சனி, 22 ஆகஸ்ட், 2020

*🌟 "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!-அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்.*

*🌟 "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!-அனைத்து  மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்.*

*🌟NMMS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 9ஆம் வகுப்பில் படிக்க இருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை National Scholarship portal ல் பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟NMMS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 9ஆம் வகுப்பில் படிக்க இருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை National Scholarship portal ல் பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு:விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது.மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு:
விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது.
மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.
நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு.

புதிய கல்விக் கொள்கையா - புதிய குலக்கல்வித் திட்டமா?-தி.க.தலைவர் கி.வீரமணி.

புதிய கல்விக் கொள்கையா - புதிய குலக்கல்வித் திட்டமா?

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மூன்று வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. (நம்முடைய நாட்டில் அய்ந்து வய திற்குக் குறைவான பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு அழைத்துப் போனால், கிராமப் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் கூட, பள்ளிச் சேர்க்கைக்காக குழந்தையின் வயதைக் கூடுதலாக பெற்றோர்கள் சொன்னாலும், இடது கையை வைத்து வலது காதைத் தொட்டுக் காட்டும்படி சொல்வார்கள். அதில் உண்மை புரிந்துவிடும் என்பது பழைமையான வழமை).

ஆனால், பாடங்களும், சொல்லித்தரும் முறையும், மத்திய அரசு சொல்கிறபடியே இருக்கவேண்டும். மாநில, உள்ளூர் பண்பாடு - நாகரிகம் பற்றியெல்லாம் எதுவும் சொல்லித்தர மாட்டார்கள்.

‘‘எல்லாக் காலுக்கும் ஒரே செருப்பு.'' இதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - புரிந்துகொள்ளுங்கள்!

சமூக நீதி - இட ஒதுக்கீடு

அந்தந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக் கீட்டுக் கொள்கைகள் தொடரும் என்று எந்த உத்தரவாதத் தையும் இந்தக் கல்விக் கொள்கை தரவில்லை.  அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள  ‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப் பட்ட' (Socially and Educationally Backward Class) மற்றும் SC., ST என்ற அடையாளத்தை எடுத்துவிட்டு, சமூக- பொருளாதார சாதகமற்ற குழுக்கள் (Socio-Economically Disadvan taged Group) என்று திட்டமிட்டே புதிய சொற்றொடரை நுழைத்திருக்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை.  இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையை நுழைப்பதற்கு இது முதல் தொடக்கம்.

தமிழ்நாட்டில், திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி துவங்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு, தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு, ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தின் விளைச்சல். இந்த இட ஒதுக்கீடு காரணமாகத்தான், ஏழை, எளிய  மக்கள், கிராமப்புற மக்களின் குடும்பங்களில் இருந்து வந்த பிள்ளைகள் கல்வி பெற முடிந்தது. இன்று உலகில் பல நாடுகளிலும் திறமையோடு உயர்ந்த நிலையில் பல பதவிகளில் உள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, இதுவரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மாண வர்களுக்குத் தரப்பட்டு வந்த ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக, மதிப்பெண் அடிப் படையில் (மெரிட்) ஸ்காலர்ஷிப் தரப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இந்த சூழ்ச்சியை, அவலத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

இட ஒதுக்கீடும் நீக்கப்பட்டால், ஒடுக்கப்பட்ட மக்களே, உங்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு, உங்களின்  பிள்ளை களுக்கு இல்லாமல் போகும். அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் இந்த கல்விக் கொள்கையை நாம் அனுமதிக்கலாமா? ஏற்கலாமா?

பன்முகத் தேர்வு?
பொதுத் தேர்வு / நுழைவுத் தேர்வு

இந்தப் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள், அதாவது எட்டு வயதில் பொதுத் தேர்வு எழுதவேண்டும். அதற்குப் பிறகு 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு.  கேட்டால், பிள்ளைகளின் தகுதியைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்துவார்களாம்.

எட்டு வயதில் பொதுத் தேர்வு எழுதி மதிப்பெண் குறைந்த மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல், பாதியி லேயே பள்ளியை விட்டு நிற்பதற்கு, அதாவது  இடை நிற்றலுக்கு (DROP OUTS) முக்கியமான காரணமாகி விடாதா?

கல்வியில் சிறந்த நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை எந்தத் தேர்வும் இல்லாத நிலையில் மூன்று, அய்ந்து, எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி நியாயமானதாகும்?

இதோடு நிற்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல்
பிளஸ் 2 வரை செமஸ்டர் தேர்வுகள் - அதாவது ஆண்டிற்கு இரண்டு தேர்வுகள்! ஒவ்வொரு செமஸ்டரிலும் 5 அல்லது 6 பாடங்கள் என இந்தத் தேர்வுகள் அகில இந்தியத் தேர்வாக நடத்தப்படும்.

பெரும்பான்மையான, கிராமப்புற மாணவர்கள், எளிய குடும்பத்துப் பிள்ளைகள், எந்தக் கூடுதல் பயிற்சியும் பெற முடியாத மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், படிப்பை நிறுத்தக் கூடிய எண்ணிக்கை கூடுமேயன்றி, குறையாது.

இத்தனைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று ஒரு மாணவன் 12 ஆம் வகுப்பு முடித்து, பட்டப்படிப்பில் கலை அல்லது அறிவியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற் கென்று தனியே ஓர் அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதனை மத்திய அரசின் தேசியத் தேர்வு ஏஜென்சி (National Testing Agency) என்ற ஒன்று நடத்தும். பல்கலைக் கழகங்களுக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது; இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான தல்லவா?

அதாவது தற்போது மருத்துவக் கல்லூரிக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு போல, அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் மாணவன் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் சேர முடியும்.

மருத்துவப் படிப்புக்கு ‘நீட்' கொண்டு வரப்பட்டதனால், என்னென்ன பிரச்சினைகள் வந்துள்ளன என்பதை அனுப வித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில், கலை, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புகளுக்கும் ‘நீட்' தேர்வு போல அகில இந்திய அளவில் தேர்வு நடத்துவோம் என்று சொல்வது என்ன நியாயம்?

மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல், வெளியேறச் செய்வதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையா?

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் படிப்பை நிறுத்தி விட்டு வெளியேறலாம். பின் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கு வந்து படிப்பைத் தொடரலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை!

தற்போது அகில இந்திய அளவில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் விகிதம் 26.3. இதனை 50 சதவீதமாக்க இன்னும் 15 ஆண்டுகளில், அதாவது 2035 இல் அடைய வேண்டும் என்பது இந்தப் புதிய கல்விக் கொள்கையின் இலக்கு. நோக்கம் நன்றாய்தான் இருக்கிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிகள் அடைபட்டு அல்லவா இருக்கின்றன? (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் 2018-2019 கணக்கின்படியே 49 சதவிகிதத்தை எட்டிவிட்டோம்).

3, 5, 8  ஆம் வகுப்புகளிலே பொதுத் தேர்வு - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை செமஸ்டர் முறையில் அகில இந்தியத் தேர்வு - கல்லூரி சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு - இவையெல்லாம், மாணவர்களை வடிகட்டுமா? அல்லது எண்ணிக்கையை அதிகரிக்குமா?

மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்றால், மாணவன் எப்போது, எப்படி திரும்பி வருவான்?  பின் எப்படி 50 சதவீத இலக்கை அடைய முடியும்? இது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா!

இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமே! ‘எல் லோரும் படிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு, நடை முறையில் அதற்கு மாறாக, பலரையும், குறிப்பாக ஏழை,எளிய குடும்பத்து / கிராமப்புற மாணவர்களை வெளியேற்றும் திட்டம் என முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி உள்பட பல கல்வியாளர்களே குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் ‘பன்னாடை’ முறையை தமிழ்நாட்டில் 1950-களில் ஒழித்த இயக்கம் நமது திராவிடர் இயக்கம். அதை இப்போது அகில இந்திய அளவிலே கொண்டு வருகிறார்கள், புரிந்து கொள்ளுங்கள்!

தொழிற்கல்வி எனும் பெயரில்
நவீன குலக்கல்வித் திட்டமா?

இந்தப் புதிய கல்விக் கொள்கை  ஆறாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வியைக் கற்க வேண்டும் என்கிறது. பின்னர் பல்கலைக் கழகப் படிப்பு வரை தொடர வேண்டும் என்றும் சொல்கிறது.

12 ஆம் வகுப்பு முடித்ததும் மாணவன் தனக்கு ஒரு புரிதல் உள்ள நிலையில் சில தொழில்கள்பற்றி தெரிந்து கொள்வது சரி. அதை எல்லா மாணவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

தெரிந்து கொள்வது என்பது வேறு. தேர்வு என்பது வேறு.

ஆனால், அதற்காக ஆறாம் வகுப்பில் இருந்து அதற்குத் தேர்வு என்பதெல்லாம், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களைத் தங்களது குடும்ப சூழல் சார்ந்த குலத்தொழிலை நோக்கி தள்ளுவது தவிர்க்க முடியாதது. மீண்டும் ஒரு குலக் கல்வி அகில இந்திய அளவில் நுழைகிறது. இந்தக் கொள்கையில் கூறப்படும் தோட்ட வேலை, மண்பாண்டம் செய்தல், தச்சு வேலை, உலோக வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் களை யார் யார் வீட்டுப் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

உண்மையில், சமூகத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், அவரவர் குலத்தொழில் அல்லது ஏதேனுமொரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு, அங்கேயே அவர்களாகவே நின்று விட வேண்டும் என்கிற திட்டமே இதன் பின்னால் உள்ளது.

உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சிறு கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு, பெரும்பான்மை மாணவர்கள் தேங்கி விட்டால் மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம், மென்பொருள், ராக்கெட் தொழில் நுட்பம், ஏவியேஷன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் ஆராய்ச்சிப் படிப்பு களுக்கு செல்லப் போவது யார் என்கிற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. எடுத்துக்காட்டாக, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த் தக் கூடாது; அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டம் நடந்ததே - அதற்கு இது ஏற்றதா?

இந்தப் புதிய கல்விக் கொள்கை ஒரு குலக்கல்வித் திட்டம்தான் என மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்  அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளாரே!

இது, ராஜாஜியின் பழைய குலக்கல்விச் சிந்தனை தான்; பால கங்காதர திலகர் மகாராட்டிரத்தில் முன் மொழிந்தது தான்.

பார்ப்பனீயம் எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி யாகவே சிந்திக்கிறது, செயல்படுகிறது, புரிந்துகொள்ளுங்கள்!

ஹிந்தி - சமஸ்கிருதத் திணிப்பு

புதிய கல்விக் கொள்கை மும்மொழியைக் கட்டாயம் என்கிறது. முதலில் தாய்மொழிக் கல்வியை இந்த புதிய கல்விக் கொள்கை கட்டாயம் ஆக்கியிருக்கிறதா? இல்லையே! முடிந்தவரை (as far as possible) அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மேலும் எட்டாவது வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்றுதான் சொல்கிறது.

இந்தக் கொள்கையை வெளியிட்ட அடுத்த நாளே, மத்திய கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், கேந்திர வித்யாலயா, தாய்மொழிக் கல்வி சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டது. இதற்கு என்ன பதில்?

ஒரு மொழி, அதுவும் தாய்மொழி என்பது சரி என்று எல்லோரும் கூறுகிறார்கள். கூடுதலாக, ஒரு மொழி, அது ஆங்கிலம் என்பது உலக வழக்கோடு உதவியாக இருக்கும் என்பதால் கற்றுக் கொள்கிறார்கள்.

மூன்று மொழிகளில், இரண்டு மொழிகள் இந்திய மொழி களாக இருக்க வேண்டும் என்கிறது மத்திய அரசின் கல்விக் கொள்கை. ஆக, ஹிந்தியைக் கட்டாயம் ஆக்கிடவே இந்த நடவடிக்கை.

மூன்று மொழி மட்டுமல்ல, விருப்பம் உள்ளவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வெளியே கற்றுக் கொள்வார்கள், அதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், மும்மொழிக் கொள்கை என்று இவர்கள் முன்னிறுத்துவது ஹிந்தி அல்ல; இந்தப் புதிய கல்விக் கொள்கை முழுவதும் அங்கிங்கெனாதபடி, நீக்கமற நிறைந்திருப்பது சமஸ்கிருத மொழியைப் பற்றியே!

நாட்டில் யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ் கிருதத்தை எதற்காகக் கற்க வேண்டும்? (வருமுன்னரே, இதற்காக பட்ஜெட்டில் 50 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறார்கள்.  தமிழ் உள்பட செம்மொழித் தகுதி பெற்ற மொழி களுக்குக்கூட நிதி ஒதுக்கவில்லை) அதைக் கற்றுக் கொண்டு வேத சாஸ்திரம் படித்த தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்டோர் இன்னமும் அர்ச்சகர் பணி கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். சிலர் இறந்தே போனார்கள். வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் இஸ்லாமியர் என்பதால், உள்ளே வரக்கூடாது என்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில், சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஓர் அரசே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி அழுவதா? ‘டெலி கிராப்' பத்திரிகையில் இன்று வந்துள்ள செய்திப்படி, பல தகுதிகள் பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றி, துணைவேந்தர் பதவிக்கு மனு போட்ட தாழ்த்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்த தகுதியுள்ள ஒருவரை, நேர்காணலுக்குக் கூட அவரை அழைக்கவில்லை. அவர் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்திருக்கிறார் என்பது செய்தி.

