திங்கள், 15 ஜூன், 2020

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:சார்லஸ் குட் இயர், ரப்பரை பதப்படுத்தும் வல்கனைஷேசன் முறைக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

சார்லஸ் குட் இயர், ரப்பரை பதப்படுத்தும் வல்கனைஷேசன் முறைக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று.

நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னரும் எத்தனையோ ஆய்வுகளும்,அதீத உழைப்பும் உறைந்து போயிருக்கிறது என்று நாம் அறிவோமா ?
எடுத்துக்காட்டாக நாம் செல்லும் வண்டிகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருக்கும் ரப்பர் டயருக்கு பின்னும் தன்னம்பிக்கை பொங்கும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது. அது சார்லஸ் குட் இயர் அவர்களின் கதை.

அமெரிக்காவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வாட்டர் ப்ரூப் ரப்பர் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை ஆர்வத்துடன் பார்த்தார். ஆனால் அவை
வெயில் காலத்தில் ஒட்டிக்கொள்வதையும்,குளிர காலத்தில் விரிசல் அடைவதும் மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. ஏதேனும் செய்து சரி செய்ய வேண்டும் என்று
ரப்பரும்,கையுமாக ஆராய்ச்சியில் இறங்கினார் அவர்.

ரப்பரைக்கொண்டு இவர் செய்து ஆய்வுகள் அவருக்கு எண்ணற்ற சோதனைகளை கொடுத்தது. கடன் அதிகமாகி அடிக்கடி ஜெயிலுக்கு போய்விட்டு வந்தார். அவர்
ரப்பரை எரிப்பது நாற்றத்தை உண்டாக்கி தூக்கத்தை,சுவாசத்தை கெடுக்கிறது
என்று போலீஸ் வரை புகார் போய் ஊரைவிட்டே காலி செய்தார். இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் ஆய்வுகள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தன.

நைட்ரிக் அமிலத்தை ரப்பரில் கலந்து தயாரித்த பொருட்கள் நல்ல முடிவையே ஆரம்பத்தில் தந்தன. அவற்றைக்கொண்டு ரப்பர் பைகள் செய்து அவர் அரசாங்க
தபால் துறைக்கு  அனுப்பி வைத்த பின்னர் அவை ஒட்டிக்கொண்டும்,விரிசல்
தந்தும் தொல்லைகள் கொடுப்பதாக எல்லாம் திருப்பி அனுப்பப்பட மனம் நொந்தார். ஒரு நாள் கந்தகம் மற்றும் காரியத்தை ரப்பரோடு கலந்து ஆய்வுகள்
செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த கலவை அருகில் இருந்த அடுப்பில் தெரியாமல் எதேச்சையாக பட்டது. அதை அதற்கு பின்னர் எடுத்து பார்த்த பொழுது
அது பிசுபிசுப்பு இல்லாமல் இருந்தது. அதை பயன்படுத்தி பார்த்த பொழுது விரிசலோ,ஒட்டிக்கொள்ளுதலோ நிகழவில்லை.  அவை நன்றாக வளைகிற தன்மையும்
கொண்டிருந்தன. அதற்கு காப்புரிமை பெற்றார் அவர். அங்கே இருந்து தான் எல்லாரும் எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் உலகுக்கு கிடைத்தன. அந்த முறைக்கு வல்கானைசேஷன் என்று பெயரிடப்பட்டது. இயர் வறுமையில்
வாடித்தான் இறந்து போனாலும் அவரின் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு மாபெரும் பாய்ச்சலை வழங்கியது என்பதே சரி. அந்த முறைக்கு அவர் காப்புரிமை பெற்ற தினம் ஜூன் 15

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:உலக பாரம்பரிய சின்னமான ஊட்டி மலை இரயில் தனது முதல் சேவையை துவக்கிய தினம் இன்று (1899).*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

உலக பாரம்பரிய சின்னமான ஊட்டி மலை இரயில் தனது முதல் சேவையை துவக்கிய தினம் இன்று (1899).

