வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஜனவரி 17,
வரலாற்றில் இன்று.

நாதஸ்வர உலகின் முதல் பெண் நாதஸ்வர கலைஞர் மதுரை எம். எஸ். பொன்னுத்தாய் நினைவு தினம் இன்று.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர் பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய் புகழ்பெற்று விளங்கினார்.

திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9வது வயதில் நாதசுவரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய் 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார்.
ஜனவரி 17, வரலாற்றில் இன்று.

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசு நினைவு  தினம் இன்று (2010).

இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஓர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) அரசியல்வாதி.
1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவர். தமது கட்சியின் பொலிட்பீரோவில் 1964ஆம் ஆண்டு கட்சியின் தொடக்கத்தில் இருந்து 2008 வரை உறுப்பினராக இருந்த பெருமையும் கொண்டவர்.
ஜனவரி 17,
வரலாற்றில் இன்று.

நூற்றாண்டு விழா காணும் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு நினைவு தினம் இன்று.

  ஆர்.நாராயணசாமி எனும் இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு
(ஜூலை 10, 1919 - ஜனவரி 17, 1992)தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

1948 முதல் 1977 வரை கரிச்சான் குஞ்சு அவர்கள், "மன்னை தேசிய மேல்நிலைப் பள்ளியில்" தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஜனவரி 17,
வரலாற்றில் இன்று.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம் இன்று (1917)

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலபிட்டியில்  மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.

அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17, வரலாற்றில் இன்று.

நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய, இடிதாங்கியைக் கண்டுபிடித்த,  பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1706-ல் பிறந்தவர். தந்தை சோப்பு, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பவர். 17 குழந்தைகள் இருந்ததால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரு ஆண்டுகூட முழுமையாக இவர் பள்ளி சென்றதில்லை. ஆனால் தானாக முயன்று கல்வி கற்றார். 7 வயதிலேயே கவிதைகள் எழுதுவார்.

தொழிலில் அப்பாவுக்கு உதவியவாறே ஓய்வு நேரத்தில் 4 மொழிகளைக் கற்றார். நூல்கள்
வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அங்கு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.

அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் ஊரைவிட்டு வெளியேறி, பிலடெல்பியா சென்றார். அங்கு
கஷ்டப்பட்டு ஒரு அச்சகத்தை நிறுவினார். பத்திரிகைகளில் எழுதினார். சீக்கிரமே
பிரபலமானார். பென்சில்வேனியா கெஸட் இதழை 1720-ல் வாங்கி நடத்தினார்.

அச்சுத் தொழில், பத்திரிகை மூலம் 40 வயதுக்குள் செல்வந்தரானவர். ‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்கு அளித்தவர். இது இவருக்கு பெரும் செல்வம், புகழ், கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.

குறைந்த எரிபொருளில் நிறைய வெப்பம் தரும் அடுப்பைத் தயாரித்து விற்றார். செயற்கை
உரங்களைக் கண்டறிந்தார். மின்னலில் மின் சக்தி இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தார். மின்னல்,
இடியில் இருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். கிட்டப் பார்வை,
தூரப்பார்வை ஆகிய இரண்டு பாதிப்புகளுக்கும் உள்ளான முதியவர்களுக்கான பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்தார். அவற்றுக்கு இவர் காப்புரிமை பெறவில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் பலன்பெறும் நான், பிறருக்கும் எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பார்.

காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். சந்தா முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறை, நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே.

தீ விபத்துக்கான காப்பீட்டு நிறுவனத்தை முதன்முதலாக உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத்
தோற்றுவித்தவரும் இவர்தான்.

1783-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தார். இதுதான்
புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை இவரது வழிகாட்டுதலில் செயல்படும்
குழுவிடம் ஒப்படைத்தார். இவரது மேற்பார்வையில் அரசியலமைப்புச் சட்டம் உருவானது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன்
படத்துடன் 2 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.


அறிவியல், அரசியல், படைப்பாற்றல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்த
பெஞ்சமின் பிராங்க்ளின் 84ஆவது வயதில் காலமானார்.