அரசமைப்புச் சட்டத்தின்படி 22 மொழிகள் அலுவல் மொழிகள். இதில் ஹிந்தி, சமஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழிக்கும் ஒரு முக்கியத்துவமும் தரப்படுவது இல்லை. தற்போது 9 கோடி மக்கள் வாழும் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்தானி மொழியை அலுவல் மொழியாகச் சேர்க்க வேண்டும் என அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்று, சட்டீஸ்கர் மாநில மொழியான சட்டீஸ்கரி மொழியை அலுவல் மொழியாக்கவேண்டும் என அந்த மாநில முதலவர் பூபேந்தர் பாகல் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். ஹிந்தியை ஏற்றுக் கொண்டதால், தங்கள் மாநிலத்தின் தாய் மொழி முக்கியத்துவம் இழந்துவிட்டதை 70 ஆண்டுகள் கழித்து அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்!

ஆனால், தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை என்பதைத் தெளிவாக திராவிடர் இயக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே முடிவு செய்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமாக நிறைவேற்றினார்கள். இதனால், நாம் எங்கேயும் வீழவில்லை. மாறாக நன்றாகவே வளர்ந்துள்ளோம். கல்வி சிறந்த தமிழ்நாடு என்று முன்ன ணியில் இருக்கிறது!

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, மொழியைக் கற்றுக் கொள்ள அல்ல; பல்வேறு பாடங்களை அவர்களுக்குப் புரிகிற மொழியில் பயிலவும், உலக நடப்போடு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் தான் என்பதைப் பல கல்வி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் கல்வி

பள்ளிக்கல்வி வரை மட்டுமே பெண் கல்விக்கு முக்கியத் துவம் தருகிறது புதிய சனாதனக் கல்விக் கொள்கை. மேலும், மாணவர்கள் அதிகம் இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, பள்ளி வளாகம் என்ற பெயரில் பத்து அல்லது பதினைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் உருவாக்குவோம் என்றால், அந்தப் பள்ளிகளுக்கு, கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்றோர் எப்படி அனுப்புவார்கள்? உயர்கல்வியைத் தாண்டி, பட்டப்படிப்பு, பல்கலைக்கழகம் இங்கேயெல்லாம், பெண்களுக்கான வாய்ப்பைப்பற்றி இந்த கல்விக் கொள்கையில் ஒரு திட்டமும் இல்லை.

இத்தோடு, மதிய உணவுத் திட்டம் அய்ந்தாம் வகுப்புவரை மட்டுமே உண்டு என்கிறது மத்திய அரசின் கல்விக் கொள்கை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளி களிலும் மதிய உணவு ‘சத்துணவுத் திட்டமாக’ தரப்படுகிறது. இனிமேல் அது நிறுத்தப்படுமா? என்பது தெளிவாக்கப்பட வில்லை.

மாநில உரிமை

சுதந்திரம் கிடைத்ததும் ஒவ்வொரு மாநிலமும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டதே அவர்களின் மொழி, பண்பாடு, உடை, உணவு என அனைத்திலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ள ஒரு கூட்டாட்சி நாடு என்பதால்தானே! அதனால்தானே, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், கல்வி என்பதை மாநில அதிகாரத்திற்குள் வைத்தார்கள். பிறகு 1976 இல் எமெர்ஜன்சி காலத்தில், கல்வி மாநில அதிகாரத்தில் இருந்து, ஒத்திசைவுப் பட்டியல் என்று கொண்டு சென்றார்கள். ஆனால், இன்று நடைமுறை என்ன? மத்திய அரசாங்கமே கல்வி பற்றி, மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கொள்கை வெளியிடுகிறது. இது அப்பட்டமான, அதிகாரப் பறிப்பு; அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல் இல்லையா? யூனியன் பட்டியலுக்கே கல்வியைக் கொண்டு போய்விட்ட நிலை போன்றதல்லவா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு என்ன மாதிரியான கல்வி தரப்பட வேண்டும் என்று இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இல்லாத உரிமை எப்படி மத்தியில் இருக்க முடியும்?