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக ஊட்டி மலை ரெயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. மலை ரெயில் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி பொதுமக்களுக்காக மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே இயக்க அர்ப்பணிக்கப்பட்டது. 1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி இந்திய அரசு மலை ரெயில் சேவையை எடுத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து குன்னூர் –ஊட்டி இடையே 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918ஆம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலை ரெயில் அனைத்தும் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது.

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:கலைமாமணி மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

*கலைமாமணி மணவை முஸ்தபா* பிறந்த தினம் இன்று.
                                                                      மணவை முஸ்தபா (15.6.1935 -  7.2.2017)
 அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

தமிழைச் செம்மொழியாக்க அரும்பாடாற்றியவர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி என எட்டு துறைகளைச் சார்ந்த 8 லட்சம் கலைச்சொற்களைக் கொண்ட அகராதிகளை உருவாக்கியவர்.

இவர் எழுதிய நூல்களில் ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசினையும், ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் நூல், 1996 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள்’ எனும் வகைப்பாட்டில் முதல் பரிசினையும் பெற்றிருக்கிறது.

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குனர், ‘புத்தக நண்பன்’ மாத இதழ் ஆசிரியர், யுனெஸ்கோ கூரியர் பன்னாட்டு மாத இதழின் ஆசிரியர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் தலைமைப் பொறுப்பாசிரியர்.

1985ஆம் ஆண்டு இவருக்குத் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.

மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபணம் செய்வதற்காக 1752ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃபிலடோல்பியாவில் இதே தினத்தில் பெஞ்சமின் பிராங்ளின் மின்னல் ஏற்படும்போது பட்டத்தை பறக்கவிட்டு அதன் மறுமுனையில் ஒரு சாவியை கட்டினார். சாவியை Leydan Jar (Capacitor) பொருத்தினார். மின்சாரம் தாக்காதவாறு பட்டத்தில் உள்ள கயிற்றில் ஈரமற்ற பகுதியை கையில் பிடித்திருந்தார். மின்னல் தோன்றிய போது பட்டத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சாவியின் வழியாக Capacitor-இல் மின்சாரம் சேமிப்பாவதை கண்டார். இச்சோதனையில் மின்னல் வேறு எங்கோ கண்ணிற்கு புலனாகாத இடத்தில் தோன்றியிருந்தது. மின்னல் அருகில் தோன்றியிருந்தால் பிராங்ளின் மின்சாரத்தால் தாக்கப்பட்டிருப்பார். இருந்தபோதும் சாவியின் அருகே ஏற்பட்ட மின்சக்தியை உணர்ந்தார். இதன்மூலமாக மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபித்தார். மேலும் அவர் முன் எச்சரிக்கையாக இரும்பு கம்பிக்கு(lightning rod) மாற்றாக பட்டத்தை பயன்படுத்தினார். இரும்புக் கம்பியைப் பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை கணித்திருந்தார். பெஞ்சமின் பிராங்ளினின் இந்தக் கண்டுபிடிப்பு இடிதாங்கி கண்டுபிடிக்க வழிசெய்தது. மேலும் இதன்மூலமாக மின்சாரத்தில் நேர்மறை மின்னோட்டம்(Positive Charge) மற்றும் எதிர்மறை மின்னோட்டம்(Negative Charge) இருப்பதை முதன் முதலாக உறுதி செய்தார். அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், எழுத்தாளர், அரசியல் தத்துவவியலாளர், அரசியல்வாதி, அயல்நாட்டுக்கான தூதர் போன்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

*🌐ஜூன் 15,வரலாற்றில் இன்று:உலக காற்று தினம்.*

ஜூன் 15 ,
வரலாற்றில் இன்று.


உலக காற்று தினம் இன்று


காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும்.

ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது

பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள், சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.

இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!!

காற்று மாசடைவதை தடுப்போம் !!