வெள்ளி, 27 செப்டம்பர், 2019

எங்களை அழிக்கப் போகும் திட்டங்களைக் கைவிட மறுக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன துணிச்சல் ! ~ நியூயார்க் நகரில் சுவிடனைச் சேர்ந்த 16- வயது சிறுமி, ஐ.நா. மாநாட்டில் உலகத் தலைவர்கள் முகத்திற்கு நேரே இப்படி முழங்கியிருக்கிறார் ~ "உங்களை நம்ப மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்."

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத் தலைவர்கள் செயல்பட்டு , உலகைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தும் 16 வயது, ஸ்வீடனைச் சேர்ந்த, காலநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க்கின் குரல்தான் அது.

 ஐ.நா. அவையில் எதிர்காலத் தலைமுறைகளின் சார்பாக வீரமுழக்கம் செய்திருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன், அவருடைய அழைப்பை ஏற்று உலகம் முழுவதிலிருந்தும், 156 நாடுகளிலிருந்து மாணவர்கள் நியூயார்க்கில் கூடி, மிகப்பெரிய பேரணியை நடத்தி உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்வீடனில் தனியாகப் போராட்டத்தைத் தொடங்கியவர் இவர். இப்போது பல மில்லியன் இளைஞர்களின் குரலாக மாறியிருக்கிறார்.

 "உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷயம் அல்ல. இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். ' ஆகவே உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் பருவ நிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்கு சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்'. எங்களைப் பார்த்து  'நார்மல்' குழந்தையாய் இருங்கள் என்று சொல்லாதீர்கள்." என்று சாடி இருக்கிறார். 

உலகின் ஒவ்வொரு பகுதியும் பாதிப்புக்குள்ளாகும் இந்நிலையில், சுற்றுச்சூழலை, நீரை, நிலத்தை, காற்றை பாதுகாக்கச் செயல்படாத ஒவ்வொருவரும் 'தலைமுறைக் குற்றவாளி'யாக எதிர்காலத்தில் குற்றம்சாட்டப் படுவார்கள் என்பதற்கு அவருடைய கூற்று ஒரு சான்றுஆகும், 

உலகம் ஒரு மிகப் பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது. பருவநிலை மாறுதல் என்பது உலகையே விழுங்கிவிட கூடிய மிகப்பெரும் சவாலாக வந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாறுதலைத் தடுத்துநிறுத்த, புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது. உலகம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள், குறைவாக வைத்துக்கொள்ள
வேண்டும். தற்போது உள்ள மாசு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் , ஷேல் மீத்தேன் உள்ளிட்டபசுமை வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்காவிட்டால், 2050ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் அத்தனையும் உருகி, கடல் மட்டம் உயர்ந்து விடும். 2050ல் உலகின் பல பகுதிகளில் உள்ள தீவுகளும், கற்கரையோர நகரங்களும் கடலுள் முழ்கும்.

ஆபத்தை உணர்ந்து இந்தோனேஷியா ஜகார்தாவில் உள்ள தன் தலைநகரை  இடம் மாற்றுகிறது.ஏனென்றால், இந்தோனேஷியாவின் பெரும்பகுதி 2050ல் கடல்நீர் மட்ட உயர்வால் மூழ்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
 2100 -இல் வங்கதேசம் கடலில் மூழ்கி விடும் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்ட உயர்வால் மார்ஷல் தீவுகள் , துவாலு, மாலத்தீவு  உள்ளிட்டவையும், சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களும் கடலுக்குள் மூழ்கும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இனவயெல்லாம் கடலுள் மூழ்கும் போது , கடல் மட்டத்தை விட 1 மீட்டர் ( 3 அடி) உயரத்தில் உள்ள காவிரிப் படுகை என்ன ஆகும்?

 உடனடியாக புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்குக் குறைத்தாக வேண்டும் என்று உலகளவில் குரல் எழும்பியுள்ளது.

