சனி, 30 மார்ச், 2019

ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு...

👆தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிப்பதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால், இந்த மடங்கு சில கோடிகளை தாண்டும்.

👆அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில், வாழ்வாதாரத்தை காக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன் போராடினர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்பளத்திற்கு போய் விடுவதாக முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிருப்தி:

👆இது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சை அவரது கட்சியினரே வெளியிட்டது தான் 'ஹைலைட்!' உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு அமைப்பான 'ஜாக்டோ - ஜியோ'வினர், வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர். ஆனாலும், பழனிசாமி அரசு மீதான அவர்களின் அதிருப்தி தொடர்கிறது. அரசு ஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற ஆளுங்கட்சியினர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. இதனால், கடுப்பான அரசு ஊழியர்கள் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல் 18ல் ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சியாளருக்கு கசப்பு மருந்து தர வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

👆இது குறித்து, சமூக வலைதளங்களில் கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தம்பி மனைவி என உறவினர்களிடம் பேசுங்கள் என்ற அழைப்புடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பரப்பும் செய்தியில் இடம் பெற்றுள்ளது...

👆வேலையிழப்பு தடை சட்டம் அரசு வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 56, காணாமல் போன ஓய்வூதியத்திற்கு பிடித்தம் செய்த தொகை, ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியம் இல்லாத நிலை, பதவிகள் மட்டுமின்றி பணிமாறுதல்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம், உரிமைக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறை, பெண்கள் என்றும் பாராமல் இரவு, 11:00 மணி வரை மண்டபங்களில் அடைத்து வைத்து அலைக்கழிப்பு செய்தது.

👆அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல், பெண் ஊழியர்கள் தவித்தது, வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும், புதிய பணியிடத்திற்கு மாறுதல் தந்தது.ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வது, சம்பள உயர்வுக்கான நிலுவைத்தொகை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.
ஜாக்டோ - ஜியோவின் உண்மையான ஒரு விரல் புரட்சியில் உங்கள் சொந்தங்கள் அனைவரையும் இணையுங்கள். மாற்றம் ஏற்பட ஓட்டுப்பதிவு அதிகம் அவசியம். தேர்தலில் ஒரு விரல் மை புரட்சி மூலம் ஆளுவோருக்கு நாம் தருவோம் கசப்பு மருந்து. அதுவே நமக்கு ஏற்பட்ட மணப்புண்ணுக்கு மருந்தாக அமையும்.

👆ஆம், அன்று பகை முடிக்க பாஞ்சாலி, 'எரிதழல் கொண்டு வா' என, வீரமுழக்கமிட்டாள். நவீன பாஞ்சாலியாக மாறுங்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு, மை மூலம் எச்சரிக்கை விடுவோம். இதில், நம் சொந்தங்களையும் சேர்த்து கொள்வோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக