திங்கள், 25 மே, 2020

இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது!

தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது!நசுக்கப்படுகிறது!

இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக  தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)  உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டுக்கடிதத்தின் வழியில் கோரிக்கைகளை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தியது!

இந்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஐஎல்ஓ ஏற்றுக்கொண்டுள்ளது!

இந்திய அரசுக்கு ஐஎல்ஓ கடிதம் எழுதி உள்ளது!
தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்க முடியுமா?

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!

 இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு     தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக     எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று     நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் வகையில் தகவல் பலகை ஒன்று ஏன்வைக்கக்கூடாது?

ஒரு வேளை அஞ்சல் துறையினர் இதுபோன்ற தகவல் பலகை வைக்க நிதியில்லை எனில் தொண்டு நிறுவனங்கள் உதவி பெற்று போர்டு  வைக்க அனுமதிக்கலாமே!
திறந்தவெளிக் கல்விமுறையில் சட்டப்படிப்புகள்!30.06.2020 க்குள் விண்ணப்பம் செய்ய அழைப்பு!
தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தேர்வு !
 இலவச பயிற்சி வகுப்பு !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு !
சிலப்பதிகார
காவியக்காட்சிகள் கண்முன்னே !
கண்ணகியின் கால்தடத்தில்!

காவியக் காதைகள் கல்வெட்டில்!  காவிய
மரங்கள் பூங்காவில்!
01.06.2020 அன்று முதல் மதுரையில் சிலப்பதிகாரப்பூங்கா!
மேதகு.அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை!

வேலைநேரம்  உயர்த்தும் அரசாணை வாபசு !

உத்திரப்பிரதேசத்தில் எசுமா சட்டம் !
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு சூன் 15 இல் தொடங்குகிறது!
மாநிலத்தில் 12,600 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது!
தேர்வு குறித்து ஐயம்-அச்சம்  கொள்வோருக்கு 9266617888 அலைபேசி எண் அளிப்பு!
அழைப்பு கொடுத்தால் மனநல ஆலோசனை  குரல்பதிவுவழியில் அளிப்பு!
02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாள்களில் பதவி உயர்வு/பணிமாறுதல்/உரிமைவிடல்  பெற்றோர்  விபரங்களை 05.06.2020்க்குள் அனுப்பிவைத்திடக்கோரும் செயல்முறைகள்!
இனமானக்
காவலர் ,
பாவலர் ,
நிறுவனர்-
பொதுச்செயலாளர் திரு.க.மீ.,அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்!
💐🙏💐🙏💐🙏💐🙏
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் சார்பில் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் புகழ் வணக்கம் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய (பரமத்தி-வேலூர்) அலுவலகத்தில் 24.05.2020 (ஞாயிறு) பிற்பகல் 03.30மணியளவில்  மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையில்  நடைபெற்றது.

ஆசிரியர் இனக்காவலர் ,
பாவலர் திரு.க.மீ., அவர்களின் திருஉருவப்படத்தினை மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி  புகழ்வணக்க உரை நிகழ்த்தினார்.

மாவட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின்  அமைப்பாளர்களான மாவட்டத் துணைச்செயலாளர்  திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ,
சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் திரு.கா.செல்வம்,
பரமத்தி் ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர், கபிலர்மலை ஒன்றியத் துணைச் செயலாளர்
திரு.இர.மணிகண்டன்  மற்றும்
கபிலர்மலை ஒன்றியத் துணைத்தலைவர் திரு.வி.சிவக்குமார்
ஆகியோர்
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.



மே 25,  வரலாற்றில் இன்று.

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவு தினம் இன்று (2013).

 டி.எம்.சௌந்தரராஜன் மார்ச் 24, 1923 அன்று மதுரையில் சௌராட்டிரக் குடும்பம் ஒன்றில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.

 பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

 இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, தனித்தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

🎼 வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

 2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். உடல்நலம் குன்றிய நிலையில் அவர் மே 25, 2013 அன்று காலமானார்.
மே 25, வரலாற்றில் இன்று.

பார்வையற்ற எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தினம் இன்று.

17,000 அடி உயரமுடைய பனி மலை, 3,000 அடி பனி நீர் வீழ்ச்சிகள்,  நிறைந்த எவரெஸ்ட் சிகரத்தை கடந்து சாதனை படைத்தவர்கள் பலர்... ஆனால் தனது 13வது வயதில் நடந்த விபத்தொன்றில் இரண்டு கண்களையும் இழந்தபோதும் ஒருவர் இந்த சிகரம் தொடும் சாதனையை செய்வதென்ப
து அசாதாரணமான விசயம்.

ஆனால் தன்னம்பிக்கையை துணையாக்கி தனது நீண்ட நாள் கனவான சிகரம் தொடும் முயற்சியை எட்டியிருக்கிறார் எரிக் வைஹன்மாயர். இவர் இந்தச் சாதனையை எட்டியபோது வயது 32. இந்த எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுத் திரும்பிய முதல் 100 நபர்களுக்கு உள்ளாகவே இவரும் ஒருவர் என்பது மேலும் சிறப்பு.

மேலும் பல உலகின் உயரமான சிகரங்களையும் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறந்த பேச்சாளரும்கூட, பார்வையற்றவர்கள் கல்வியான ப்ரெய்லி முறைக் கல்வியைக்கூட இவர் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. தன்னை எப்போதுமே ஒரு பார்வைற்றவராக நினைத்ததே இல்லை எனும் இவருடைய பேச்சு, அனைத்து சாதனையாளருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
எரிக் வைஹன்மாயர் தனது 32வது வயதில் உலகின் முதல் பார்வையற்றவராக எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைத்தார்.
மே 25, வரலாற்றில் இன்று.

ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று.

இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான்.

ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.

தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்.

1938ல்  ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்.

நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.

 இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...

புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..

ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.

ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாக கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன், தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.
மே 25, வரலாற்றில் இன்று.

‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று.

# இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் ராமலிங்க உபாத்தியாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்து விடமும் ஆங்கிலம் கற்றார்.

# சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றி ருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.

# ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் கற்பித்தார்.

# ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.

# பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.

# யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

# ‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.

# ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

# குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

# தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75ஆவது வயதில் (1953) காலமானார்.
மே 25, வரலாற்றில் இன்று.

உலக தைராய்டு  தினம் இன்று.

தைராய்டு பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் வகையிலும் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தைராய்டு கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி வடிவில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஒன்று. இச்சுரப்பி உற்பத்தி செய்யும்
தைராக்சின் (Thyroxine - T4) மற்றும் டிரியோடோதைரோனின் (Triiodothyronine - T3) போன்ற ஹார்மோன்கள் ரத்த ஓட்டத்தின் வழி உடலின் முக்கிய பாகங்களுக்குச் சென்று முக்கியமான சில பணிகளை செய்கிறது. குறிப்பாக, உடல் எடை, வளர்சிதை மாற்றம், இதயம் மற்றும் செரிமான மண்டலத்தின் பணிகள், மூளை வளர்ச்சி போன்ற பலவற்றில் இந்த ஹார்மோன்களின் பங்குள்ளது. உடலின் தேவைக்கு போதுமான அளவு அயோடினை எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்பியைச் சரியான முறையில் செயல்பட வைக்கும்

தைராய்டு குறைபாட்டிற்கான அறிகுறிகள்:

தைராய்டு குறைபாடு என்பது சற்று அதிகமாக காணப்படுகிறது என்றாலும், பெண்களுக்கே இது அதிக அளவில் ஏற்படுகிறது. தைராய்டு குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்புசக்தி பிரச்னை,  வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதல்கள், நீண்டகால மன அழுத்தம், பரம்பரை, ஹார்மோன் சமநிலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத்தின் போதான ஹார்மோன் சமம் இம்மை தைராய்டு பிரச்னை ஏற்பட காரணமாகிறது. தைராய்டு குறைபாடு காரணமாக முன் கழுத்துக் கழலை எனப்படும், கழுத்துப்பகுதியில் கட்டி போன்ற பெரிய வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தைராய்டின் இரு வகைகள்:

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகளைக் கொண்டு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான அளவைவிட அதிக அளவு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன் சுரப்பதன் காரணமாக உருவாகக் கூடியது “ஹைப்பர்தைராய்டு”, உடலின் தேவைக்கும் குறைவான அளவு ஹார்மோன் சுரப்பதால் “ஹைப்போதைராய்டு” உருவாகிறது.

ஹைப்பர்தைராய்டிசம் : எடை குறைதல், முடி உதிர்தல், வெப்பத்தை தாக்கமுடியாத நிலை, மலட்டுத்தன்மை, பயம், பாலியல் இச்சை, கண்களில் நமைச்சல் போன்றவை முக்கிய அறிகுறிகள்

ஹைப்போதைராய்டிசம் : சோர்வாக உணர்தல், குளிர்ச்சியாக உணர்தல், எடை கூடுதல், மலட்டுத்தன்மை, பாலியல் நாட்டமின்மை, கவனக்குறைவு, நினைவுத்திறன் குறைவு, மன அழுத்தம், முடி உதிர்த்தல்

தைராய்டிற்கான அறிகுறிகள் உள்ளோர் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. சிகிச்சை கால அட்டவணை, உடல் பரிசோதனை, தைராய்டு சோதனை போன்றவை மூலம் தைராய்டை அறிய முடியும். தைராய்டின் வகைக் கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையை பரிந்துரைப்பர். கதிரியக்க சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தல், அயோடின் நிறைந்த உணவுகளான மீன், பால், கோஸ் வகை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும், ஒட்டுமொத்த உடல்நலனை பேணுதல், பரிசோதனைகள் செய்துக் கொள்வதன் மூலமும் தைராய்டு பிரச்னையில் இருந்து ஓரளவு தற்காத்துக்கொள்ள முடியும்.
மே 25, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.

திருநெல்வேலி மாவட்டம் முந்நீர்ப்பந்தலில் ஆம் 1866ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த மு.சி.பூரணலிங்கப் பிள்ளை தமிழ் மொழியின் தொன்மையையும்,உணர்வையும் பிற மொழியினரும் அறியும் படி செய்தவர்.இவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த போதும் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக "ஞான போதினி " என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வந்தார்.

பூரணலிங்கம் பிள்ளை தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதி உள்ளார்.இவரது படைப்புகளில் சிறுகதை,நாவல், கவிதை,நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரை, மொழிப்பெயர்ப்பு மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடியும். தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளை பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை  ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.1940ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்க்கு தலைமை தாங்கி வழி நடத்தினார். பூரணலிங்கம் பிள்ளையின் அனைத்து படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
மே 25, வரலாற்றில் இன்று.

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் இன்று.

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இட்டன் பாட்ஷ் அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார்.
அன்றிலிருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.