 மார்ஷல் தீவுகள் மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி ஆகும். 72,000 பேர் இத்தீவில் வசிக்கிறார்கள். 1900-க்குப் பிறகு 20 சென்டி மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3 அடி முதல் 6 அடி உயரம் உள்ள மார்சல் தீவுகள் 2100 மூழ்கிவிடும் என்று கருதப்படுகிறது. 72,000 பேர் வாழும் மார்ஷல் தீவுகளைப் பற்றிய கவலை உலகத் தலைவர்களை வருத்துகிறது. அதே நேரம், அதே பாதிப்புக்கு உள்ளாகும் காவிரிப் படுகையின் நாகை, தி சவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மட்டுமே 56 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். யாரும் கவலைப்படவில்லை. பாதிப்புக்குள்ளாகப் போகிறவர்களும் அதைப் பற்றி யோசிக்கவில்லை.

2015 டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் 196 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இந்த புவி வெப்பமாதல் அபாயத்தைத் தடுத்து நிறுத்த ஒர் ஒப்பந்தத்தை உருவாக்கினர்.
ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது என முடிவெடுத்தனர். இதன் பொருள், வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை உருவாக்குவது, எண்ணெய் -எரிவாயு எடுப்பது,  நிலக்கரியை அகழ்ந்தெடுப்பது போன்ற கொள்கைகள் அறவே கைவிடப்பட வேண்டும் என்பதுதான். தொழிற்புரட்சி தொடங்குவதற்கு முன்னதாக உலகில் நிலவிய தட்பவெப்ப நிலையை மீட்டெடுக்க, 2010ல் வெளியான கார்பன் அளவில் 45 விழுக்காடு அளவிற்கு, 2030-க்குள் குறைத்தாக வேண்டும் என்பதும் இம்மாநாட்டில் ஏற்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு முதல் பாரிஸ் ஒப்பந்தம் அமலாக்கம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்புரட்சி காலமான 1850 முதல் 1900 வரையிலான காலக்கட்டத்தில் இருந்ததைவிட, ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து விட்டது.

 தொழில்மயம் என்ற பெயரில் புகை மயம் ஆனதால்,பசுங்குடில் வாயு,  கார்பன் ஆகியவை  வளிமண்டபத்தில் அதிகரித்து, சூரியனிடம் இருந்து வரக்கூடிய வெப்பத்தை அப்படியே உள்வாங்கி,  பூமியில் தங்க வைக்கிறது. இதனால் புவி வெப்பம் அதிகரித்து, பனிக்கட்டி உருகி, கடல்மட்டம் உயர்ந்து, பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 

 2015 பாரீஸ் ஒப்பந்தப்படி பூமியில் வெப்பத்தை 2 டிகிரி குறைப்பதாக, அதாவது புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதாக ஒப்புக்கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. 

 ஐ.நா. பொது அவையின் 74-வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டன் நகரில் 'மோடி நலமா,'என்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். இந்நிகழ்ச்சியில் மோடியின் கூட்டாளி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்றார். 

 ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரேஸ் ஏற்பாடு செய்திருந்த பருவநிலை நடவடிக்கை மாநாட்டில், இந்தியப் பிரதமர் மோடி,
 "பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்த அமலாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் " என்று பேசினார். பேசும்போது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு விரிவான அணுகுமுறை தேவை. இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உலகளாவிய 'மக்கள் இயக்கம்' தேவை - என்றெல்லாம் பேசினார்.  "பருவநிலை மாற்றம் குறித்து வெறும் பேச்சுக்கான தருணம் கடந்துவிட்டது. இனி செயல்பாடுகளே தேவை" என்று உலக இரட்சகர் போலப்பேசி, தன் பேச்சை நிறைவு செய்தார். 

 இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றும், ஆனால் அந்த இலக்கை 450 ஜிகாவாட் ஆக அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். எங்களது கொள்கை தேவையின் அடிப்படையிலானது" என்றெல்லாம் நீட்டி முழக்கினார். புதை படி வ எரிசக்தியை முற்றிலும் எதிர்ப்பவர் போல அதிரடியாகப் பேசினார்.

