வெள்ளி, 10 ஏப்ரல், 2020

PLl_ Extension PLl/RPLl premium payment period due; for march 2020, April,May up to 30.06.2020 without penalty default fee


முதலமைச்சர் பொது நிவாரண நிதி_ அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்த விவரம் கோருதல் சார்ந்து....

தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழ்நாட்டின் புதிய வரைபடம் வெளிவந்துள்ளது...

நோய்களுக்கு எதிரான சிகிச்சைக் கருவிகளுக்கே முன்னுரிமை அளித்து- அறிவை விரிவு செய்து - அகண்டமாக்குவோம்!மனித குலத்தை அழிவிலிருந்து காப்போம்! ~ அய்யா திரு.கி.வீரமணி அவர்களின் வேண்டுகோள்…

மீளாத அச்சமும், மாளாத் துயரமும் மனித குலத்திற்கு...

கரோனா வைரஸ் என்ற தொற்றுநோயின் கொடூரம் இன்னமும் உலகம்முழுவதும் கோரத் தாண்டவமாகவே இருக்கிறது. இதைவிட வேதனையும், மீளாத அச்சமும், மாளாத்துயரமும் மனித குலத்திற்கு அண்மைக்கால வரலாற்றில் எங்கு தேடினாலும் காண முடியாத ஒரு சோகப் படலம்.

மத்திய - மாநில அரசுகள் அவரவர் சக்திக்கு ஏற்ப, யுக்தியைப் பயன்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைமூலம் நிவர்த்தி செய்தல், பரவாமல் தடுக்க ஊரடங்கு, ஒன்று கூடுதலைத் தவிர்த்தல் முதலிய பணிகளைச் செய்து வருகின்றனர்.

அனைத்துக் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஏற்பாட்டின் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், நிறைகளையே மேலும் பெரிதாக்க வேண்டும் என்று கருதி, ஆக்கப்பூர்வ ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

#நமது எல்லையற்ற பாராட்டுக்கும் உரியவர்கள்

இந்த நேரத்தில் மனிதகுலம் முழுவதும் ஒரே பார்வையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பார்வையோடும், ‘ஒத்தறிவு’ என்ற Empathy யோடும் நாடு, ஜாதி, மதம், கட்சி பிரிவுகளையெல்லாம் ஒதுக்கி மூட்டைக் கட்டிவிட்டு, கடுமையான யுத்தத்தில் - அதுவும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடு போராடும் விசித்திரமான போர் - களத்தில் நின்று கைகொடுத்து நோயை விரட்ட, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க, இரவு - பகல் பாராமல் ஊனின்றி, உறக்கமின்றி, சோர்வின்றி, கடமையே கண்ணாகக் கருதி உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறையினர், துப்புரவுப் பணியின் தொண்டறச் செம்மல்கள், காவல்துறை கடமை வீரர்கள், ஆட்சிப் பணிமூலம் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற பணி செய்யும் பெருமக்கள் - ஆகிய அனைவரும் நமது எல்லையற்ற பாராட்டுக்கு உரியவர்கள்.

#நாம் நமது கடமையைச் செய்யவேண்டாமா?

இந்நிலையில், அவர்கள் இந்த அளவு தம் உயிரையும் பொருட்படுத்தாது, களப்பணியின் கடமைகளைத் தாமதிக்காமல் செய்யும்போது, நாம் நமது கடமையைச் செய்யவேண்டாமா?

வேறென்ன?

நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு, நம்மையும் தற்காத்து, மற்ற நம் உடன்பிறவா உறவுகளையும் காப்பாற்றிடும் எளிய கடமையைக்கூட ஒழுங்காகச் செய்யவேண்டாமா?

மனிதனின் பகுத்தறிவு எப்போதும் இயற்கைப் பேரிடரை வென்றே தீரும் என்பது அறிவியல் உண்மை!

#அறிவியலும், அது தொடுத்த போரும்
வெற்றியே கண்டிருக்கிறது

இதற்கு முன்பும் எத்தனையோ கொள்ளை நோய்கள் வந்து கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்த காலத்தில், பிளேக், காலரா, அம்மை போன்ற (அக்காலத் தொற்று) நோய்கள் வந்தும்கூட, அறிவியலும், அது தொடுத்த போரும் வெற்றியே கண்டிருக்கிறது. எனவே, அஞ்சிடாமல், எதிர்கொள்ளும் முறையோடு எதிர்கொள்ளத் துணிவோம்! உலகளாவிய இந்தத் தொற்று, வல்லரசுகள் என்று மார்தட்டிய நாடுகளின் - தன்முனைப்பைத் தகர்த்துள்ளது!

#மக்களுக்குத் தேவை கல்வி அறிவும், நல்வாழ்வுக்குரிய பாதுகாப்பும்தான்

இராணுவத்தினைப் பெருக்கி, வராத போருக்கான கருவிகளைப் புதிது புதிதாய்க் கண்டுபிடித்து, பல லட்சம் கோடி ரூபாய்களை செலவழிக்கும் அரசுகளே, மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்து, அதன் அறிவியல் ஆய்வுமூலம் புதிதாகக் கண்டுபிடித்து மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்தீர்களா? என்று கேட்டு, சிந்திக்க வைக்கும் பாடத்தைத் தருகிறது.

முதலில் மக்களுக்குத் தேவை - கல்வி அறிவும், மக்களின் நல்வாழ்வுக்குரிய பாதுகாப்பும்தான்!

அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டு மல்ல, நம் நாடு போன்ற நடுத்தர, ஏழை, எளிய மக்கள் வாழும் நாடுகள் எவையானாலும், மருத்துவ வசதி என்பது அடிப்படை உரிமை - கட்டாயம். மேல் நிலையில் உள்ளவர்களுக்கும் சரி, சாதாரண மக்களுக்கும் சரி, நோயிலிருந்து விடுபடுதல் என்பதில் பேதத்திற்கு இடமில்லாத சிகிச்சை முறைகள் உலகம் முழுவதும் கிடைப்பதை முன்னுரிமையாக்கித் திட்டமிட்டு செயலாற்றியிருந்தால், இத்தனைப் பேரின் (80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்) இழப்பு என்பது, போர்க்களத்தில் கூட ஒரே நேரத்தில் காண முடியாத, கேட்க முடியாத நிகழ்வுகளும், செய்திகளும் வர வாய்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?

#அறிவியலை நோக்கி  உலகம் விரைந்து செல்லட்டும்!

அடுத்த படிப்பினை - அறிவியலை நோக்கி உலகம் விரைந்து செல்லட்டும். அறிவியலை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கே செலவழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் நின்று, ஒத்த குரலில் முழங்கி உறுதியேற்கட்டும்!

நோய்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்காதபோது - மரணம் ஒரு சமரசம் உலாவும் இடமாகவே இருக்கும்போது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏன் ஏழை, பணக்காரன்; இந்த நாட்டவன், அந்த நாட்டவன்; இந்த மதத்தவன், அந்த மதத்தவன் என்ற பார்வைக் கோளாறும், அணுகுமுறைப் பிழையும் ஏற்படவேண் டும்? இவை அறச் சீற்றத்தை வரவழைக்கும் அநியாய பேதங்கள் அல்லவா? எனவே, கரோனா நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது.

#மனித குலத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றிட...

இனிமேலாவது நோய்க்கு எதிரான சிகிச்சைக் கருவிகளுக்கும், மருத்துவம் - அறிவியல் ஆய்வுகளுக்கும் முன்னுரிமை தந்து - பழைய பத்தாம் பசலித்தன மூடநம்பிக்கைகளுக்கு புது மெருகேற்றாமல், அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, மனித குலத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றிட பாடம் கற்றுக் கொள்வோம். காலம் தந்த கல்லூரிப் பாடம் இது, மறவாதீர்!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்

9.4.2020 
சென்னை