ஞாயிறு, 12 ஜூலை, 2020

*🌷அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமிப்பது சார்ந்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 09.08.2008.*

*🌷அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமிப்பது சார்ந்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 09.08.2008.*

*🌐ஜூலை 12, வரலாற்றில் இன்று:கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 12, வரலாற்றில் இன்று.

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.

1975-ஆம் ஜூலை மாதம் 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கனிகாபுரம் என்ற கிராமத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். இவரின் 4 வயதிலேயே இவரது தாயார் இறந்தார். பின்னர் முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பிலும், புத்தகங்களை முழுநேர நண்பராக்கியும் நா.முத்துகுமார் வளர்ந்தார். இவரது தந்தை, அன்னை புத்தகம் என்ற நூலகத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். அப்போதிலிருந்தே முத்துக்குமாருக்கு புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, பாடல்கள் எழுதுவது என இலக்கியத்தில் தீராத காதல் ஏற்பட்டது.

இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம்   4 வருடங்கள் உதவியாளராக நா.முத்துக்குமார் பணியாற்றினார். பின்னர், சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ் திரைப்பட பாடலாசிரியராக தனது பயணத்தை அடியெடுத்து வைத்தார்.

தமிழை மிக அழகாக கையாண்டு இலக்கியத் தரத்துடன் பாடல்களை எழுதுவதில் நா.முத்துக்குமார் வல்லவர்.  1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

சமகால தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனைவருடனும் கிட்டத்தட்ட பணியாற்றியுள்ள நா.முத்துக்குமார், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக உருவெடுத்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2012வது ஆண்டில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் 103 பாடல்களை எழுதி கவிஞர் நா.முத்துக்குமார் சாதனை படைத்தார். எத்தனையோ மிகப்பெரிய பாடலாசிரியர்கள் கூட ஒரே ஆண்டில் இதுபோன்ற அதிகப்படியான பாடல்களை எழுதியது இல்லை.

பட்டாம் பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், ஆனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம் என்கிற பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்பு, கட்டுரை, நாவல் உள்ளிட்ட படைப்புகளை நா.முத்துக்குமார் படைத்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலுக்கும், சைவம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகே.. அழகே எல்லாம் அழகே.. என்ற பாடலுக்காகவும் இருமுறை தேசிய விருதை நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ள அவர், சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2015-ஆண்டு புதிய தலைமுறை சார்பில் இலக்கியத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது நா.முத்துகுமாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நா.முத்துக்குமாருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு ஜீவலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மிகவும் திறமை வாய்ந்த மனிதர் நா.முத்துக்குமார் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலையாய் நிற்கும் என்பது மட்டும் உறுதி.

*🌐ஜூலை 12, வரலாற்றில் இன்று:மென்பொருள் ஜாம்பவான் சுந்தர் பிச்சை பிறந்த தினம் இன்று(1972).*

ஜூலை 12, வரலாற்றில் இன்று.

 மென்பொருள் ஜாம்பவான்  சுந்தர் பிச்சை பிறந்த தினம் இன்று(1972).

வலைதளச் சேவையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து கல்விச் சிறகு பெற்று, கடல் கடந்த சுந்தர் பிச்சை என்கிற சுந்தர்ராஜன் பிச்சை இந்தியாவுக்குப் பெருமை; தமிழனுக்குத் தலை நிமிர்வு!

லாரி பேஜ், செர்ஜி பிரின் என்கிற நண்பர்களால் 1998-இல் தொடங்கப்பட்ட கூகுள், அண்ட சராசரத்தை விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்து, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டது.

எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகுள் சேவையை இணையத்தில் தொடர்பு கொண்டு தேவைப்பட்ட தகவலைப் பெற முடியும் என்கிற பிரம்மாண்ட கலைக் களஞ்சியத்தை உருவாக்கித் தந்ததுடன் அவர்கள் நின்றுவிடவில்லை.

ஜி மெயில் மின்னஞ்சல் சேவை, குரோம் என்கிற செயலி, யூ-டியூப், ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்பாடு என்று கூகுளின் செயல்பாடுகள் பரந்து விரிந்தவை.

 கூகுள் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையில், ஆல்பபெட் என்ற புதிய நிறுவனத்தை இணைய சேவைக்கென உருவாக்கி, அதன் கீழ் இயங்கும் சகோதர நிறுவனமாக கூகுள் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை கூகுள் நிறுவனத்தின் பொறுப்பை நிர்வகித்த லாரி பேஜ், ஆல்பபெட் நிறுவனத் தலைவராகச் செல்வதால், இந்த வாய்ப்பு சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது.

