ஞாயிறு, 16 ஜூன், 2019

தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

விகடன் செய்திகள்

 தமிழ்நாடு
1 1 வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/06/2019) கடைசி தொடர்பு:06:30 (14/06/2019)

*`தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்!*



நீட் தேர்வைப் போலவே புதிய கல்விக் கொள்கையையும் தமிழகத்தில் திணிப்பதற்கு பா.ஜ.க அரசு முயல்வதாகவும், தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய கல்விகொள்கையை கடுமையாக விமர்சித்தார். அதில், "தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படாததால், அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா, திருப்பூர் வில்லியங்காட்டைச் சேர்ந்த ரித்தூஸ்ரீ உள்ளிட்ட பலர் மடிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், தமிழக அரசோ மத்திய அரசோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு, சர்வாதிகாரமாக நீட் தேர்வை நடத்திக்கொண்டிருக்கிறது. சுயநலம் கருதி தமிழக அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வைப் போல, தற்போது மத்திய அரசுக் கல்வியை காவி மயமாக்கும் நோக்கோடு, அவசர அவசரமாக புதிய கல்விக்கொள்கையை  அமலாக்குவதற்குத் துடிக்கிறது. இதனால், மாநில மொழிகள் சிதையும். அந்த மொழிகளுக்குரிய கலாசாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும்.


தமிழகக் கல்வி அமைச்சர், நம் மாநில உரிமையை வழக்கம் போல் சுய நலம் கருதி விட்டுக்கொடுத்துவிட்டு, 'பெரும்பாலான மாநில கருத்தை நாங்களும் ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது' எனக் கூறிவிடாமல், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வாதிட்டு வெற்றிபெற முயல வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அந்த கல்விக்கொள்கையை ஏற்கக் கூடாது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பாடப் புத்தகங்களின் அட்டையிலேயே காவி நிறத்தைப் பட்டையாகத் தீட்டி, அதன் நடுவே எந்த வகுப்பு பாடப்புத்தகம் என்று எழுதியிருப்பதும், பாரதியார்  உருவில் காவி நிற முண்டாசை அமைத்திருப்பதும், தமிழக அரசு பா.ஜ.க-வாக மாறிவிட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதிலிருந்து, பா.ஜ.க-வின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.