புதன், 16 ஜனவரி, 2019

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தால் டூப்ளிகேட் மதிப்பெண் சான்றிதழை சொந்த மாவட்டத்திலேயே பெறலாம்~உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வசதி…

Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்?

வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ்விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு:

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சிலசேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்

1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்

2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்

3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்

4. சுகன்யா சம்ரிதி திட்டம்

5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)

6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை

7. முதியோர் சேமிப்பு திட்டம்

8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு

9. முதலீட்டு சேமிப்புக்கள்

10. ஓய்வூதியம்

11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்குமட்டும்)

12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும்.

 

ஆசிரியருக்கு பயோ மெட்ரிக் பதிவு வந்தாச்சு...

மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு துவங்கவுள்ளது.

மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரத்யேக பயிற்சி பெற்ற 10 கணினி பயிற்றுனர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். 

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்...

ஜனவரி 22 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்...

ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்..

சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்
குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிகழ்வை அமெரிக்க பூர்வகுடி மக்கள் வுல்ஃப் மூன் என அழைத்து வருகின்றனர். 

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்குக் கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ப்ளட் மூன் என ஆய்வாளர்கள் கூறுகிறார். இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தான் சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஆகும். 

அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.
 
ப்ளட் மூன்
இந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்றரை மணி நேரம் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வான் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு? பட்டியல் தயாரிக்க கல்வித்துறை உத்தரவு...

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும், 2013ம் ஆண்டின் படி, பணி வரன் முறை செய்யப்பட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை, 2019 ஜன., 1ம் தேதி நிலவரப்படி, இனம் கண்டு பரிந்துரைக்க வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் தகுதியானவர். மேற்கண்டவர்கள் பெயர்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்ய வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது. முதன்மை கல்வி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, விபரமளிக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 164 உயர்நிலை, மேல்நிைலப்பள்ளிகள் உள்ளது. இதிலிருந்து, பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் விவரம் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுமென, சி.இ.ஓ., அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்...

நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லீ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு வரிவிலக்கு அளிக்கவும் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானமுடையவர்கள் 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுவருகிறது.


கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்...

2019 கல்வி ஆண்டு முதல், அனைத்து கல்வி நிலையங்களிலும், 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேறியது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த மசோதா, பெரும்பாலானோர் ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி,  இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், இந்த மசோதா, சட்டமானது. ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளோர், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் உள்ளோர், நகர்ப்பகுதியில், 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர், இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதி உடையோராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்~ மத்திய அரசு ஒப்புதல்…

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனால் இவர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பலன்கள் நீட்டித்து வழங்கப்படுகிறது.  இதனை 2016 ஜனவரி 1ந்தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.  

தபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்~வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்…

'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் புதிய வங்கி சேவை பயன்பாட்டிற்கென அலைபேசி செயலியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் வங்கி சேவை புதிதாக துவங்கப்பட்டது. 

இவ்வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை டிபாசிட் செய்யலாம். பண பரிமாற்றங்களுக்கு, தபால் துறை வங்கியில் பணம் எடுக்க எவ்வித கட்டணமும் கிடையாது. கடன் மற்றும் கிரெடிட் கார்டு கிடையாது. பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப்படும். பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யலாம். புதிதாக கணக்கு துவங்க ஆதார் கார்டு எண் மட்டும் போதும்.

ஐ.பி.பி.பி. வங்கி செயலி: தபால் துறை'ஐ.பி.பி.பி.,' எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் வரவு செலவுகளை பார்க்கலாம். பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும்.

மின்சாரம், அலைபேசி, தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி ஆதார், பேன் எண்ணை இணைத்தல், வாரிசு, முகவரி மற்றும் இமெயில் மாற்றமும் செய்யலாம். போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


குடியரசு தின விழா நாளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்~ பள்ளிக்கல்வி இயக்குனர்…

குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15, நவ. 14., தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு, தனித்திறமையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்க வேண்டும். மேலும் தேர்ச்சி விகிதத்தில் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில பெற்றோர் -ஆசிரியர் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் ரமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.