மேலைநாடுகளைப் பொருத்தவரை, திறமை மட்டுமே மதிக்கப்படும் என்பதையும், ஒரு மனிதனின் அர்ப்பணிப்பான, திறன் மிளிர் உழைப்புக்கு (ஸ்மார்ட் வொர்க்) மிகப் பெரும் மரியாதை கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தவர்களுக்கு சுந்தர் பிச்சை என்ற தனி மனிதனின் சாதனை எத்தகையது என்பது தெரியும்.

அதையடுத்து, அவர் இந்தியர் என்பதால் நமக்கு ஏற்படுத்தி இருக்கும் பெருமிதமும் புரியும். அதற்கும் மேலாக சென்னையில் பிளஸ் 2 வரை படித்தவர் என்பதால் தமிழர்களை தலைநிமிரச் செய்கிறார். ஒரு மனிதனின் உலகளாவிய வளர்ச்சியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

 மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்த பிறகு, மேலாண்மைப் பட்டமும் பெற்று 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் என்கிற வலைதள மென்பொருள் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர்.

இந்த மென்பொருளே தற்போது உலக அளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆபரேடிங் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய மென்பொருள் செயலிகள், செல்லிடப்பேசியில் ஆண்ட்ராய்ட் உள்ளிட்டவற்றை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.

 சுந்தர் பிச்சையின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லாமல் சொல்லும் அறிவுரை இதுதான்: இன்றைய உலகத்தின் தேவை கடின உழைப்பு மட்டும் அல்ல. திறன்மிளிர் உழைப்பு (ஸ்மார்ட் வொர்க்).

இரண்டாவதாக, அர்ப்பணிப்பும், தகுதியும் இருந்தால் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உழைப்பும், திறமையும் இருந்தால் வளர்ச்சி தேடி வரும் என்கிற ஆக்கப்பூர்வ நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சுந்தர் பிச்சை.

கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவி என்பது இத்தகைய விளைவுகளையே இந்திய இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும். இதுதான் இன்றையத் தேவையும்கூட.

 இத்தகைய சிந்தனைகள் உருவாகும்போது, இந்தியாவுக்கு மட்டுமேயான கூகுள் போன்ற மற்றொரு வலைதள சேவை நிறுவனத்தை உருவாக்கவும், விரிவாக்கவும் இளைஞர்கள் ஆர்வம் கொள்வார்கள். சீனாவில் கூகுள், யாஹூ, முகநூல் (ஃபேஸ்புக்) போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

பல்வேறு இணைய சேவைகள், செயலிகளை சீனா தன் நாட்டுக்கு மட்டுமானதாக உருவாக்கிக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கே சுட்டுரையில் கருத்து தெரிவித்தாலும், சீனா செல்கிறபோது, அங்கே டுவிட்டருக்கு இணையான மற்றோர் இணைய சேவை நிறுவனத்தின் மூலமாகத்தான் தனது வருகையையும் சீனர்களுக்கு தன் முகமனையும் தெரிவிக்க முடிந்தது.

 கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை, செயலிகளுக்கு மூலகாரணமாக ஓர் இந்தியர், தமிழர் இருக்க முடியுமானால், ஏன் இந்தியாவுக்கான தனித்துவமான சேவை நிறுவனங்கள் உருவாதல் கூடாது?

இத்தகைய சிந்தனையை சுந்தர் பிச்சையின் உயர்வு ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும்.
 சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா மெட்குரிலேஷன் பள்ளியில் படித்த, சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையால் சர்வதேச அளவில் புகழ்பெற முடிந்திருக்கிறது என்பதைத் தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்வி நிலையங்கள் உணர்த்த வேண்டும். சுந்தர் பிச்சைக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்.

ஆயிரக்கணக்கான சுந்தர் பிச்சைகள் தமிழகத்திலிருந்து உருவாக வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்!

*🌐ஜூலை 12, வரலாற்றில் இன்று:குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 12, வரலாற்றில் இன்று.

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் இன்று.

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் வெற்றி பெற்றார் நேசமணி. இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.

நேசமணி 1895ஆம் ஆண்டு அப்பாவு - ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். அங்கு இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து.

நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ஆம் ஆண்டு வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்றினார்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும், கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார்.

அதைப் போன்று நாகர்கோவில் Bar Associationல் மேல்சாதி வக்கீல்களுக்கும், கீழ்சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப்பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார் நேசமணி.

பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார் நேசமணி அவர்கள்.