புதன், 26 ஜூன், 2019

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - தூய்மை பாரத இயக்கம் (Swachh Bharath Mission) - பள்ளிகளில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் சுவற்றில் எழுதுதல் - நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பு...

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தொடர் போராட்டம்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நிதிய இரண்டாமாண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா, மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஒன்றிய தலைவர் வே. கந்தன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் இரா.சுரேஷ், துரை, மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜெக.மணிவாசகம் வரவேற்றார். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.நாகராஜன், சோம.அண்ணா ஆகியோர் பாராட்டுரை ஆற்றினர். இதில், சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் பங்கேற்று பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிடுகிறார். கோடை வெயில் காரணமாக, ஒருவாரம் கழித்து பள்ளிகளைத் திறக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம். ஆனால், உடனடியாக பள்ளிகளைத் திறந்தார்கள். இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. 
பணி ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம், ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மும்மொழிக் கொள்கை என்பது இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் நடவடிக்கையாகும். இதை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.