திங்கள், 19 மார்ச், 2018

தஞ்சாவூர் மாவட்ட உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை ஏப்ரல்-18...

பள்ளி மேம்பாட்டுத் திட்டம்...

அய்யன் திருவள்ளுவரின் குறள்கள் ஆங்கிலத்திலும்,தமிழிலும்...

இதயம் காக்கும் உணவுகள்...


அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும் பழக்கம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.

* அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்ணக் கூடாது.

* கீரை வகைகளை ஒதுக்கினால் இதயத்தின் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அனைத்து வகையான கீரைகளிலும் அடர் பச்சை நிற இலைகளை கொண்ட காய்கறிகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதய நலனுக்கு அவசியமானது.

* பார்ப்பதற்கு அழகாகவும், ஆடம்பரமாகவும் தெரிகிறது என்பதற்காக எண்ணெய் ஒட்டாத சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது இதய நோய்க்கு வழி வகுத்துவிடும். அந்த பாத்திரங்களில் உள்ள டெப்லான் பூச்சு மற்றும் செயற்கை வண்ணங்கள் சமைக்கும் போது உணவுடன் கலந்து நரம்பு செல்களை பாதிப்படையச் செய்துவிடும்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்திற்கு கெடுதலை உண்டாக்கும். இது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

* உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் கடுமையான மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.

* பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதில் சோடியம் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகளவில் கலந்திருக்கும். இத்தகைய இறைச்சியை உண்பது இதய நோய், புற்று நோய் ஏற்பட வழிவகுத்துவிடும்.

* எண்ணெய்யில் வெகுநேரம் பொரிக்கப்பட்ட உணவுகளை உண்பது உடலில் கெட்டக் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிவிடும். அது நல்ல கொழுப்பினையும் அழித்துவிடும்.

* பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட சூடான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். டப்பாக்களின் உள் புறம் பூசப்பட்டிருக்கும் பிஸ்பெனோல்-ஏ என்னும் ரசாயனம் உணவுடன் கலந்து இதயம் சார்ந்த நோய்களுக்கும், புற்று நோய்க்கும் வழிவகுக்கும்.

புதிய அப்டேட்களுடன் Whatsapp...


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது. 

அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது. 

இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.

உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்~ மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…


உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:

மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும். 

உங்களிடமே போட்டி போடுங்கள்: மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.

மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும் சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர்  பேசினார்.

பாட புத்தகம் தயாரிப்பு~ 28க்குள் முடிக்க கெடு…


புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை~ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று  தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் செயற்கைகோள் உதவியுடன் பாடம்~இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி…

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு~தொடக்கக்கல்வி இயக்குனர்...


புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.

 ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.