வியாழன், 16 ஜனவரி, 2020

ஜனவரி 16,
வரலாற்றில் இன்று.


 எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாவின் நினைவு தினம் இன்று.


 1876ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்த இவர் வங்க மொழியின் முக்கியமான எழுத்தாளர் ஆவார். பொருளாதார சூழல் ஒத்துழைக்காததால் இவர் பத்தாம் வகுப்புக்குமேல் முறையான கல்வியைப் பெறமுடியவில்லை. பர்மாவில் இவர் பொதுப்பணித்
துறையின் நிதிப்பிரிவில் பணியாற்றிவந்தார். 1916ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தன்னை முழுவதுமாக அரசியலிலும் இலக்கியத்திலும் ஈடுபடுத்திக்கொண்டார்.

1921ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டுவரை இவர் ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார். இவரது இலக்கிய சேவைகளைப் பாராட்டி, டாக்கா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 காதல் தோல்வியைப் பற்றி பேசும் புகழ்பெற்ற தேவதாஸ் நாவல் இவரால் எழுதப்பட்டதுதான்.

 1938ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜனவரி 16 ) புற்றுநோயால் சரத் சந்திர சட்டோபாத்யாய் சட்டர்ஜி காலமானார்.
ஜனவரி 16,  வரலாற்றில் இன்று.

 1761ஆம் ஆண்டு இதே நாளில் தான் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்.

பிரஞ்சு அரசாங்கம் நிர்வாக வசதிக்காக மிகச்சிறிய ராணுவத்தையே பாண்டிச்சேரியில் நிறுத்தியிருந்தது. நான்கு பக்கமும் சுற்றிலுமிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய ஆங்கிலேய படைகள் பிரஞ்சு படையை விரட்டியடித்து பாண்டிச்சேரியை தனது அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது.

 எனினும் 1763 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் பாரிஸ் நகரில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையை தொடர்ந்து ஆங்கிலேய படைகள் 1763 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை விட்டு விலகின. அது மீண்டும் பிரான்சின் ஆதிக்கத்துக்குள் வந்தது.
ஜனவரி 16, வரலாற்றில் இன்று.

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) பிறந்த தினம் இன்று(1908).

 ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே  ஹைட்ரஜன் குண்டின்  தந்தை என்று அறியப்படுகிறார். இவர் அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் (1908) கற்றறிந்த யூதக் குடும்பத்தில் பிறந்தவர்.

 3 வயதுக்கு பிறகுதான் பேச்சு வந்தது. பள்ளியில் படித்தபோது கணிதத்தில் தலைசிறந்து விளங்கி னார். நாட்டின் அரசியல் குழப்பங்களால் இவரது படிப்பு அடிக்கடி தடைபட்டது.

பள்ளிப் படிப்பை முடித்து 1926-ல் ஜெர்மனி சென்றார். அங்கு கார்ல்ஸ்ரூ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி யில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார். மூனிச் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து விழுந்ததால் வலது கால் துண்டிக்கப் பட்டது. அதன் பிறகு, செயற்கைக் கால் பொருத்திக் கொண்டார்.

லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், குவான்டம் கோட்பாடு, மூலக்கூறு விஞ்ஞானம், வானியல் பயின்றார். 22 வயதில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். டென்மார்க் சென்று விஞ்ஞானி நீல்ஸ் போரிடம் அணுவியல் குறித்து கற்றார்.

ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அங்கு ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் யூதர்களின் நிலை அபாயகரமாக மாறும் அறிகுறிகளை உணர்ந்து 1935-ல் மனைவியுடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமோவை அங்கு சந்தித்தார்.

 இருவரும் இணைந்து அணுக்கரு இயற்பியல், தெர்மோ நியூக்ளியர் இயக்கங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எட்வர்டு வெளியிட்டார். சிறிது காலம் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். மீண்டும் அமெரிக்கா திரும்பி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, யுரேனிய அணுவை ஜெர்மனி விஞ்ஞானிகள் பிளந்ததாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் உத்தரவின்பேரில், ஜெர்மனியை போரில் எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினார் எட்வர்டு.

 அமெரிக்க குடியுரிமையை 1941-ல் பெற்றார். ஜெர்மனி யர்களுக்கு முன்னதாக அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஓபன்ஹைமர் தலைமையில் இயங்கிய ‘மன்ஹாட்டன் டாப் சீக்ரெட்’ திட்டத்தில் இணைந்தார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது குழுவினருடன் இணைந்து முதல் அணுக்கரு தொடர் இயக்கத்தை தூண்டும் பணியில் ஈடுபட்டார். 1945-ல் அணுகுண்டு தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. நேச நாடுகளின் படையிடம் ஜெர்மனி சரணடைந்தபோது, அணுகுண்டு தயாரிப்பில் பாதி கட்டத்தைக்கூட ஜெர்மனி விஞ்ஞானிகள் எட்டியிருக்கவில்லை.

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை, அணு ஆயுதங் கள் உற்பத்தி, அவற்றை பரிசோதிப்பது ஆகியவற்றுக்கு எப்போதுமே இவர் பேராதரவு அளித்தார். இவரது முக்கிய பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 1952-ல் பசிபிக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இயற்பியல், வேதியியல் துறைகளில் பல முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கவுரவம் வாய்ந்த ‘பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த எட்வர்டு டெல்லர் 95ஆவது வயதில் (2003) மறைந்தார்.
ஜனவரி 16,
வரலாற்றில் இன்று.

 திருவள்ளுவர் தினம் இன்று.

இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது.

இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் பின்பற்றும் திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள்.