வளர்ச்சியடைந்த நாடுகளில், கல்வி என்பது அங்குள்ள மாநில அரசுகளால்தான் நடத்தப்படுகின்றது. சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு செய்கின்றது. ஆனால், இந்தியாவில், பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என்று உள்ள ஒரு நாட்டில், எல்லாமே மத்திய அரசின் அதிகாரம் என்ற ஒற்றை ஆட்சி முறை எப்படி சரியானது?

அதிகாரத்தை மய்யப்படுத்தப்படும் முயற்சியில் பா.ஜ.க. அரசு அதிக முனைப்புக் காட்டுவதற்கான காரணம், அவர்களின் காவிமயப்படுத்தும் முயற்சிக்கு அதுவே வசதியாக இருக்கும் என்பதுதான் என்கிறார் பேராசிரியர் ஹர்பான்ஸ் முக்கியா.

இதற்கேற்ற வகையில், துவக்கப்பள்ளி முதல் பல் கலைக்கழக ஆராய்ச்சி படிப்புவரைக்கும் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஒரே அதிகார மய்யத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் கல்விக் கொள்கை!

ஆர்.எஸ்.எஸ். புதிய கல்விக் கொள்கையைக் கைதட்டி வரவேற்கிறது;  அந்த அமைப்பின் பரிந்துரைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மகிழ்ச்சியடைகின்றது. பிரதான கல்வியில் தொழிற் கல்வியை ஒருங்கிணைத்தல் மற்றும் உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வி கற்பித்த ‘‘பாரத் கவுரவ்''வரிசையில் ஒரு அடித்தளப் பாடத்திட்டத்தைச் சேர்ப்பது போன்ற இந்திய நாகரிகத்தைப் பற்றிய கதைகளைக் கொண்ட குழு, இவை அனைத்தும் புதியக் கல்வி கொள்கையில் ஏதேனும் ஒரு வடிவத்தில் தங்களுடைய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன என மகிழ்ச்சியோடு ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது என்றால், இந்தக் கல்விக் கொள்கை யாருக்கானது என்பது இதன்மூலம் புரியவில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைத் தடுக்கும் முயற்சியாகத்தானே இருக்க முடியும்?

‘பாரம்பரியக் கல்வி' என்ற பெயரில் பழைய சனாதன முறையையும், குப்பைகளையும் நமது பிள்ளைகள் மூளை யில் ஏற்றி, எதற்கும் உதவாதவர்களாக ஆக்கும் மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாம் நிராகரிக்க வேண்டாமா?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப் புற மக்களை, தொழிலாளர்களாகவே  உருவாக்கு வதற்கும், உயர்கல்வியை உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் ஏகபோகத்திற்கு உட்படுத்தி, அவர்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுமே உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

தேசியக் கல்விக் கொள்கையில் இலவசக் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப்பள்ளிகள்பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, இந்தப் புதிய கல்விக் கொள்கை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், பன்முகத் தன்மை ஆகியவற்றுக்கு எதிரானது; காவிச்சாயம் பூசிய விஷ உருண்டை; இருமொழிக் கொள்கையை நிராகரித்து, ஹிந்தி சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது.

மொத்தத்தில், சமூக நீதியை அழித்து, கல்வித்துறையைப் பெரிதும் தனியார் மயமாக்கி, உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்களுக்குக் கடை விரிக்க அனுமதிக்கும் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள மோடி அரசு, அதற்கு வசதியாக உருவாக்கியுள்ள கொள்கைதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

அனைவருக்கும் 14 வயது வரை கட்டாயக் கல்வி எனும் அரசமைப்புச் சட்டத்தின் இலக்கை நோக்கி நகராமல், தேர்வு, வெளியேற்றம் என்ற ‘பன்னாடை’ முறையை அறிமுகப் படுத்தி, வசதி படைத்தவர்களுக்கும், உயர்ஜாதிகாரர்களுக்கும் மட்டுமே உயர்கல்வி என்ற இலக்கை நோக்கி நகர் வதற்காகவும், கார்ப்பரேட்டுகளுக்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களைத் தயாரிக்கவுமான நோக்கத்தைக் கொண்டதுதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை எனும் நச்சுக் கொள்கை.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ‘தேசிய கல்விக் கொள்கை 2020' அய் முற்றிலுமாக நிராகரிப்போம்.

பெற்றோர்களே, மாணவர்களே புரிந்துகொள்ளுங்கள்!

கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.