திங்கள், 30 செப்டம்பர், 2019

இரண்டாம் பருவம் நோட்டு புத்தகங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை


நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது...



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 30.09.19்அன்று கோரிக்கைமனு படைப்பு...

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் 
மற்றும்
நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை 30.09.19(திங்கள்)பிற்பகல் 05.40மணியளவில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில்   பள்ளிப்பாளையம்,மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை,சேந்தமங்கலம்,
எருமப்பட்டி, நாமக்கல்,  பரமத்தி 
மற்றும்  கபிலர்மலை ஆகிய 10் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒன்றியம் வாரியாக கேட்டுக் கொண்டுள்ள நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்விமாவட்டங்களின் மாவட்டக்கல்வி அலுவலர்களின் வழியில் தொடர்புடைய வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இன்றையச் (30.09.19)சந்திப்பு நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனும்,பலனும் தந்திடும் என்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் நம்புகிறது.நன்றி.
-முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ஒன்றிய செயலாளர்கள் கூட்டச் செய்திகள் இன்றைய நாளேடுகளில்



 🎆🌲

சனி, 28 செப்டம்பர், 2019

பொதுப் பள்ளி முறை,அண்மைப்பள்ளி முறை அமல்படுத்தி தாய்மொழி வழிக்கல்வியை வலுப்படுத்துவோம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்




சந்திரயான்-2ல் இருந்து இறங்கியபோது நிலவின் தரையில் விக்ரம் பலமாக மோதி உள்ளது ~ புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது நாசா…

நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் கெடு நீட்டிப்பு...

ஆதார் - பான் இணைக்க வரும் 30ம் தேதி கடைசி...

கீழடியின் கீழே…. கண்டது கைம்மண்ணளவு, காண வேண்டியது…?

அறிஞர் அண்ணா பற்றிய சுவையான செய்திகளில் ஒன்று, நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம் : ஒரு பொதுக்கூட்ட மேடையில் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணாவிடம், "எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?" என்று கேட்டார். "பேசுவேன்" என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் "ஆற்றங்கரையினிலே" என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். 'அண்ணா எப்படிப் பேசுவாரோ?' என அவையினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அண்ணா எழுந்தார், "சிந்து நதி என்னும் அந்த ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரியர்கள் முதன்முதலாக வந்து குடியேறினார்கள்." என்று தொடங்கினார். அந்த உரையில் ஆற்றங்கரை நாகரிகங்கள் பற்றி ஒரு மணிநேரம் அண்ணா ஆற்றொழுக்காகப் பேசி முடித்தாராம்.

உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றின் பிறப்பிடமான எகிப்து நாட்டை நைல் நதியின் கொடை என்பார்கள். சிந்துவெளி நாகரிகத்தின் பெயரிலேயே இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கை வளமாக்கிய ஆற்றின் பெயர் உள்ளது.

மஞ்சள், யாங்சி ஆறுகளின் கரையோரத்தில் மலர்ந்து செழித்தது சீன நாகரிகம்.

டைக்ரிஸ், யூப்ரடிஸ் ஆகிய இரு பேராறுகளுக்கு இடையில் அமைந்த மெசபடோமியா (சற்றொப்ப இன்றைய இராக்) நிலப்பகுதியில் பிறந்தது சுமேரிய நாகரிகம்.

தென் அமெரிக்காவில் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பில் வளர்ந்து, சில நூறு ஆண்டுகள் முன்பு ஐரோப்பியக் குடியேறிகளால் அழிக்கப்படும் வரை நிலைத்து நீடித்த 'இன்கா' நாகரிகமும் பேராறுகளின் நடுவில்தான் ஊஞ்சலாடிற்று.

இந்த ஆற்றங்கரை நாகரிகங்களின் வரிசையில் வைகைக் கரையோரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழர்களின் நாகரிகம் பற்றிய செய்திகள் தமிழறிஞர்தம் உணர்வார்ந்த நம்பிக்கைகளாக மட்டும் இருந்து வந்த நிலையில் அந்த நம்பிக்கைகளுக்கு ஆதிச்சநல்லூரில் சிறகு முளைத்தது. இப்போது கீழடியில் அவை அறிவுலக வான்வழியில் உறுதியாகச் சிறகு விரித்துள்ளன.

வைகைக் கரை, பொருநைக் கரை நாகரிகம் என்பது தொல்தமிழர் நாகரிகமே என்பதை மறுக்கவியலாத நிலையில் அது பற்றிய புதைந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்து அறிவியல் நோக்கில் மெய்ப்பிக்கத் தமிழர் நாகரிகத்தின் மீதான ஆரியக் காழ்ப்புணர்ச்சி தடைபோட்டு வந்தது. சிந்துவெளிக் காளையைக் கூடக் குதிரையாகப் பார்க்க வைத்த இந்தக் காழ்ப்புணர்ச்சி இந்திய அரசின் தொல்லியல் துறையிலும் இந்த நாள் வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வகுப்பு நலன் போலவே இன நலனும் கணித வாய்பாடுகளையும் அறிவியல் முடிவுகளையும் கூட கேள்விக்குள்ளாக்கத் தயங்குவதில்லை. இங்கே ஆரிய நலன் அறிவியல் ஆய்வுகளையே தடுக்குமளவுக்குப் போய் விடுகிறது.

ஆதிச்சநல்லூரில் 2004-06 காலத்தில் அகழ்வாய்வு மூலம் கிடைத்த எலும்புகளும் கலைப்பொருட்களும் பதினைந்து ஆண்டு காலத்தாழ்வுக்கு பிறகே "கார்பன் டேட்டிங்" எனப்படும் காலம்காண் கரிம ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கூட நீதிமன்றத் தலையீடு தேவைப்பட்டது. இவ்வகையில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் இழுத்தடிப்பு புதிராக இருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆதிச்சநல்லூர் காட்டும் தமிழர் நாகரிகம் கி.மு. 905க்கும் கி.மு. 696க்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது என்று ஆய்வு முடிவுகள் வழியாகத் தெரிய வந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சி மூலமாகக் கிடைத்த கலைப்பொருட்களை கரிம ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவை கி.மு.345ஆம் ஆண்டுக்குரியவை எனத் தெரிய வந்தது. அங்கு கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகள் தமிழின் தொன்மையை உணர்த்தி நின்றன.

மதுரை நகரிலிருந்து தென்கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் கீழடி அமைந்துள்ளது. . இந்த இடத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் வைகையாறு ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கே அகரமும் மேற்கே கொந்தகையும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழாய்வுகள் மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது. நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள்தாம் அண்மையில் வந்திருப்பவை.

இந்தியத் தொல்லியல் துறை சார்பில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளை வழிநடத்தியவர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா. அவரை இப்பணியில் இந்திய அரசு தொடரவிடவில்லை. அவர் கோரிய சில ஆய்வுகள் செய்யப்படவே இல்லை. இப்போது தமிழக அரசு நல்ல முயற்சியை எடுத்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

தமிழர்களின் தொன்மையான நாகரிகம் என்பது சில தமிழறிஞர்கள், உணர்வாளர்களின் வெறும் மிகைப் பேச்சில்லை, பெரிதும் வரலாற்று உண்மையே என்பதைக் கீழடி அகழ்வாராய்ச்ச்சிகள் மீண்டும் அழுத்தமாக நிறுவியுள்ளன. கீழடி பல வகையிலும் முக்கியமாவது எப்படியென்றால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் என்று இதுவரை கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடி 'பிராமி' எனப்படும் தமிழி எழுத்துகள் சங்க காலத்தின் அகவையை மேலும் மூன்று நூற்றாண்டுகள் கூட்டியுள்ளன.

2018ஆம் ஆண்டு கீழடியில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள, 'பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக'த்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'கீழடி கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வளமான நாகரிகம் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்' என்று தெரியவருகிறது. அதாவது, வைகை ஆற்றங்கரையில் நகரமயமாதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தமிழ் 'பிராமி'யின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்னும் முடிவும் வரப்பெறுகிறது. அப்போதே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாகத் திகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை குறியீடுகளுக்கு அடுத்துக் காணக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ் 'பிராமி' எழுத்துகளாகும். இவற்றைத் தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கீழடி அகழாய்வில் தமிழ் 'பிராமி' எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கீழடியில் கிடைத்த மண் பாண்டங்களின் தொழில்நுட்பம், கனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் தெரியவருகிறது.

கீழடியில் அகழ்ந்தெடுத்த செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், ஒட்டுப்பொருளாகக் கணிசமான (7%) சுண்ணாம்பு கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்தில் 97% சுண்ணாம்பு இருந்ததையும் உற்றுநோக்கும் போது அக்கால மக்கள் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இரு கருத்துகள் முகமையானவை. முதலாவதாக ``இப்போது செய்திருக்கும் ஆய்வுகள் போதாது; இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும்" என்கிறார். கீழடியில் ஆய்வுக்குரிய நிலம் 110 ஏக்கர். ஆனால், நாம் அதில் 10 சதவிகிதத்தை மட்டுமே தோண்டிப் பார்த்துள்ளோம் என்பது நம் போராட்டம் தொடர வேண்டிய தேவையைச் சுட்டுகிறது.

இரண்டாவதாக, "நான்காம் கட்ட ஆய்வில் கண்டறிந்த பொருள்களின் காலம் கி.மு 583 என்று கூறுகிறார்கள், இன்னும் பழைமையாகவும் இருக்கலாம்" என்ற அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கருத்து நம்மிடம் பொறுமையான நீண்ட விடாமுயற்சியைக் கோருகிறது. நம்மிடம் என்று நான் சொல்வது தமிழக அரசிடமும் தமிழக மக்களிடமும் அம்மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களிடமும்! வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் புதைந்து கிடக்கும் உண்மைகளில் சிறு பகுதி மட்டுமே! எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தும் வரை நமக்கு ஓய்வில்லை.

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம், தமிழ்நாடு ~தொழிற்கல்வி படிப்புதவித்தொகை விண்ணப்ப படிவம்…

ஆசிரியர் நல தேசிய நிதியம் _ தொழில்நுட்ப பயிலக பட்டபடிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் சார்ந்து...



தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம், தமிழ்நாடு ~தொழிற்கல்வி படிப்புதவித்தொகை விண்ணப்ப படிவம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் கிளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நாள் 29.09.19 ஞாயிறு காலை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்  

நாமக்கல் மாவட்டம் (கிளை
)
*********************
விரைவு ஒன்றியச் செயலாளர்கள் 
கூட்ட அழைப்பு
********************
அன்புடையீர்! வணக்கம்.

இடம்:
மன்ற அலுவலகம்,
பரமத்தி-வேலூர்.

நாள்: 29.09.19 (ஞாயிறு)
நேரம்: முற்பகல் 10.00மணி

கூட்டப்பொருள்:
1.உறுப்பினர்பதிவு
2.வரவு-செலவு
3.ஜாக்டோ-ஜியோ போராளிகளுக்கு பாராட்டு விழா
4.ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்
5.ஆசிரியர்கோரிக்கைகள் 
6.மாவட்டச் செயலாளர் கொணர்வன 

தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். தவறாது வருக !
நன்றி!
முருகசெல்வராசன்.

Go No:371 Date: 17.09.2019 பள்ளிக்கல்வி சிறப்பு பி.எட் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தை மூன்றாண்டு (2021)வரை நீடித்தல் அரசாணை வெளியீடு







Go No:302 Date:26.09.2019 தமிழக அரசு ஊழியர்களுக்கு (2018-19) போனஸ் அறிவிப்பு



02.10.2019 காந்தியடிகள் பிறந்த நாள் அன்று குழந்தைகள் நெகிழியை எடுத்துக்கொண்டு ஓடுதல் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்-CEO




வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தொழில்நுட்ப பயிலக பட்டப்படிப்பு/பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019- 2020 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை









திராவிடம் கற்போம்-திருவல்லிக் கேணி முதல் திருவாரூர் வரை நூல் சென்னையில் வெளியீடு...

கண் இருந்தும் பார்க்க மாட்டோம். காது இருந்தும் கேட்கமாட்டோம். என திராவிட இயக்கத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் தங்கள் ஒற்றை வாயை இரண்டு மூன்று மடங்காக்கி பழிபோடுவது மட்டும் காலந்தோறும் நடந்து வருகிறது. 
அண்ணா தி.மு.க. என்ற கட்சியில் அமைச்சராக இருப்பவரே மும்மொழிக் கொள்கையை அண்ணா ஆதரித்தார் என்பது அறியாமையா-ஆணவமா என்பதைத் தாண்டி, அவரது கருத்தைக் கேட்டவர்களுக்கு ஏற்படும் குழப்பமும் மயக்கமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கிறது. அதனால் திராவிட இயக்க வரலாற்றினைத் திரும்பத் திரும்ப பதிவு  செய்வதும், அது குறித்து உரையாடுவதும் அவசியமாகும். 

அத்தகைய பணிகளில் ஒன்றாக, கௌரா ராஜசேகர் அவர்களின் சீதை பதிப்பகத்தின் சார்பில் 'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற திராவிட இயக்க வரலாற்று நூல் 28-9-2019 சனி (நாளை) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் வெளியிடப்படுகிறது. 
கலைஞரின் படைப்புகளில் தொடங்கி, திராவிட இயக்கம் சார்ந்த நூல்களை வெளியிடுவதை தனது தொழில் சார்ந்த அறமாகக் கடைப்பிடித்து வருகிறார் கௌரா ராஜசேகர்.
'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அர.திருவிடம். இவரும் கௌரா ராஜகேசரைப் போலவே திருவாரூர்க்காரர். திருவிடம் அவர்களின் தந்தை திருவாரூர் அரங்கராசன் எனப்படும் 'தண்டவாளம்' ரெங்கராஜ், பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரியார் பெருந்தொண்டர். கலைஞரின் இளமைக்கால அரசியல் பணிகளில் வழிகாட்டி ஊக்கப்படுத்திய சிங்கராயர், வி.எஸ்.எம்.யாகூப் போன்ற பெரியார் தொண்டர்கள் வரிசையில் தண்டவாளம் ரெங்கராஜ் முக்கியமானவர். 

கலைஞருக்கு திராவிடம் பயிற்றுவித்தவரின் மகன், கலைஞரிடம் திராவிடம் பயின்றார். திருவிடத்தின் தந்தை கலைஞருக்கு ஆசான் என்றால், தண்டவாளம் ரெங்கராஜின் மகனுக்கு கலைஞரே ஆசான். அதனால்தான் திராவிட இயக்கத்தை குடும்பக் கட்சி என்று யாராவது சொன்னால், "ஆமாம்.. அப்படித்தான்" என கெத்தாக சொல்ல முடியும். 

5 பாகங்களாக ஏறத்தாழ 1300 பக்கங்கள் அளவிற்கு அர.திருவிடம் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை இளம் திராவிடர்கள் அமைப்பான திராவிட சிறகுகள் வெளியிடுகிறது. நூலை அறிமுகம் செய்து பேசுகிறார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
அறிமுகம் செய்வது என்றால், திராவிட இயக்க வரலாற்று நூலான இதனை அவர் புரட்டிப் படித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் வழியாக, கலைஞரிடம் திராவிடம் பயின்ற அர.திருவிடத்தின் வாயிலாக, கலைஞரின் பேரன் திராவிடம் பயில வேண்டிய காலம் இது. 
மேடையில், கலைஞரின் கல்லக்குடிக் களத்தின் சிறைத்தோழர் காரைக்குடி இராம.சுப்பையாவின் மகன் அண்ணன் சுப.வீரபாண்டியன், தி.மு.க.வின் தொடக்க கால வரலாற்றில் அண்ணாவுடன் இணைந்து நின்று கழகம் வளர்த்த சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் பேரனும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், கலைஞரின் நண்பரும் திராவிடப் பொருளாதார அறிஞருமான நாகநாதன் அவர்களின் மகன் மருத்துவர் எழிலன் ஆகியோர் நூல் திறனாய்வு செய்கின்றனர். 

கலைஞரின் பேரன் நாளை பங்கேற்க இருப்பது அவரது வழக்கமான பரிவாரங்களுடனான இன்னொரு நிகழ்ச்சி அல்ல. அண்ணாவின் வார்த்தைதகளில் சொல்வது என்றால், 'மாலை நேரப் பல்கலைக்கழகம்'. 
பயன்படுத்தட்டும். பயன்படட்டும்.  

திருவள்ளுவர் ஆண்டு 2050 புரட்டாசி 10,
//கோவிலெனின் முகநூல்பதிவு//

29.9.2019 ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நுழைவுச்சீட்டு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்


அக்.2ம் தேதி 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் ~ மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....

ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது சிறுமிக்கு நோபலுக்கு இணையான விருது வழங்கப்பட உள்ளது...

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற  16 வயது சிறுமி  (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார். 

அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி  கூறியதாவது:-

நான் இங்கே இருந்திருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் திருடி விட்டீர்கள். ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்தி தான்.

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது. அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், பணம் குறித்து...  நிரந்தர பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்
உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீது தான் உள்ளன.எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"
என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் 'வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது 'மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.

கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது' என்ற இயக்கத்தின் பெயரில் 'பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன' என்ற பதாகைகளுடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

 இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) 'உலக பருவநிலைமாற்ற போராட்டம்' என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு 'மாற்று நோபல் விருது' என அழைக்கப்படும் 'வாழ்வாதார உரிமை விருது' வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான   விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார்.

பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்கரைஞர் குவோ ஜியான்மெய் மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எங்களை அழிக்கப் போகும் திட்டங்களைக் கைவிட மறுக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன துணிச்சல் ! ~ நியூயார்க் நகரில் சுவிடனைச் சேர்ந்த 16- வயது சிறுமி, ஐ.நா. மாநாட்டில் உலகத் தலைவர்கள் முகத்திற்கு நேரே இப்படி முழங்கியிருக்கிறார் ~ "உங்களை நம்ப மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்."

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத் தலைவர்கள் செயல்பட்டு , உலகைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தும் 16 வயது, ஸ்வீடனைச் சேர்ந்த, காலநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க்கின் குரல்தான் அது.

 ஐ.நா. அவையில் எதிர்காலத் தலைமுறைகளின் சார்பாக வீரமுழக்கம் செய்திருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன், அவருடைய அழைப்பை ஏற்று உலகம் முழுவதிலிருந்தும், 156 நாடுகளிலிருந்து மாணவர்கள் நியூயார்க்கில் கூடி, மிகப்பெரிய பேரணியை நடத்தி உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்வீடனில் தனியாகப் போராட்டத்தைத் தொடங்கியவர் இவர். இப்போது பல மில்லியன் இளைஞர்களின் குரலாக மாறியிருக்கிறார்.

 "உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷயம் அல்ல. இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். ' ஆகவே உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் பருவ நிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்கு சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்'. எங்களைப் பார்த்து  'நார்மல்' குழந்தையாய் இருங்கள் என்று சொல்லாதீர்கள்." என்று சாடி இருக்கிறார். 

உலகின் ஒவ்வொரு பகுதியும் பாதிப்புக்குள்ளாகும் இந்நிலையில், சுற்றுச்சூழலை, நீரை, நிலத்தை, காற்றை பாதுகாக்கச் செயல்படாத ஒவ்வொருவரும் 'தலைமுறைக் குற்றவாளி'யாக எதிர்காலத்தில் குற்றம்சாட்டப் படுவார்கள் என்பதற்கு அவருடைய கூற்று ஒரு சான்றுஆகும், 

உலகம் ஒரு மிகப் பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது. பருவநிலை மாறுதல் என்பது உலகையே விழுங்கிவிட கூடிய மிகப்பெரும் சவாலாக வந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாறுதலைத் தடுத்துநிறுத்த, புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது. உலகம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள், குறைவாக வைத்துக்கொள்ள
வேண்டும். தற்போது உள்ள மாசு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் , ஷேல் மீத்தேன் உள்ளிட்டபசுமை வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்காவிட்டால், 2050ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் அத்தனையும் உருகி, கடல் மட்டம் உயர்ந்து விடும். 2050ல் உலகின் பல பகுதிகளில் உள்ள தீவுகளும், கற்கரையோர நகரங்களும் கடலுள் முழ்கும்.

ஆபத்தை உணர்ந்து இந்தோனேஷியா ஜகார்தாவில் உள்ள தன் தலைநகரை  இடம் மாற்றுகிறது.ஏனென்றால், இந்தோனேஷியாவின் பெரும்பகுதி 2050ல் கடல்நீர் மட்ட உயர்வால் மூழ்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
 2100 -இல் வங்கதேசம் கடலில் மூழ்கி விடும் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்ட உயர்வால் மார்ஷல் தீவுகள் , துவாலு, மாலத்தீவு  உள்ளிட்டவையும், சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களும் கடலுக்குள் மூழ்கும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இனவயெல்லாம் கடலுள் மூழ்கும் போது , கடல் மட்டத்தை விட 1 மீட்டர் ( 3 அடி) உயரத்தில் உள்ள காவிரிப் படுகை என்ன ஆகும்?

 உடனடியாக புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்குக் குறைத்தாக வேண்டும் என்று உலகளவில் குரல் எழும்பியுள்ளது.

 மார்ஷல் தீவுகள் மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி ஆகும். 72,000 பேர் இத்தீவில் வசிக்கிறார்கள். 1900-க்குப் பிறகு 20 சென்டி மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3 அடி முதல் 6 அடி உயரம் உள்ள மார்சல் தீவுகள் 2100 மூழ்கிவிடும் என்று கருதப்படுகிறது. 72,000 பேர் வாழும் மார்ஷல் தீவுகளைப் பற்றிய கவலை உலகத் தலைவர்களை வருத்துகிறது. அதே நேரம், அதே பாதிப்புக்கு உள்ளாகும் காவிரிப் படுகையின் நாகை, தி சவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மட்டுமே 56 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். யாரும் கவலைப்படவில்லை. பாதிப்புக்குள்ளாகப் போகிறவர்களும் அதைப் பற்றி யோசிக்கவில்லை.

2015 டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் 196 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இந்த புவி வெப்பமாதல் அபாயத்தைத் தடுத்து நிறுத்த ஒர் ஒப்பந்தத்தை உருவாக்கினர்.
ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது என முடிவெடுத்தனர். இதன் பொருள், வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை உருவாக்குவது, எண்ணெய் -எரிவாயு எடுப்பது,  நிலக்கரியை அகழ்ந்தெடுப்பது போன்ற கொள்கைகள் அறவே கைவிடப்பட வேண்டும் என்பதுதான். தொழிற்புரட்சி தொடங்குவதற்கு முன்னதாக உலகில் நிலவிய தட்பவெப்ப நிலையை மீட்டெடுக்க, 2010ல் வெளியான கார்பன் அளவில் 45 விழுக்காடு அளவிற்கு, 2030-க்குள் குறைத்தாக வேண்டும் என்பதும் இம்மாநாட்டில் ஏற்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு முதல் பாரிஸ் ஒப்பந்தம் அமலாக்கம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்புரட்சி காலமான 1850 முதல் 1900 வரையிலான காலக்கட்டத்தில் இருந்ததைவிட, ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து விட்டது.

 தொழில்மயம் என்ற பெயரில் புகை மயம் ஆனதால்,பசுங்குடில் வாயு,  கார்பன் ஆகியவை  வளிமண்டபத்தில் அதிகரித்து, சூரியனிடம் இருந்து வரக்கூடிய வெப்பத்தை அப்படியே உள்வாங்கி,  பூமியில் தங்க வைக்கிறது. இதனால் புவி வெப்பம் அதிகரித்து, பனிக்கட்டி உருகி, கடல்மட்டம் உயர்ந்து, பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 

 2015 பாரீஸ் ஒப்பந்தப்படி பூமியில் வெப்பத்தை 2 டிகிரி குறைப்பதாக, அதாவது புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதாக ஒப்புக்கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. 

 ஐ.நா. பொது அவையின் 74-வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டன் நகரில் 'மோடி நலமா,'என்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். இந்நிகழ்ச்சியில் மோடியின் கூட்டாளி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்றார். 

 ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரேஸ் ஏற்பாடு செய்திருந்த பருவநிலை நடவடிக்கை மாநாட்டில், இந்தியப் பிரதமர் மோடி,
 "பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்த அமலாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் " என்று பேசினார். பேசும்போது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு விரிவான அணுகுமுறை தேவை. இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உலகளாவிய 'மக்கள் இயக்கம்' தேவை - என்றெல்லாம் பேசினார்.  "பருவநிலை மாற்றம் குறித்து வெறும் பேச்சுக்கான தருணம் கடந்துவிட்டது. இனி செயல்பாடுகளே தேவை" என்று உலக இரட்சகர் போலப்பேசி, தன் பேச்சை நிறைவு செய்தார். 

 இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றும், ஆனால் அந்த இலக்கை 450 ஜிகாவாட் ஆக அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். எங்களது கொள்கை தேவையின் அடிப்படையிலானது" என்றெல்லாம் நீட்டி முழக்கினார். புதை படி வ எரிசக்தியை முற்றிலும் எதிர்ப்பவர் போல அதிரடியாகப் பேசினார்.

 வெளிநாட்டில் காலநிலை மாறுதலை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி, இந்திய துணைக்கண்டத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கதவை திறந்துவிட்டு, அவர்களது தேவைக்கும், இலாபத்துக்கும், எண்ணெய் - எரிவாயு எடுப்பை சகட்டுமேனிக்கு பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

 2015_இல் பாரிசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகுதான், நரேந்திர மோடி மிகவும் அபாயகரமான ஹைட்ரோகார்பன் திட்டங்களை இந்தியாவில் அறிவித்தார்.  2016 மார்ச் மாதம் 'புதிய ஆய்வு உரிமம்' வழங்கும் கொள்கை கைவிடப்பட்டு, ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமம் வழங்கும் கொள்கை (Hydrocarbon Exploration Licensing Policy ) கொண்டுவரப்பட்டது . எண்ணெய் - எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன் , ஷேல் எண்ணெய் - எரிவாயு ஆகியவை அனைத்துக்கும் ஒரே லைசென்ஸ் பெற்றுக்கொண்டு,  மரபுவழிப்பட்ட மற்றும் புதிய முறையிலான அனைத்து வகை தொழில்நுட்பத்திலும், வரைமுறையற்ற வகையில் ஹைட்ரோகார்பன் களை எடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 .03. 2016 அன்று திறந்தநிலை எண்ணெய் வயல்கள் உரிமம் வழங்கும் திட்டம் (Open Acreages Licensing programme ) சேர்க்கப்பட்டது. இதன்படி ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு இசைவான நிலப்பரப்பைக் குறிப்பிட்டு, எண்ணெய் எரிவாயு எடுக்க, அப்பகுதிக்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 2017-இல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், காரைக்காலிலும் ஹைட்ரோகார்பன் சிறிய வயல்கள் திட்ட ஏலம் நடத்தப்பட்டது.

 ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் காவிரிப்படுகையில் 7000 ச.கி.மீ-க்கு மேல் , மூன்று சுற்று ஏலங்களில் பெரு நிறுவனங்களிடம் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  2018 - இல்5094 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 2019 மே மாதம் இரண்டாம் சுற்று ஏலத்தில் 474 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்,  மூன்றாம் சுற்று ஏலத்தில் 1863 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் ஓஎன்ஜிசி, வேதாந்தா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ஒற்றை லைசென்ஸ் முறையில், ஹைட்ரோகார்பன் எடுக்க  வழங்கப்பட்டுள்ளன.

 எண்ணெய் எரிவாயு எடுத்ததால் கிருஷ்ணா கோதாவரிப் படுகையின் பல பகுதிகளில்  நிலம் 6 அடி கீழே இறங்கி இருக்கிறது. இதே நிலை காவிரிப்படுகைக்கு ஏற்படும்போது கடல் காவிரிப் படுகையை விழுங்கும். 

பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்ததால், காவிரிப்படுகை மக்களும், தமிழக மக்களும் எழுச்சி பெற்று போராடும்போது, தமிழக அரசால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்திய அரசு எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி தமிழக அரசுக்கு கட்டளையிடுகிறது. 

 காலநிலை மாற்றத்தைத் தடுத்துநிறுத்த புதைபடிவ எரிபொருள்  பயன்பாட்டைக் குறைக்க உலக அளவில் "மக்கள் இயக்கம் " வேண்டும் என்று வெளி நாட்டில் முழங்குகிறார் நரேந்திர மோடி. ஆனால், அதே கோரிக்கைகளை இந்தியாவுக்குள், தமிழகத்தில் முன்வைத்து மக்கள் போராடினால் , மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், வழக்குகள் கொடுக்கப்படுகின்றன, சிறைக் கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன.

வாயளவில் வெளிநாட்டில் பேசுவதும், உள்நாட்டில் பெரும் முதலாளிகளுக்காக அனைத்து வகையான எண்ணெய் -எரிவாயு எடுப்புத் திட்டங்களைத் திணிப்பதும், விளை நிலங்களைப் பிடுங்கி புகை கக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதும், அனல் மின் நிலையங்களை கடலோரப் பகுதி முழுவதும் நிறுவுவதும், இவையும்,  இவை போன்றவற்றையும் வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசு சுமத்திக் கொண்டு இருக்கிறது.

 இதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தை 16 வயது சிறுமி உணர்த்தியிருக்கிறார். பருவநிலை மாற்றம் குறித்த  ஐநா மாநாட்டில் உரையாற்றிய ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார் :

" இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள் ) உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன துணிச்சல்!"

 உலகத் தலைவர்களைப் பார்த்து கிரேட்டா துன்பர்க் எழுப்பிய கேள்வி வளிமண்டலத்தை அச்சுறுத்தும் மீத்தேன் - ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்ததுதான். இந்திய அரசைப் பார்த்து தமிழ் இளைஞர்கள் எழுப்பவேண்டிய கேள்வி இது. புதை படிவ எரிவாயுவும் எண்ணெய்யும் எடுப்பதால், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுவதால், மக்கள் வாழ்விடங்களில் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதால் நிலமும், நீரும், காற்றும், சூழலும் கெட்டு, மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினம் நோயாளியாக மாறிக்கொண்டிருக்கிறது.  " திட்டத்தைக் கைவிடுங்கள்" என்றால் கைது செய்கிறது அரசு.

காவிரிப் படுகை மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், காவிரிப்படுகையே காணாமல் போகும் நிலை நெருங்கிவரும் சூழலில்,  எண்ணெய் எரிவாயுத் திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொள்ள ஓஎன்ஜிசி, கெயில் போன்ற நிறுவனங்கள் இழிவான உத்திகளைக் கையாளுகின்றன. அப்பாவி மக்களுக்கும், மாணவ - மாணவிகளுக்கும் சிறுசிறு பரிசுப் பொருள்களை, தண்ணீர் எடுக்கும் குவளை,  நீர் கொண்டு செல்லும் சிறு உலோகப் பாட்டில்கள் - இவற்றையெல்லாம் பரிசாக க்கொடுத்தும்,  உள்ளூரில் கபடி, வாலிபால் போட்டிகளை நடத்தியும், விழாக்களுக்கு நிதி கொடுத்தும், பிரமுகர்களாக கருதப்படுபவர்களுக்குக் கையில் இலஞ்சத் தொகை கொடுத்தும், எப்படியாவது இந்த பேரழிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி விட முயற்சி செய்கின்றன. தமக்கு சிறு பரிசுகளைக் கொடுத்து இவர்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் ,தம் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோயையும், இறப்பையும் பரிசாகத் தரக்கூடியவை என்பதை அறிந்திருக்கவில்லை.

கிரேட்டா துன்பர்க் எழுச்சி கொண்டதைப் போல, காவிரிப்படுகையில் மாணவ-மாணவியர்கள் எழுச்சி கொள்வார்கள்; நீண்டகாலம் ஏமாற மாட்டார்கள்.

வெளிநாட்டில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் அழிவுக்கு எதிராக முழக்கமிடுவதும், நாடு திரும்பியதும் புதிய , புதிய வடிவங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அறிவித்துத் திணிப்பதும், மக்களின் கருத்தை ஏற்று திட்டத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், இராணுவத்தைக் களமிறக்கி அச்சுறுத்துவதும், பழங்குடியினரைக் காடுகளிலிருந்து விரட்டுவதும், மீனவர்களைக் கடலிலிருந்து விரட்டியடிப்பதும், விவசாயிகளை வயல்களிலிருந்து விரட்டியடிப்பதுமாக இருக்கிறீர்கள். சொல்லொன்றும் செயலொன்றுமாக இருக்க உங்களுக்கு என்ன துணிச்சல்! 

 நரேந்திர மோடி அவர்களே, கிரேட்டா துன்பர்க் உலகின் முன்னிலையில் காறி உமிழ்ந்ததே உங்களைப் போன்றவர்களைப் பார்த்துதான். திருந்துங்கள்!

 எங்கள் மாணவ-மாணவியர்களும், இளைஞர்களும் கூட கிரேட்டா துன்பர்க் தான், இனி வருங்காலங்களில் .-

___ பேராசிரியர்
 த. செய ராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு . 24.09.2019