திங்கள், 27 ஏப்ரல், 2020

அகவிலைப்படி முடக்கம்! மத்திய அரசின் தன்னிச்சையானப் போக்கிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை கடும்கண்டனம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக முடக்கி உத்தரவிட்டுள்ள மத்திய அரசை கண்டிக்கிறோம்.!

தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி. அறிக்கை

நாட்டில் உயர்ந்துள்ள விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படி உயர்வு உட்பட அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியின் மூன்று தவனைகளை ஒட்டு மொத்தமாக முடக்கிட தன்னிச்சையாக அரசு வெளியிட்ட உத்தரவு,  48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும், தங்களது ஓய்வு கால வாழ்க்கையை பென்சன் வருவாயை மட்டுமே நம்பி நகர்த்திக் கொண்டிருக்கிற 65 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி நூறாண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை மறுக்கும் மத்திய அரசின் செயல் ஏற்கத்தக்கதல்ல !

கொரோனா வைரஸுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் சவால்களை எதிர் கொண்டு, எந்தவித ஆபத்துகளையும் பெரிதென நினைக்காமல், போதுமான “பணியாளர் பாதுகாப்பு உபகரணங்கள்” ( PPE ) அரசினால் வழங்கப்படாத போதும் கூட,  24 மணி நேரமும் குடும்பத்தையும் மனைவி மக்களையும்  மறந்து  பணியாற்றுவதன் மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர் என்பதை  நாட்டு மக்கள்  நன்கு அறிவார்கள்!
டாக்டர்கள்,மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த நெருக்கடி நேரத்தில் மிகவும் அவசியமான  பல்வேறு “ பணியாளர் பாதுகாப்பு உபகரணங்களை”   ( PPE )  தயாரிப்பதில் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளனர், ரெயில்வே, தபால், மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பாதுகாப்பு சிவில் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை  பிரதமரின் நிவாரன நிதிக்கு வழங்கியுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் PM- CARES நிதிக்கு இரண்டு நாட்கள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் PM-CARES க்கு சேகரிக்கப்பட்ட நிதி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கத்துக்கு அவ்வப்போது தொடர்ந்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. . அரசு ஊழியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் புறக்கணித்து, கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை நசுக்க முற்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது !

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இனாம் அல்ல! மாறாக விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காகவும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காகவும்  சட்டப்பூர்வமாக ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையாகும்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் முழுமையாக தோற்றுப்போயிருக்கிற மத்திய அரசு, அகவிலைப்படியை முடக்கியிருப்பது “ குதிரை குப்புற தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக” உள்ளது! அண்டை நாடுகளுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட நெருக்கடி நேரங்களில் எல்லாம் அரசுக்கு பக்க பலமாக செயலாற்றிய மத்திய அரசு ஊழியர்களை இந்த உத்தரவின் மூலம் வஞ்சித்துள்ளதோடு அரசு எடுக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கொரோனாவின் பெயரால் அரசு நியாயப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கதாகும்!

 திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு  தொழிலாளர்களின் மீது பொருளாதார தாக்குதலை தொடுப்பதற்கு பதிலாக அரசியல் இலாபத்திற்காக முன்னெடுத்துள்ள, 98 ஆயிரம் கோடி செலவிலான மும்பை- அகமதாபத் அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்தையும், புது தில்லியில் எழுப்ப திட்டமிட்டுள்ள 20,ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான புதிய பாராளுமன்றக் கட்டிடம் உட்பட மத்திய விஸ்டா திட்டத்தையும் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு அத்தொகையை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். நாட்டு மக்கள் ஒருபுறம் கொரோனா அச்சத்தாலும் மறுபுறம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து , தவித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே 2063 கோடி ரூபாய் செலவில் பட்டேல் சிலையை நிறுவி தங்களது அரசியல்  நோக்கங்களை நிறைவேற்றி கொண்டதைப் போன்று அல்லாமல் மக்களின் உயிர் காக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட மத்திய அரசு முன்வர வேண்டும் .
தற்போது அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி முடக்கத்தினால் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ஜனவரி 2020 முதல் ஜீன் 2020 வரை 4% ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்திற்கு 3% மற்றும் ஜனவரி 2021 முதல் ஜீன் 2021 வரை 3%  ஆக மொத்தம் சம்பளத்தின் 10% இழப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல ஏழாவது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி இருபத்தைந்து சதவீதத்தை எட்டும் போது , தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டு தற்போதுள்ள  சென்னை உள்ளிட்ட X  நகரங்களுக்கு 24%,லிருந்து 27% சதவீதமாகவும்,  Y  நகரங்களுக்கு 16% லிருந்து 18% ஆகவும், Z  நகரங்களுக்கு 8% லிருந்து 9% ஆக உயர்த்தி வழங்கப்படுவதும்  அரசின் இந்த உத்தரவினால் தற்போது முடக்கப்பட்டுள்ளது!  அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அரசின் இந்த உத்தரவை காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படும் அபாயமும் உள்ளது! அரசின் இந்த தாக்குதல் தொழிலாளர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்தி அவர்களின் செயல் பாடு மற்றும் உற்பத்தி திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
எனவே அரசு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதோடு ஏற்கனவே மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த 4% அகவிலைப்படியை வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்று தொமுச பேரவையின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.