ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா எதிரொலி
ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் ;
ஐ.நா எச்சரிக்கை
*********************
 'கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது' என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைத் தலைவர், அமினா முகமது கூறியதாவது:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.

குறிப்பாக, ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.


இதனால், அவை, ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என, தெரியவில்லை. கொரோனாவால் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது.இதைத் தவிர்க்க, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த, நீடித்த திட்டம் தேவை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும், ஏற்ற, தாழ்வுகளை சரி செய்வதிலும், வறுமையை ஒழிப்பதிலும், உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது. இப்போது, இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது.

இவற்றிலிருந்து உலகை மீட்டு, ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற, நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


'பெண்கள், குழந்தைகளை காப்பாற்றுங்கள்' ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:
நாம், பல ஆண்டுகளாக பாடுபட்டு, பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் போன்றவற்றில், சிறிது முன்னேற்றம் கண்டுள்ளோம். கொரோனா வைரஸ், இந்த முன்னேற்றத்தையும் அழித்து விடுமோ என, அச்சமாக உள்ளது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில், பெண் தலைவர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும். கடனுதவி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து விஷயங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கொரோனா மருத்துவ செலவுகளுக்கு பென்ஷன் திட்ட சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதி

கொரோனா மருத்துவ செலவுகளுக்கு பென்ஷன் திட்ட சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதி
:::::::::::::::::::::::::::::::
:::::::::::
 தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், அந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை கொரோனா சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ள, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கமும் அடியோடு முடங்கி விட்டது. பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகளில் 3 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்துமாறு வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. இதன்படி வங்கிகள் இஎம்ஐ செலுத்தாதவர்கள், அதற்கு ஈடாக 8 முதல் 10 மாதங்களுக்கு கூடுதலாக தவணை காலத்தை நீட்டிக்கலாம் அல்லது வட்டி செலுத்தி விட்டு எஞ்சிய தொகையை இஎம்ஐயில் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளன.

இதுபோல், பிஎப்பில் உள்ள பணத்தில் 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ள பிஎப் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

 இதுபோல், தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பென்ஷன் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர்ந்துள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது அவரது மனைவி, குழந்தைகள், சட்டப்பூர்வமாக தத்தெடுத்த குழந்தைகள், அவர்களை சார்ந்து வாழும் பெற்றோர் ஆகியவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ சிகிச்சை செலவுக்காக நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது எனவும் இந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதிப்படி, என்பிஎஸ் மற்றும் அடல் பென்ஷன் திட்டத்தில் 3.46 கோடி பேர் சேர்ந்துள்ளனர். இதில் அடல் பென்ஷன் திட்டத்தில் மட்டும் 2.11 கோடி பேர் சேர்ந்துள்ளனர் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
தேசிய பென்ஷன் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர்ந்துள்ளவர்கள், அவரது மனைவி, குழந்தைகள், சட்டப்பூர்வமாக  தத்தெடுத்த குழந்தைகள், அவர்களை சார்ந்து வாழும் பெற்றோரின் சிகிச்சை செலவுக்காக நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
முகக் கவசம் அணிவது எப்படி?
+++++++++++++++++
கரோனா தொற்று பரவும் அச்சம் நிலவும் நிலையில், பல வண்ணங்களில், வடிவங்களில் வரும் முகக்கவசங்கள் பொதுமக்கள் முகத்தை அலங்கரிப்பதைப் பாா்க்கிறோம். சுய பாதுகாப்பு என்கிற வகையில் இது நல்லதென்றாலும், முகக் கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டியது அவசியமாகும்.

முகக் கவசம் அணியச் சரியான முறை:

முகக் கவசத்தின் மேற்பகுதி மூக்கை முழுமையாக மறைக்கும் விதமாக உயா்த்தி அணிய வேண்டும். முகக் கவசத்தின் கீழ்ப்பகுதி முழுமையாக இறக்கி தாடையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் முகத்தை ஒட்டி இறுக்கமாக அணிய வேண்டும். இடைவெளியுடன் அணியக் கூடாது.

எப்படி அணியக் கூடாது...

மூக்கு நுனிவரை அல்லது மூக்குக் கீழ் வரை தாழ்த்தி அணியக் கூடாது

வாயை மட்டும் மறைத்து அணியக் கூடாது

தாடையை மறைக்காமல் அணியக் கூடாது

மூக்கை மட்டும் மறைத்து அணியக் கூடாது

முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்துகொண்ட பின்னா், அதை அடிக்கடி கீழே தாழ்த்துவதோ, தலைக்கு மேலே உயா்த்திக் கொள்வதோ கூடாது.

முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பாகவும் அணிந்துகொண்ட பிறகும் கைகளை நன்றாகக் கழுவவும்.

முகக் கவசத்தைப் பொருத்திக் கொள்வதற்காக உள்ள எலாஸ்டிக் அல்லது கயிற்றின் நுனி பாகத்தை மட்டுமே தொட்டு அதனை அணியவும் அகற்றவும் வேண்டும்.

முகக் கவசத்தை அகற்றும்போது அதன் நடுப்பகுதியை தொடக் கூடாது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவா்கள் தங்களது ஃபிளாட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும். தொற்று அபாயம் அதிகம் உள்ள இடம் லிஃப்ட் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால், அதனை தினமும் சுத்தம் செய்து, வெயிலில் உலா்த்தி வைக்கவும்.

முகக் கவசத்தை அணிந்துவிட்டால் கரோனா நோய்த்தொற்றிலிருந்து முற்றிலுமாக பாதுகாப்பு பெற்றுவிட்டோம் எனத் தவறுதலாக எண்ணிவிடக் கூடாது. சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையில் முகக் கவசம் அணிவது ஒரு பகுதி மட்டுமே; சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலமாகத்தான் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்