் பின்னர் 20 ஆண்டுகளாகவும் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கமே பாகிஸ்தான் அரசியலில் கோலோச்சியது; குறிப்பாக, சிந்து மாகாணத்தினர். இந்தக் கோபத்தின் உச்சமாகவே மக்களின் போராட்டம் வெடித்தது. இந்தக் கோபத்தின் உச்சமாகவே முஜிபுர் ரஹ்மானுக்கு உருவாக்கப்பட்ட நெருக்கடி அமைந்தது. விளைவாக, வங்கதேச விடுதலைப் போராட்டம் வெடித்தது.வங்க மக்களின் கோபம் ‘முக்தி பாகினி இயக்கம்’ வழியாக அவர்களுடைய விடுதலையை நோக்கி செலுத்தியது.

வங்கப் போராட்டத்தின் நெருக்கடியானது இந்தியாவையும் வலுக்கட்டாயமாக அதனுள்ளே இழுத்தது. வங்கதேசத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியது இந்தியா. இந்திரா காந்தி, முக்தி பாகினி, முஜிபுர் ரஹ்மான் கூட்டணி பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. சுதந்திரமான இறையாண்மை கொண்ட தனி நாடாக உருவானது வங்கதேசம். பிரதமராகப் பொறுப்பேற்றார் முஜிபுர்.

மதப் பிரிவினை அரசியலை ஏற்க மறுத்தார் முஜிபுர். தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோஷலிஸம் ஆகிய கொள்கைகளை முன்வைத்தார். இராக்கில் சதாம் ஹுசைன், பாகிஸ்தானில் ஜெனரல் முஷரஃப், சவுதியின் சல்மான் ஆகியோருக்கு முன்பாக மத அடிப்படைவாதத்தை நிராகரித்து, முற்போக்கு அதிபராகச் செயல்பட்டவர் முஜிபுர். ‘தீஸ்டா’ நதிநீர்ப் பங்கீடு, வங்கதேச அகதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிரந்தரமாக ஒரு சகோதர உணர்வு நிலவுவதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

வங்க மொழியின் உரிமைக்காகப் போராட்டம் நடத்திய பிப்ரவரி 21-ம் தேதியை ஆண்டுதோறும் வங்கதேசத்தில் நினைவுகூர்கிறார்கள். வங்கதேசம் முன்னெடுத்ததாலேயே அன்றைய தினம் சர்வதேசத் தாய்மொழிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எல்லா மொழிகளுக்குமான தனித்துவம், மொழிகளுக்கு இடையேயான சமத்துவம், அந்தந்த மொழிகளுக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை முஜிபுரின் வழியாக உலகுக்கு உணர்த்துகிறது.

ஆரம்பக்கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?_ மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

"கல்வி காவிமயமாகிறது;தனியார் மயமாகிறது;
வணிகமயமாகிறது;
கல்வியில் இருள் சூழ்கிறது "
எனும் கருத்தும்,
விமர்சனமும் நாடெங்கும் பரவலாக முன்வைக்கப்பட்டடு வரும் நாள்களில் இக்கேள்வியும்- இப்பதிலும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
********************
ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?! என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக கெளஷலேந்திர குமார் எம்.பி.,

 ''ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஆரம்பக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது. இதுதொடர்பான திட்டம் ஏதாவது மத்திய அரசுக்கு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.


இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

அவர் கூறும்போது,
 ''நிதி ஆயோக்கின் ஆலோசனைப்படி ஆரம்பக் கல்வியைத் தனியார் மயமாக்கும்
திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை''
என்று தெரிவித்தார்.

EMIS இணையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள்:17.03.2020



தமிழக அரசு உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கப்படும் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் நாள்:17.03.2020