வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது சிறுமிக்கு நோபலுக்கு இணையான விருது வழங்கப்பட உள்ளது...

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற  16 வயது சிறுமி  (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார். 

அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி  கூறியதாவது:-

நான் இங்கே இருந்திருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் திருடி விட்டீர்கள். ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்தி தான்.

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது. அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், பணம் குறித்து...  நிரந்தர பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்
உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீது தான் உள்ளன.எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"
என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் 'வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது 'மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.

கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது' என்ற இயக்கத்தின் பெயரில் 'பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன' என்ற பதாகைகளுடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

 இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) 'உலக பருவநிலைமாற்ற போராட்டம்' என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு 'மாற்று நோபல் விருது' என அழைக்கப்படும் 'வாழ்வாதார உரிமை விருது' வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான   விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார்.

பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்கரைஞர் குவோ ஜியான்மெய் மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக