திங்கள், 11 மே, 2020

கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கப்படுமா?- தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் எதிர்பார்ப்பு...

பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகளின்படி, கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 113 அரசு கலைக் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக அதிகரித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) நெறிமுறைகளின் படி, அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்படுமா என்னும் தங்களுடைய நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று இக்கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறியதாவது:
“இன்றைய சூழலில் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்குக் குறைந்தபட்சம் 35 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 40, 50 வயதுக்கு மேல் அரசுப் பணிகளுக்குத் தேர்வாகும் அரசு ஊழியர்களில், மற்றெந்தத் துறைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வு நீண்டகால இடைவெளியில் நடைபெறுவதால், இப்பணிக்குப் பல்லாயிரக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்கள்.

அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியைப் பெறுவதற்கு கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம் போன்றவற்றிற்குத் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட வேண்டியுள்ளது. உதாரணமாக 22 வயதில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடிக்கும் ஒரு நபர், 24 வயதில் எம்.ஃபில். பட்டமும், 30 வயதில் பி.எச்.டி. பட்டமும் பெறுகின்றனர். இதற்கிடையில் நெட், ஸ்லெட் போன்ற தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்பின்னர் குறைந்தபட்சம் 7.5 ஆண்டுகள் தனியார் கல்லூரிகளில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிய பிறகே, அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுகின்றனர். அதன்பின்னர் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்து குறைந்தது 20 ஆண்டுகள் பணியாற்றி முடிப்பதற்குள்ளாகவே 58 வயதில் ஓய்வு பெற்று விடுகின்றனர்.

அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி
மற்ற அரசுத் துறைகளில் ஒரு நபர் 20 வயது முதல் 35 வயதுக்குள் அரசுப் பணிக்கு வந்து விட முடியும். இவர்களால் 20 முதல் 40 ஆண்டுகள் வரை அரசு ஊழியராகப் பணிபுரிய முடியும் என்பதை இந்நேரத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் யுஜிசி கல்லூரி ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக நிர்ணயித்துள்ளது. இதன்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 6 மாநிலங்களில் 65 ஆகவும், 10 மாநிலங்களில் 62 ஆகவும், 11 மாநிலங்களில் 60 ஆகவும் உள்ள நிலையில் தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே 58 வயதாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரித்துள்ளதை இக்கழகம் வரவேற்கிறது. எங்களுடைய நீண்டகால வலியுறுத்தலை அரசு நிறைவேற்றியுள்ள போதிலும், பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் மாநில பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு பெறும் 60 வயதை, அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அதிகரித்து ஆணையிட வேண்டும் என்றும் இக்கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது”.
இவ்வாறு த.வீரமணி கூறியுள்ளார்.

குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு ~ ஆன்லைன் வகுப்பு குறித்து…

கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில்கொண்டு அரசு பள்ளி திறக்கும் காலத்தை ஒத்திவைக்கப்படுவதை நாம் ஆதரிக்கிறோம்.

பள்ளி திறக்கும் காலம்வரை குழந்தைகளை அப்படியே விடாது கற்றல் செயல்பாடுகளுக்குள் ஈடுபடுத்த அரசு நினைப்பதையும் வரவேற்கிறோம்.

அதேபோது அரசின் திட்டமிடல் எதுவாயினும் அனைத்து குழந்தைகளுக்கானதாகவும் இருக்கவேண்டும். 

தற்போது ஒரே வழிமுறையைக்கொண்டு அனைத்து குழந்தைகளையும் சென்று அடைய முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்.

அனைத்து குழந்தைகளையும் சென்று அடையும் வழிமுறைகளில் இணையதளம் மூலம் கற்பித்தலும் ஒரு வழிமுறையாக அரசு கையாள நினைத்தால் அதனை நாம் ஏற்கிறோம். பிற குழந்தைகளை சென்றடைய வழிமுறைகள் ஏதும் இல்லை எனில் பத்து சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே சென்றடையும் இம்முறையை நாம் முற்றிலுமாக மறுக்கிறோம்.

அப்படியே ஆசிரியர் நேரிடையாகவோ அல்லது இணையதளம் தொலைக்காட்சி என எதன்மூலமாக கற்பித்தல் பணியைத் தொடங்கினாலும் வழக்கமான பாடப்பகுதிகளை கற்பிக்க முயற்சிக்கக்கூடாது. பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வாழ்வியல்திறன்கள், விளையாட்டு, கலை போன்ற பல்வேறு விடயங்களோடுதான் குழந்தைகளை தற்போது அணுகவேண்டும். பொதுவாக சென்றடைய வேண்டிய திறன்களை அளிக்கலாம். 

தற்போது கற்பிக்கும் பாடப்பகுதியை கற்பித்து முடித்ததாகக் கணக்கில்கொண்டு தேர்வில் மதிப்பிடக்கூடாது. 

அலைபேசியை குழந்தைகள் பயன்படுத்த நேரிடும் சூழலில் பல்வேறு சிக்கல்களை நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. 

‌அலைபேசி இணையதளத்தை தவறாக பயன்படுத்துதல்.

‌பெற்றோரிடம் அலைபேசி இல்லாத சூழலில் வேறு நபர்களிடம் அலைபேசி உதவிபெறும் நிலைமையில் குழந்தைகள் தவறாக நடத்தப்படும் வாய்ப்பு (பாலியல் தொந்தரவு, அவமானப்படுத்துதல், வேலை வாங்குதல் போன்றவை)

‌அலைபேசி இல்லாதவர்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகுதல்.

‌உணவுக்கே சிக்கலாகும் குடும்ப நிலைமை புரியாமல் அலைபேசி வாங்க பெற்றோருக்கு நெருக்கடி தருதல்.

‌எல்லாவற்றையும் விட தன் குழந்தையின் படிப்பு பாழாகிவிடுமோ எனும் அச்சத்தில் கடன்வாங்கி அலைபேசி வாங்கும் நிலைக்கு பெற்றோர் நகர்தல்.

‌தனிமனித இடைவெளியைக் கருத்தில் கொள்ளாது ஒரு அலைபேசியை பலர் பயன்படுத்துதல்.

ஆக, மேற்பார்வை இல்லாது குழந்தைகள் இணையதள வசதியுடன் அலைபேசியைப் பயன்படுத்துவதை நாம் ஆதரிக்க இயலாது. 

அனைத்துக் குழந்தைகளுக்கும் சென்றடையும் வழிமுறைகளை அரசு அறிவிக்காத வரை இணையளம் மூலம் கல்வி என்பதை நாம் முற்றிலுமாக மறுக்கிறோம்.

குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நினைவூட்டல் வகுப்புகள் தொடக்கம்~பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு…

மே 11,
வரலாற்றில் இன்று.

நடனக் கலைஞரும், பயிற்றுனருமான மிருணாளினி சாராபாய் அவர்களின் பிறந்த தினம் இன்று.

மிருணாளினி சாராபாய் (11 மே 1918 - 21 ஜனவரி 2016 )இந்தியாவின் பிரபலமான நடனக் கலைஞரும், பயிற்றுனரும் ஆவார்.

அகமதாபாத் நகரில் இவர் கலைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் இவர் 18,000க்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.

பத்மஸ்ரீ பத்மபூசண் உட்படப் பல விருதுகளைப் பெற்றவர்.

மிருணாளினி 1918 மே 11 அன்று கேரளத்தில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மு சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தார். இளம் வயதில் இவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்கு டால்குரோசு பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார்.இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.

விக்ரம் சாராபாய் அவர்களை மணந்து கொண்டார்.
மே 11, வரலாற்றில் இன்று.

எல்லிஸ் ஆர் டங்கன் பிறந்த தினம் இன்று.

அமெரிக்க மண்ணிலிருந்து வந்து தமிழ் திரைத் துறையின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம் எல்லிஸ் ஆர் டங்கன்.

நாடக மரபில் நகர்ந்து கொண்டிருந்த  தமிழ் சினிமாவின் கதை சொல்லும் முறையில் புதுமையைப் புகுத்தியவர். கேமரா கோணம், ஒளியமைப்பு, குறியீட்டுக் காட்சிகள் எனப் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியவர்.

 இவர் அறிமுகப்படுத்திய நெருக்கமான காதல் காட்சிகள் காவிய ரசம் ததும்புபவை. அந்தக் கால கட்டத்தில் ராஜா ராணிக்கதைகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த போது, சமூகத்தில் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்ட  "தாசிப்பெண்"ணையும் (கதை : பம்மல் சம்பந்த முதலியார்),   புலவர், தாசியை உருகிக் காதலிக்கும் "காளமேக"த்தையும் (கதை : பாரதி தாசன்) திரைப்படங்களாக முன்வைத்தவர்.
மே 11, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் இன்று.

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
மே 11, வரலாற்றில் இன்று.

இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய தினம் இன்று.

 இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒரே இடத்தில் 24 ஆண்டுகால இடைவெளியில் நிகழ்ந்தன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தின் பொக்ரான் எனும் இடத்தில் நிகழ்ந்த அணுகுண்டு சோதனைகள்தான் அவை.

முன்னதாக, அணுமின் திட்டத்துக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தொழில்நுட்ப அளவில் ஆதரவு தந்திருந்தன. எனினும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. இந்நிலையில்தான் 1974 மே 18-ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு நடத்தியது மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 ‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்டதால் இந்நிகழ்வு ‘சிரிக்கும் புத்தர்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு தயாரானது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது, உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக்காட்டியது.
அதாவது, அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மேற்கொண்டது. சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.
சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டார். மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனைக்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசியப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்துவிட்டதாக அமெரிக்க அரசு கருதியது. இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28-ல் சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டித்தது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

தி இந்து
மே 11, வரலாற்றில் இன்று.

தேசிய தொழில்நுட்ப தினம் இன்று.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது; இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.