 வெளிநாட்டில் காலநிலை மாறுதலை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி, இந்திய துணைக்கண்டத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கதவை திறந்துவிட்டு, அவர்களது தேவைக்கும், இலாபத்துக்கும், எண்ணெய் - எரிவாயு எடுப்பை சகட்டுமேனிக்கு பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

 2015_இல் பாரிசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகுதான், நரேந்திர மோடி மிகவும் அபாயகரமான ஹைட்ரோகார்பன் திட்டங்களை இந்தியாவில் அறிவித்தார்.  2016 மார்ச் மாதம் 'புதிய ஆய்வு உரிமம்' வழங்கும் கொள்கை கைவிடப்பட்டு, ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமம் வழங்கும் கொள்கை (Hydrocarbon Exploration Licensing Policy ) கொண்டுவரப்பட்டது . எண்ணெய் - எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன் , ஷேல் எண்ணெய் - எரிவாயு ஆகியவை அனைத்துக்கும் ஒரே லைசென்ஸ் பெற்றுக்கொண்டு,  மரபுவழிப்பட்ட மற்றும் புதிய முறையிலான அனைத்து வகை தொழில்நுட்பத்திலும், வரைமுறையற்ற வகையில் ஹைட்ரோகார்பன் களை எடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 .03. 2016 அன்று திறந்தநிலை எண்ணெய் வயல்கள் உரிமம் வழங்கும் திட்டம் (Open Acreages Licensing programme ) சேர்க்கப்பட்டது. இதன்படி ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு இசைவான நிலப்பரப்பைக் குறிப்பிட்டு, எண்ணெய் எரிவாயு எடுக்க, அப்பகுதிக்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 2017-இல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், காரைக்காலிலும் ஹைட்ரோகார்பன் சிறிய வயல்கள் திட்ட ஏலம் நடத்தப்பட்டது.

 ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் காவிரிப்படுகையில் 7000 ச.கி.மீ-க்கு மேல் , மூன்று சுற்று ஏலங்களில் பெரு நிறுவனங்களிடம் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  2018 - இல்5094 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 2019 மே மாதம் இரண்டாம் சுற்று ஏலத்தில் 474 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்,  மூன்றாம் சுற்று ஏலத்தில் 1863 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் ஓஎன்ஜிசி, வேதாந்தா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ஒற்றை லைசென்ஸ் முறையில், ஹைட்ரோகார்பன் எடுக்க  வழங்கப்பட்டுள்ளன.

 எண்ணெய் எரிவாயு எடுத்ததால் கிருஷ்ணா கோதாவரிப் படுகையின் பல பகுதிகளில்  நிலம் 6 அடி கீழே இறங்கி இருக்கிறது. இதே நிலை காவிரிப்படுகைக்கு ஏற்படும்போது கடல் காவிரிப் படுகையை விழுங்கும். 

பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்ததால், காவிரிப்படுகை மக்களும், தமிழக மக்களும் எழுச்சி பெற்று போராடும்போது, தமிழக அரசால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்திய அரசு எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி தமிழக அரசுக்கு கட்டளையிடுகிறது. 

 காலநிலை மாற்றத்தைத் தடுத்துநிறுத்த புதைபடிவ எரிபொருள்  பயன்பாட்டைக் குறைக்க உலக அளவில் "மக்கள் இயக்கம் " வேண்டும் என்று வெளி நாட்டில் முழங்குகிறார் நரேந்திர மோடி. ஆனால், அதே கோரிக்கைகளை இந்தியாவுக்குள், தமிழகத்தில் முன்வைத்து மக்கள் போராடினால் , மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், வழக்குகள் கொடுக்கப்படுகின்றன, சிறைக் கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன.

வாயளவில் வெளிநாட்டில் பேசுவதும், உள்நாட்டில் பெரும் முதலாளிகளுக்காக அனைத்து வகையான எண்ணெய் -எரிவாயு எடுப்புத் திட்டங்களைத் திணிப்பதும், விளை நிலங்களைப் பிடுங்கி புகை கக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதும், அனல் மின் நிலையங்களை கடலோரப் பகுதி முழுவதும் நிறுவுவதும், இவையும்,  இவை போன்றவற்றையும் வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசு சுமத்திக் கொண்டு இருக்கிறது.

 இதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தை 16 வயது சிறுமி உணர்த்தியிருக்கிறார். பருவநிலை மாற்றம் குறித்த  ஐநா மாநாட்டில் உரையாற்றிய ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார் :

" இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள் ) உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன துணிச்சல்!"

 உலகத் தலைவர்களைப் பார்த்து கிரேட்டா துன்பர்க் எழுப்பிய கேள்வி வளிமண்டலத்தை அச்சுறுத்தும் மீத்தேன் - ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்ததுதான். இந்திய அரசைப் பார்த்து தமிழ் இளைஞர்கள் எழுப்பவேண்டிய கேள்வி இது. புதை படிவ எரிவாயுவும் எண்ணெய்யும் எடுப்பதால், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுவதால், மக்கள் வாழ்விடங்களில் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதால் நிலமும், நீரும், காற்றும், சூழலும் கெட்டு, மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினம் நோயாளியாக மாறிக்கொண்டிருக்கிறது.  " திட்டத்தைக் கைவிடுங்கள்" என்றால் கைது செய்கிறது அரசு.

காவிரிப் படுகை மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், காவிரிப்படுகையே காணாமல் போகும் நிலை நெருங்கிவரும் சூழலில்,  எண்ணெய் எரிவாயுத் திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொள்ள ஓஎன்ஜிசி, கெயில் போன்ற நிறுவனங்கள் இழிவான உத்திகளைக் கையாளுகின்றன. அப்பாவி மக்களுக்கும், மாணவ - மாணவிகளுக்கும் சிறுசிறு பரிசுப் பொருள்களை, தண்ணீர் எடுக்கும் குவளை,  நீர் கொண்டு செல்லும் சிறு உலோகப் பாட்டில்கள் - இவற்றையெல்லாம் பரிசாக க்கொடுத்தும்,  உள்ளூரில் கபடி, வாலிபால் போட்டிகளை நடத்தியும், விழாக்களுக்கு நிதி கொடுத்தும், பிரமுகர்களாக கருதப்படுபவர்களுக்குக் கையில் இலஞ்சத் தொகை கொடுத்தும், எப்படியாவது இந்த பேரழிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி விட முயற்சி செய்கின்றன. தமக்கு சிறு பரிசுகளைக் கொடுத்து இவர்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் ,தம் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோயையும், இறப்பையும் பரிசாகத் தரக்கூடியவை என்பதை அறிந்திருக்கவில்லை.

கிரேட்டா துன்பர்க் எழுச்சி கொண்டதைப் போல, காவிரிப்படுகையில் மாணவ-மாணவியர்கள் எழுச்சி கொள்வார்கள்; நீண்டகாலம் ஏமாற மாட்டார்கள்.

வெளிநாட்டில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் அழிவுக்கு எதிராக முழக்கமிடுவதும், நாடு திரும்பியதும் புதிய , புதிய வடிவங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அறிவித்துத் திணிப்பதும், மக்களின் கருத்தை ஏற்று திட்டத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், இராணுவத்தைக் களமிறக்கி அச்சுறுத்துவதும், பழங்குடியினரைக் காடுகளிலிருந்து விரட்டுவதும், மீனவர்களைக் கடலிலிருந்து விரட்டியடிப்பதும், விவசாயிகளை வயல்களிலிருந்து விரட்டியடிப்பதுமாக இருக்கிறீர்கள். சொல்லொன்றும் செயலொன்றுமாக இருக்க உங்களுக்கு என்ன துணிச்சல்! 

 நரேந்திர மோடி அவர்களே, கிரேட்டா துன்பர்க் உலகின் முன்னிலையில் காறி உமிழ்ந்ததே உங்களைப் போன்றவர்களைப் பார்த்துதான். திருந்துங்கள்!

 எங்கள் மாணவ-மாணவியர்களும், இளைஞர்களும் கூட கிரேட்டா துன்பர்க் தான், இனி வருங்காலங்களில் .-

___ பேராசிரியர்
 த. செய ராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு . 24.09.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக