திங்கள், 7 பிப்ரவரி, 2022

பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பெயர் எழுதும் போது முன் எழுத்தைத் தமிழ்மொழியில் எழுதுதல் சார்ந்த அரசாணையை நடைமுறைப்படுத்த பொது மேலாளர் சுற்றறிக்கை



 

சொற்கள் எனும் சதுரங்க காய்கள்

 சொற்கள் எனும் சதுரங்கக் காய்கள் தங்க.ஜெயராமன் 06 Feb 2022 மொழிகளில் பயிற்சியும் மொழிக் கூறுகளான ஒலி, பொருள், இலக்கணம் பற்றிய அறிவும் நமக்குப் பழக்கமானவை. மொழித் தத்துவம் என்ற மூன்றாவது தமிழ் உலகுக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாதது. மொழி, அர்த்தம், மனம் பற்றிய விற்கன்ஸ்ரைன் (Wittgenstein) சிந்தனைகளை விவாதிக்கும் பேராசிரியர் செ.வே.காசிநாதனின் நூல் இந்தக் குறையைப் போக்கும். விற்கன்ஸ்ரைனை விளக்கும் போது மொழி பற்றிய தத்துவ மரபுகளைச் சொல்லவேண்டியிருக்கும். சுருக்கமாக என்றாலும், நூலின் போக்கிலேயே அதைக் குறையில்லாமல் செய்கிறார் ஆசிரியர். மொழித் தத்துவம் என்ற நெரடான பொருளுக்குத் தமிழைச் செம்மையாகத் தயாரித்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டும். அது உபரிப் பங்களிப்பு; நமக்கு மிகவும் தேவைப்படுவது. அசுரர் தலைவனான விரோச்சனன் ஒரு குளத்தின் நீரில் படிமமாகத் தெரியும் தன் உடம்பையே தான் என்று ஏற்று ஏமாந்துபோகிறான். தேவர்களின் தலைவன் இந்திரனோ அது தானாகவா இருக்கும் என்று சந்தேகிக்கிறான். தன் சந்தேகத்துக்குப் பிரம்மாவிடமிருந்து இந்திரன் 'ஆழமான' விடைகளைப் பெற்றான் என்பது கதை. கதையைச் சொல்லி, இந்திரனுக்கு வாய்த்த இந்த 'ஞானபாக்கியத்தை' நூலின் துவக்கத்தில் நளினமாகப் பகடி செய்யும் ஆசிரியர் அதே தொனியில் தன் விவாதத்தைத் தொடர்ந்து, அந்த ரச ரேகை அழுந்தப் பதிய நூலை முடிக்கிறார்: “எனக்கு ஒரு… வங்கிக் கணக்கிருக்கிறது, செல்போன் இருக்கிறது என்கிறது போல, எனக்கு மனம் இருக்கிறது என்று சொல்வேனா…?” இந்தத் தொனியை அடையாளம் காணும் வாசகர்கள் நூலை ஒரு படைப்பிலக்கியமாகவே வாசிக்க இயலும். மெய்யியலும் மொழி லாவகமும் இவ்வாறு இணைவது அரிது. பெர்ட்ரண்ட் ரசலின் சமகாலத்தவரான லுட்விக் விற்கன்ஸ்ரைன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மெய்யியலாளர். விற்கன்ஸ்ரைன் சிந்தனைகளைப் பற்றிப் பேராசிரியர் காசிநாதன் இலங்கைப் பல்கலைக் கழக மெய்யியல் மாணவர்களுக்காக 1973 முதல் நிகழ்த்திய வகுப்பறை உரைகள் 1983ஆம் ஆண்டில் கட்டுரை வடிவம் பெற்றவாறே இப்போது நூலாகியுள்ளது. நூலின் விவாதத்தை ஆசிரியரின் சொற்களைக்கொண்டே சுருக்கித் தந்திருக்கிறேன். சில இடங்களில் அவர் கருத்து மாறாமல் சொற்களையும், சில எடுத்துக்காட்டு வாக்கியங்களையும் மாற்றியும் சேர்த்தும் கொடுத்திருக்கிறேன். நான் யார்? மொழி, அர்த்தம், மனம் பற்றிய கருத்துகள் பல்லாயிரம் ஆண்டுகள் மனித சிந்தனையை களிம்பாக அப்பிக்கொண்டிருப்பவை. இந்தக் கருத்துக் களிம்பின் பீடிப்பால் மெய்யியலில் அநேக பிரச்சினைகள் எழுகின்றன. தத்துவ ஐயங்கள் உண்மையில் மொழியின் தன்மைபற்றிய புரிதலின் போதாமை. மனம் என்ற அகமும் உடல் என்ற புறமும்தான் நாம் என்ற இருமைச் சித்திரம் நமக்கு இயல்பான புரிதலாகிவிட்டது. விளைவாக, ‘அவன் யார்?’ என்று கேட்க இயல்வது போலவே ‘நான் யார்?’ என்று கேட்பது சாத்தியம்; முதல் கேள்விக்கு விடை தருவதுபோலவே அடுத்ததற்கு விடை தருவதும் சாத்தியம் என்று நினைக்கிறோம். ஒரே வடிவிலிருக்கும் இரண்டு கேள்விகளும் வெவ்வேறு மொழியாடல்கள். “என்னோடு என்றும் விடாது நிற்கும் தாயே, தந்தையே, தேவனே” என்று பிரார்த்திப்பவருடைய மொழி, “இவர் என்னுடைய வீட்டில் இருக்கும் சித்தப்பா” என்று சொல்கிற மொழியாடல் அல்ல என்று நமக்குத் தெளிவாவதில்லை. மொழியின் பயன்பாடு மாறும்போது அதை கவனிக்கத் தவறுவதுதான் பல பிரச்சினைகள் நமக்கு ஆழமானவையாகத் தோற்றுவதற்குக் காரணம். ‘கொக்கு என்பது என்ன?’ என்பவருக்குக் கொக்கைக் காட்டலாம். ‘மனம் என்பது என்ன?’ என்பதை அதைப்போன்ற கேள்வியாகப் புரிந்துகொள்பவர் கொக்கைக் காட்டியதுபோல மனத்தையும் காட்ட முயல்வார். அதன் இடம், வரம்பு, விரிவு, அது உடலுக்குள் வருவது, போவது பற்றிய விசாரணைகள் வளரும். நாம் ‘வலிக்கிறது’ என்பது நம் மனதுக்குத் தெரிவது என்று நம்புவோம். பிறர் ‘வலிக்கிறது’ என்பது நம்முடையது போன்றது தானோ என்ற ஐயமும் வரும். சொல்லை முந்தாது சிந்தனை மொழி பற்றி நம்மிடையே பொதுவாகப் புழங்கும் கருத்துக்களை விற்கன்ஸ்ரைன் விமர்சித்து ஒதுக்குகிறார். சொல்லின் அர்த்தம் சொல்லோடு இணைந்த பொருள் அல்ல, சொல் நம் மனத்துக்குக் கொண்டுவரும் படிமம் அல்ல, சொல் சுட்டும் பெண்மை, மென்மை, வீரம் போன்ற சாரமும் அல்ல. சொல் அர்த்தம் பெறுவது எதனையும் சுட்டுவதால் அல்ல. கோபம், துக்கம், மகிழ்ச்சி என்பவை அர்த்தம் பெறுவது சூட்சுமமான அகத்தில் இருப்பதை ரகசியமாகப் பார்த்துப் பெயரிடுவதால் அல்ல. சொல்லின் அர்த்தம் நாம் விளக்கத்தால் தருவதும், விளக்கத்தால் பெறுவதுமே. தொல்காப்பியர் சொல்வதுபோல் மொழி என்பது மக்கள் கூட்டத்தில் நிலவும் வழக்கைப் பயின்று நமக்குக் கைவருவது என்கிறார் நூலாசிரியர். மொழி ஒரு கருத்துப் பரிவர்த்தனை சாதனம் என்றும் வைத்துக்கொண்டுள்ளோம். இப்படி நம்பும்போது பரிவர்த்தனைக்கு முந்தைய கட்டத்தில் மொழியில்லாமலேயே மனத்தில் கருத்துகள் உருவாகலாம் என்ற அனுமானத்தையும் தவிர்க்க முடியாது. மன நிகழ்வுகளை இன்னதென்று அறிவதற்கும் ஏற்கனவே நமக்கு ஒரு மொழி இருந்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகளைக்கொண்டு புற உலகை அனுமானிக்கவும் மொழி வேண்டும். மொழியில்லாமல் சிந்தனை சாத்தியமாகாது உண்மைகள் பலவகை மொழியில் வரும் ஒன்றின் உண்மையை சோதிப்பது போல் மற்றொன்றின் உண்மையையும், பயனையும் சோதிப்பது பொருத்தப்படாது. ‘உடம்புக்குள் ஆன்மா இருக்கிறது’ என்பதை, ‘இந்த அறையில் நாற்காலி ஒன்று இருக்கிறது’ என்பதைச் சோதிப்பதுபோல் சோதிக்க முடியாது. அப்படி சோதித்து, “இது அர்த்தமற்ற வாக்கியம்” என்போரை பண்பட்ட நகரம் ஒன்றில் வாழ்பவர்களின் செயல்களை இன்னதென்று அறியாது குழம்பும் காட்டுவாசிகள் போன்றவர்கள் என்கிறார் விற்கன்ஸ்ரைன். “முக்கோண வட்டத்தைக் கண்டதாக இவர் சொல்கிறார். நாம் இதை நம்ப வேண்டியதில்லை” என்று சொல்வோமா? இது நம் நம்பிக்கையை அல்லது நிராகரிப்பை வேண்டி நிற்கும் சொல்லாடல் அல்ல; கதைதான் என்று விளங்கிக்கொண்டால் நம்பவேண்டியதில்லை என்று சொல்லமாட்டோம். நூலாசிரியர் இங்கே 'கதை' என்பது பொய் அல்ல. மெய்யும் பொய்யும் மற்றொரு சொல்லாடலுக்கு உரியவை. அர்த்தம் நம் மனப் படிமத்தோடு அல்லது ஒரு சாரத்தோடு இணைத்து நிரந்தரமாக நியமிக்கப்படுவதல்ல. அவை வாழ்க்கைக் கோலங்களோடு தாமும் நெகிழ்ந்து மாறும் இயல்புடையவை. இந்த நெகிழ்ச்சியை உணர்ந்ததால் இருபதாம் நூற்றாண்டின் சமூக, அரசியல், பண்பாட்டுச் சிந்தனையில் ஏற்பட்ட முன்னேறங்கள் அநேகம் என்கிறார் ஆசிரியர். புளியங்கொட்டையும் ராஜாவாகலாம் நாம் உலக யதார்த்தத்தைப் பகுத்தும், தொகுத்தும் காணும் விதம் நம் மொழியாடலின் தன்மையாலேயே நிச்சயிக்கப்படுகிறது. அர்த்த விதிகள் மனித சமூகத்தாலும், மக்களின் கூட்டு நடவடிக்கைகளாலுமே விதிகளாகச் செயல்பட இயலும். சதுரங்க விளையாட்டில் ராஜா என்றால் என்ன என்பதற்கு அந்தக் காயைக் காட்டினால் விளங்காது. ஒரு புளியங்கொட்டையைக்கூட ராஜாவாக வைத்து விளையாடலாம். அந்தக் காய்க்கு சதுரங்க விளையாட்டில் இருக்கும் இடம் அதனை ராஜாவாக்குகிறது. மனம், ஆன்மா என்பதெல்லாம் உண்மையா, ஊகமா? மொழியை அதன் இயல்புக்குப் பொருந்தாத வேலைக்கு இழுக்கும்போதுதான் இந்தக் கேள்விகளே சாத்தியமாகின்றன என்கிறார் விற்கன்ஸ்ரைன். அதாவது, மெய்யியல் செய்யும்போதுதான் சாத்தியம். ‘என் மனம் கனக்கிறது’ போன்ற தொடர்கள் பிழைகளா என்று நாம் கேட்கக்கூடும். பிழைகளல்ல; மொழியின் வளம். இந்தத் தொடர்கள் அந்தந்தக் கணங்களில் பிடித்த நிழற்படங்களல்ல. தான் இருந்தவாறே, தன்னாலேயே பிரதிபலிப்பவை அல்ல. அவை நம் வாழ்க்கையின் ஓட்டம்பற்றிய கதைகள். அவை வாழ்வினிடையே பிறருடன் சேர்ந்து ஆக்கிய யதார்த்தம் என்கிறார் ஆசிரியர். மாறும் காலத்துக்கு ஒப்ப, முன்பு மனத்தில் செய்வதாகச் சொன்ன கணக்கை இப்போது நியூரானில் செய்வதாகச் சொல்வோம்; அவ்வளவுதான். மனம் மறைந்துபோகாது. சொல்லாக்கம் என்பது தமிழ் உலகில் இன்று முனைப்பான நடவடிக்கை. இந்தப் பின்னணியில் ‘பிரத்தியேக மொழி’ பற்றிய நூலின் பகுதியை கவனிக்கவேண்டும். புதிய சொல் ஒரு பொருளின் பெயராகச் செயல்பட நூலாசிரியர் சொல்வதுபோல், “மொழி என்ற ஆட்டமேடையில் வேறு எத்தனையோ ஒழுங்குகள் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்”. அதை பெயர்ச் சொல்லாக அறியும் ஒழுங்கு அவற்றுள் ஒன்றுதான். இவ்வளவு நுட்பத் திறன் உள்ளவர்கள் தான் கண்டதை உலகம் முழுதும் உள்ள வாசகர்கள் காணவேண்டும் என்ற ஆசையில் ஆங்கிலத்தில் நூல் செய்வது அறிவுலக வழக்கம். பேராசிரியர் காசிநாதன் தமிழில் நூல் செய்திருப்பதை இந்தச்சூழலில் நாம் மதிக்கப் பழகலாம். மொழி பற்றிய தத்துவ விசாரணையைத் தமிழில் முறையாகத் துவக்கிவைக்கும் திறனுள்ளது இந்த நூல். இன்னும் நாம் பயிலவேண்டியிருக்கும் மொழித் தத்துவத்துக்கு காசிநாதன் சிறந்த தமிழ்ச் சொல்லாடல் ஒன்றையும் நூல் வழியாக உருவாக்குகிறார். மெய்யியல்பற்றி தமிழில் எழுதுபவர்களுக்கு இந்தச் சொல்லாடல் உருவாக்கத்திற்கான தீவிரத் தேவை புரியும். நூலாசிரியரின் தெளிவான தமிழாக்கத்தில் விற்கன்ஸ்ரைன் நூலிலிருந்து பொருத்தமான மேற்கோள்கள். நூலின் நிறுத்தக் குறிகள் சற்று வேறுபாடாகத் தெரிந்தாலும் தர்க்க மொழியின் நகர்வுக் கட்டங்களுக்குக் கச்சிதமாக அமைகின்றன. எந்தத் தமிழ்ச் சொல் எந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகப் பயன்பட்டிருக்கிறது என்பதை நூலின் இறுதியில் ஆசிரியர் பட்டியலிட்டிருப்பது இவ்வகை நூலுக்கு மிகவும் பொருத்தமானது. கனத்த பொருள் என்றாலும், நூலின் மொழி நடையில் எதிரே நின்று உரையாடுவதுபோன்ற லாவகம். நூலின் இலங்கைத் தமிழ்க் கூறுகள் ஆசிரியரின் கருத்துகளுக்குத் கூடுதலான தெளிவையும் துல்லியத்தையும் தருவது நம் வாசிப்பு அனுபவத்தில் சுவாரசியமான பகுதி.. விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்



தம், மனம் ஆசிரியர் : செ.வெ. காசிநாதன் சென்னை, பக்கம்: 155 விலை: 375 க்ரியா (2021) நூலாசிரியர் செ.வெ.காசிநாதன், பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலும் தமிழும் கற்றவர். இருபது ஆண்டுகள் அங்கேயே கற்பித்த பேராசிரியர். லண்டன் பல்கலைக் கழகத்தில் டீ.டபிள்யூ. ஹம்லினின் வழிகாட்டலில் ஆய்வு செய்தவர். முப்பது ஆண்டுகளாக ஆஸ்த்திரேலியாவில் மெல்பனில் வாழ்கிறார் தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பள்ளிக்கல்வி_ தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு 2021-2022


 Click here for download pdf

BEO selection List published for the years 2018-19 -TRB 04.02.2022







 



தமிழக ஆளுநரின் அதிகார மீறல்

 தமிழக ஆளுநரின் அதிகார மீறல்


கே.சந்துரு


 06 Feb 2022


தமிழ்நாடு சட்டப்பேரவையானது, நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியதுடன், மறுபரிசீலனைசெய்யும்படி பேரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பு புரிந்துகொள்ளக் கூடியது. விளைவாகவே ஆளுநரின் அதிகார வரையறை என்ன என்ற விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


1967-ம் வருட பொதுத் தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதுடன், முதல்வராக அண்ணா பதவியேற்றார். இந்தியா முழுதும் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது அதுவே முதல் முறை. இதனால் காங்கிரஸ் கட்சி பதவியில் இல்லாத மாநிலங்களில் மாநிலங்களின் உரிமை பற்றியும், அம்மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆளுநர் எப்படி நியமிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அண்ணா அவர்கள் தனக்கே உரிய பாணியில் ”ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்ற கேள்வியை எழுப்பியது மக்களைக் கவர்ந்தது


அண்ணாவின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற கலைஞர், அரசமைப்புச் சட்டத்தில் மாநில சுயாட்சி பற்றியும், ஒன்றிய - மாநில உறவுகள் பற்றியும் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான உயர்நிலைக் குழு ஒன்றை அறிவித்ததுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னாரையும் நியமித்தார். அக்குழு அளித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒன்று, ஆளுநர் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவாக ஆளுநரின் நியமனத்திற்கான ஒப்புதலை மாநில அரசுகளிடமிருந்து பெற வேண்டும் என்பதாகும். ஆக, இந்த விவகாரத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து விவாதித்துவருகிறது.


ஆளுநர்களின் வரலாறு


கடந்த 50 ஆண்டு காலத்தில் மாநில ஆளுநர்களை ஒன்றிய அரசிலுள்ள ஆளுங்கட்சி, தனக்கேற்ற முறையில் நியமித்து வந்ததுடன், மாநிலங்களிலுள்ள அரசுகளின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில் செயல்பட வைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சிகளில் ஏற்படும் உள்கட்சி சண்டைகளைத் தவிர்ப்பதற்கும், அதிகார மையங்களை மாற்றுவதற்கும் அக்கட்சிகளின் பொறுப்புகளிலிருந்த முதுபெரும் தலைவர்கள் வேற்று மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். “ஆளுநர் மாளிகை ஒன்றிய ஆளுங்கட்சிகளின் சதி ஆலோசனை செய்யும் இடமாகவே செயல்படுகின்றன” என்று பல மாநிலங்களிலும் பல முறை குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன.  


தமிழ்நாட்டில் 1976-ல் திமுக அரசை நீக்குவதற்கு ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் சாராம்சம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. மாறாக, திமுக அரசை நீக்கியவுடனேயே அன்றைக்குப் பதவியிலிருந்த ஆளுநர் கே.கே.ஷா கழட்டிவிடப்பட்டு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதேபோல, நெருக்கடி நிலைமைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில் மத்தியில் ஒன்றிய அரசை அமைத்த ஜனதா கூட்டணி அரசு தமிழக ஆளுநராக பிரபுதாஸ் பட்வாரியை நியமித்தது. ஆனால், இரண்டு வருடங்களில் மீண்டும் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. தொடர்ச்சியாக தமிழகத்திலேயே ஆளுநர்கள் பந்தாடப்பட்டதும், ஒன்றிய ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டவர்களாகவும் இருந்து வந்ததைப் பார்த்தோம்.


நீட் தேர்வின் அரசியல்


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை திமுக ஆட்சியைப் பிடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, ‘நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ என்று அது அளித்த வாக்குறுதி. விளைவாகவே, புதிதாக முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையைில் குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார்.


நீதிபதி ஏ.கே.ராஜன் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே, தமிழ்நாடு பாஜகவின் செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் மாநில அரசு குழு அமைப்பதையும், நீட் தேர்விலிருந்து விடுதலை பெறுவதையும் அனுமதிக்க முடியாது என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவ்வழக்கை முதல்கட்ட விசாரணையிலேயே தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். 75 நீதிபதிகள் அடங்கிய பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு சிறு மாநிலத்திற்கு அவர் மாற்றப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டுக்கும் வழிவகுத்தது.


ஏ.கே.ராஜன் தன்னுடைய அறிக்கையில், "நீட் தேர்வுகளுக்குப் பிறகு தமிழக அரசு நடத்திவரும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில்கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில்லை" என்று கூறியதுடன், "இதுவரை தமிழ்நாடு அரசு நடத்திவரும் மருத்துவமனைகளில் சிறப்பான சேவை செய்துவருபவர்கள் நலிவுற்ற பகுதிகளிலிருந்து வந்து மருத்துவக் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றவர்கள்தான்" என்றும் கூறியிருந்தார்


தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில், நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை எதிர்த்து பாஜகவின் நான்கு உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்புசெய்த காரணத்தால் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட சில தினங்களில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். பிஹாரைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியான இவர், ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டபோது, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டதாக அங்குள்ள பல கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இலக்கான வரலாற்றுக்கு உரியவர்.


இழுத்தடிப்புத் தந்திரம்


தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்ற ஆளுநர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் குறித்து முடிவெடுக்காமல் மாதக்கணக்கில் நாட்களைக் கடத்திவந்தார். இதனால் அவருக்கு எதிராக கண்டனக் கணைகள் எழுந்தன. சபாநாயகர் அப்பாவு அகில இந்திய அளவிலான மாநாடு ஒன்றிலேயே, ஆளுநரின் காலக் கடத்தல் நடவடிக்கைக்கு எதிராகப் பேசினார். அடுத்து, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முறையிடுவதற்கு முயன்றபோது, அமைச்சர் அமித் ஷா காலம் கடத்தினார். தமிழ்நாட்டு மக்களின் கோபக்கணைகள் பெருகிவருவதைப் பார்த்தபின், தமிழ்நாட்டு கட்சிகளின் ஆளுநர் எதிர்ப்பு ஆட்சேபனைக் கடிதத்தை 'கடமை'க்காகப் பெற்றுக்கொண்டார்.


மசோதா மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநர் 5 மாதங்களுக்குப் பிறகு 3.2.2022 அன்று திடீரென்று சட்ட மசோதாவை சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவை நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் திருப்பி அனுப்புவதற்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?


அரசமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவில், ஒன்றிய அரசிற்கும், மாநிலச் சட்டமன்றங்களுக்கும் உள்ள அதிகாரப் பிரிவினைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது (7-வது அட்டவணை). ஆனால், கல்வி சம்பந்தமான சட்டங்களைப் பொறுத்தவரை அதற்கான அதிகாரப் பங்கீடு மூன்றாவது பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன், அதுகுறித்த சட்டங்களை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இயற்றலாம் என்று சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து மாநில அரசு விதிவிலக்கு வேண்டும் என்றால் அத்தகைய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை மாநிலச் சட்டமே அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அரசமைப்புச் சட்டம் பிரிவு 200-ன்படி மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றக்கூடிய சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும். அதேசமயத்தில் 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டிய மாநிலப் பேரவை இயற்றிய சட்டங்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவருடைய இசைவைப் பெற்ற பின்தான் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்.


தமிழ்நாடு நீட் விலக்குச் சட்டம், ஒன்றிய அரசின் இந்திய மருத்துவ பிரிவு 10-Dக்கு முரணாக இருப்பதனால் மாநில நீட் விலக்குச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக கோப்புகளை ஆளுநர் தில்லிக்கு அனுப்பியிருக்க வேண்டும். மாறாக மீண்டும் பேரவையின் பரிசீலனைக்கு அவர் அனுப்பியது முறைகேடான செயலாகும்.


ஆளுநர் ரவி மசோதாவைத் திருப்பி அனுப்பும்போது அதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிட்டிருந்தார். ஒன்று, தமிழ்நாடு சட்ட வரைவு ஏழை மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன்களுக்கு புறம்பாக உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கான பரிசீலனையை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு செய்ததுடன், நீதிபதி ராஜன் கமிட்டி அறிக்கையையும் சட்டமன்றத்தில் வைத்தது. உறுப்பினர்கள் அனைவரும் (பாஜக தவிர) இச்சட்டத்தை ஏகமனதாக வரவேற்றிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கரிசனத்தைவிட ஆளுநர் ஏழை மாணவர்கள் மீது அதிகக் கரிசனம் காட்டியிருக்க முடியாததோடு, அவருடைய அதிகார வரம்பில் இப்படிப்பட்ட காரணத்தைக் கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.


ஆளுநர் கூறிய இரண்டாவது காரணத்தில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வின் நன்மைகளைப் பற்றி கூறியுள்ளதனால் மாநில அரசு இச்சட்டத்தை இயற்றுவது சரியல்ல என்று கூறியிருந்தார். ஆனால், கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு உண்டா இல்லையா என்பதுதான். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அனைத்து விதமான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், சிறுபான்மையினருக்கு விதிவிலக்கு அளிப்பதற்குக் காரணம் ஏதுமில்லை என்றும்தான் தீர்ப்பளித்திருந்தது.


ஒன்றிய சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்து சட்டம் இயற்ற மாநிலப் பேரவைக்கு உரிமை உண்டா என்பதைப் பற்றி இதுவரை எந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவில்லை. ஒருவேளை நீட் விலக்குச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தால் அதை எதிர்த்து யாரேனும் வழக்கு தொடுத்தால் மட்டுமே அப்பிரச்சினை குறித்து நீதிமன்றங்கள் கருத்து சொல்ல முடியும்.


ஆளுநரின் அதிகாரம் இங்கிலாந்து மன்னரைப் போன்றதல்ல. அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டமன்றங்களின் அதிகார வரையறைக்கு உட்பட்டும், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கும் உட்பட்டும்தான் செயல்பட முடியும் என்று ஏற்கெனவே 1974-ம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.


இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத தமிழக ஆளுநர், ஐந்து மாதங்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்காக செலவிட்டதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது. மேலும், அவருக்கு நீட் மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கு ஆலோசனை கூறியது பா.ஜ.கவின் அரசியல் சூழ்ச்சியா (அ) அவர் பெற்ற சட்டக் கருத்து உச்ச நீதிமன்றம் கூறியது போல் 'மாட்டுக்கொட்டாய்' சட்டக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற ஒருவரின் கருத்தா என்பது தெரியவில்லை.


ஆளுநரின் இந்த அதிகார மீறலைக் கண்டிப்பதற்காக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் நீட் விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றுவதோடு, சட்ட வரைவைத் திருப்பி அனுப்பிய ஆளுநரையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரலையும் எதிரொலிக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா!


கே.சந்துரு, 

சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; 

சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


சனி, 5 பிப்ரவரி, 2022

நீட் விலக்கு அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்ட முடிவுகள்








 

" ஆதார் " குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை! ஒன்றிய சட்ட அமைச்சகம் விளக்கம்!


 

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு முழுவதும் 10.02.2022 நடைபெறும் - தேர்தல் ஆணையம்




 

பள்ளிக்கல்வி- உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர்பட்டியல் வெளியிடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்




 


அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை! தலைமைப் பதிவாளர் அறிவிப்பு!