வெள்ளி, 1 மே, 2020

தேர்வுக்கு_அவசரம்_என்ன? பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக யோசிக்கலாம் #தமிழ் இந்து தலையங்கம்

தமிழ் இந்து தலையங்கம்

மே 1, 2020.

#தேர்வுக்கு_அவசரம்_என்ன?

#பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக #யோசிக்கலாம்

ஊரடங்கு முடிந்தவுடன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அன்றாட ஒழுங்கு குலைக்கப்பட்ட இந்நாட்களில், ஒரு பொதுத் தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்?

 கரோனா ஊரடங்குக்குப் பிந்தைய மீட்சி நாட்களில் கடைசி வரிசையில் சிந்திக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகள் இயக்கத்தை முன்கூட்டி நடத்த அரசு முற்படுவதே வினோதமாக இருக்கிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஒரு கோடி. தமிழக மக்கள்தொகையில் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கினரான மாணவர்களைக் கல்வி நிலையங்களை நோக்கி நகர்த்தும் எந்த நடவடிக்கையும் ஒட்டுமொத்த இயக்கத்திலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடும். ஏனெனில், ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டிய அவர்களுடைய புறப்பாடு, வீடுகளின் சமையலறைகளிலிருந்து சாலைகள் வரை பரபரப்பை உண்டாக்குவதோடு, நெரிசலையும் உண்டாக்கும். நெரிசல் மிக்க நம்முடைய கல்வி நிலையங்களில் இதுவரையில் அரசு வலியுறுத்திவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கடும் சவாலாக இருக்கும், ஒழுங்கை அது குலைக்கும். கரோனாவின் இலக்குக்கு ஆளாவதில் இளம்வயதினர் பின்வரிசையில் இருக்கலாம். ஆனால், அவர்கள் கிருமி கடத்துநர்களாகிவிடும் பெரும் அபாயம் இருப்பதை அரசு புறந்தள்ளக் கூடாது. இத்தகு நிலையில், குறைந்தது ஜூன் 17 வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்ற ஒடிஷா அரசின் முடிவு தெளிவானதாகத் தெரிகிறது.

அப்படியென்றால், தேர்வுகளை என்ன செய்வது? பள்ளி இறுதித் தேர்வுதான் முக்கியமானது. அதை ஏற்கெனவே தமிழகம் நடத்தி முடித்துவிட்டது. பதினோராம் வகுப்பைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு தேர்வு மிச்சம் இருக்கிறது; அதைப் பன்னிரண்டாம் வகுப்பின் காலாண்டுத் தருணத்தில் சேர்த்துக்கூட நடத்திக்கொள்ளலாம். பத்தாம் வகுப்புத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டில் 95% மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு. இந்த வருடம் தேர்வையே ரத்துசெய்துவிட்டு, 100% தேர்ச்சி அளிப்பதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள். அரசு விரும்பாவிடில், இன்னும் இரு மாதங்கள் கழித்துக்கூடத் தேர்வை நடத்தட்டும். எப்படியும் அடுத்த இரு மாதங்களில் தேர்வு நடத்துவதை யோசிப்பது தேர்வுக்கான மனநிலையின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளுவது; அதை அரசு செய்யக் கூடாது. இப்போதைக்கு இணைய வழிக் கல்வியை அரசு தொடரட்டும். அதற்கு வாய்ப்பற்றோருக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிடும் திட்டங்களை யோசிக்கட்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. மே-17 ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு‍ Press Release statement








இடம் விட்டு இடம் நகருவதற்கு அனுமதி சீட்டுபெறுதல் சார்ந்தது உள்ளிட்ட பல்வேறுபுதிய வழிகாட்டும் நெறிமுறைகள்வெளியீடு!தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அனைத்து அரசு செயலாளர் மற் றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம்









மே விழா! அதை எங்ஙனம் மறக்க முடியும்? -பேரறிஞர் அண்ணா


ஆசிரியர்களுக்கு மே தின வாழ்த்துகள்

மே தினம் - தந்தை பெரியார்


மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாள் உலகமெங்கும் உழைப்பவர்-களால் பெருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் (விவசாயி) அடங்கிய மக்கள் 8-மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8-மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்திய படியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித்திட்டம் ஏற்பட்டது முதல், 8-மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10-மணி நேரம் 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊன் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்புறங்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்-கள். தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறுகுழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயிற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலியிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8-மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின்-கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால், யாரால் பொறுக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் அய்ந்து மாத காலமாகப் பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள், தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத்-தொழிலாளிகள், பதினாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம்

புரட்சிக்குப்பின் பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தி கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம்மே தினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்தாலும் மனம் பொறாத தொழி லாளர்கள் சார்ட்டி என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்தியதை ஞாபகப்படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீனநாட்டில் சன்யாட்சன் என்ற பெரியார் தாபித்த தேசியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலையிலிருந்து நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டுப் பேரை, பத்து வருஷம் சிறைவாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக் கணக்கானோர் கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாகக் கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த காலம் முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக இல்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைபோல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால் தான், சுகப் பேற்றை அடைய முடிகிறது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார், லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிட் அனைவரும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து, தங்கள் தத்துவத்தைக் கட்டவேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், சகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம சமத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கும் படியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்கு மல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும் இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்தச் சந்ததியார் உலக சுக பேற்றைப்பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்திவரக் கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமைச் சுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போதும்! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண் மடங்கு அதிகரிக்கின்றன. இத்தியாதி வியர்த்தங் களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனி-வரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசு-களின் ஆணவத்தாலும் அகம்பாவத்-தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!!

சு.ம. வீரர்களே! சமதர்மிகளே! தொழிலாளர்-களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமுகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர் சம தர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும்,
வேறு சாதகங்கள் பெறவும், இம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

புரட்சி - தலையங்கம் 29.04.1934
மற்றும்
குடிஅரசு - அறிக்கை - 28.04.1935