வியாழன், 16 நவம்பர், 2017

மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:

மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

1.ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை,

2. புதிய மொபைல் ஆப் முறை,

3.ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை,

ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. 

செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி- பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்- உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது!


தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது. 

  இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.

அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.

காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.

பள்ளி கல்வி -11 மற்றும் 12 ம் வகுப்பு-பொதுத்தேர்வு 2017-2018 , 100 விழுக்காடு தேர்ச்சி- கற்றல் கற்பித்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளுதல்- தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்--சார்பு