புதன், 15 ஜனவரி, 2020

ஜனவரி 15, வரலாற்றில் இன்று.

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று.

# அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார்.

# கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் புரொமோஷன் பெற்று, விரைவில் கல்லூரியில் சேரும் தகுதிபெற்றார். சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

# 25ஆவது வயதில் அலபாமாவில் பாதிரியாராகப் பணிபுரியத் தொடங்கினார். 1955இல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

# தேசிய கறுப்பரின முன்னேற்ற கூட்டமைப்பின் தலைமைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். அமெரிக்க கறுப்பரினத்தவரின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தினார் பேருந்துகளில் அனைவரும் சமமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்.

# 382 நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. போராட்ட சமயத்தில் கிங் கைது செய்யப்பட்டார், இவரது வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, இறுதியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1956இல் பேருந்துகளில் இனப்பிரிவினை நடைபெறுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது

# அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவை அமைத்தார். காந்தியடிகளின் அறப்போராட்ட வழிமுறைகளால் ஈர்க்கப்பட்டார். இவற்றை விரிவாக அறிந்து கொள்வதற்காக தன் குழுவினருடன் 1959இல் இந்தியா வந்தார்.

# இவரது போராட்டக் கொள்கைகளில் கிறிஸ்துவின் போதனைகளும் செயல்பாட்டு யுத்திகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளும் பிரதிபலித்தன. 1957 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இவர் 60லட்சம் மைல் தூரம் பயணம் மேற்கொண்டு உரிமைக் குரல் எழுப்பினார்.

# 2,500 கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதி நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் இவர் சென்று அவர்களுக்காகப் போராடினார்.

# வாஷிங்டன் டி.சி.யில் இவர் தலைமையேற்று நடத்திய பிரம்மாண்டமான அமைதிப் பேரணியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு இவர் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உலகப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார். இவர் நடத்திய போராட்டங்களின் பலனாக, பொது இடங்கள், அமைப்புகளில் கறுப்பரின மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதை தடைசெய்யும் சிவில் ரைட்ஸ் ஆக்ட் 1964ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

# 1964ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.அப்போது இவருக்கு 35 வயதுதான். இனவெறிக்கு எதிராகப் போராடிய உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், இனவெறிகொண்ட ஒரு வெள்ளையனால் 1968 ஏப்ரல் 4ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

ஜான் பென்னி குயிக் பிறந்த தினம் இன்று(1841).

முல்லைப்பெரியாறு அணை கட்டிய இவரை, அப்பகுதி மக்கள் கடவுளாக தங்கள் குலதெய்வமாக பார்க்கிறார்கள்.

 நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் இவர் வாழ்கிறார்.

உலகிலேயே இவர் மட்டும் தான் விவசாயிகளின் வாழ்வில் மண் அள்ளி போட்டு சோறு அள்ளி சாப்பிட வைத்தவர்.
ஆம்... அந்த மண் அணை கட்ட அள்ளிப் போடப்பட்ட மண்.

 அரசாங்க நிதி உதவியை நிறுத்திய போதும் அசராமல்,
தன் மனைவியின் நகைகளை விற்று இவர் கட்டிய அணையால் தான் இன்று பல விவசாயிகளின் மனைவிகள் கழுத்தில் நகைகள் மின்னுகின்றன.

இன்றும் தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைப்பவர்கள் ஏராளம்.
அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்..
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட தினம் இன்று (2001).

விக்கிப்பீடியா,
 ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால்  ஜனவரி15, 2001இல் தொடங்கப்பட்டது.

 சாங்கர் , விக்கிப்பீடியா என்ற சொல்லை,விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.) மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார்.
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

இந்திய ராணுவ தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது .

 இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,
 இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே . எம் . கரியப்பா (K.M. Cariappa) 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிதான் பதவி ஏற்றார்.

அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள் .

கரியப்பா ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார் . மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார் . ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு ஏகாதிபத்திய இந்திய ராணுவத்தை,
 தேசிய இந்திய ராணுவமாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டார் .

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....