சனி, 20 ஜூன், 2020

*🌐ஜூன் 20, வரலாற்றில் இன்று:உலக அகதிகள் தினம்.*

ஜூன் 20, வரலாற்றில் இன்று.

உலக அகதிகள் தினம் இன்று.

"நான் பிறந்த மண்ணில் பொருளாதார தாக்குதல் நடைபெற்றன, தொடரும் உள்நாட்டு கலவரம், நாடுகளுக்கு இடையேயான மோதலால், என்னால் அங்கே வாழ முடியவில்லை என இடம் பெயர்ந்து வாழ வழித்தேடி வந்தோம் என வேறு நாட்டுக்கு சென்று முறையிடும் ஒவ்வொரு மனிதனும் அகதி தான்.

சிரியாவோ, இலங்கையோ, வங்கதேசமோ, மியான்மரோ, திபெத்தோ, ஆப்கானிஸ்தானே, ஈராக்கோ, லிபியாவோ எந்த நாடாகயிருக்கட்டும், உலகில் நாடுகளுக்கு இடையிலான மோதல், உள்நாட்டு கலவரம் தான், சொந்த மண்ணை விட்டு உறவு என்று சொல்லிக்கொள்ள முடியாத பிற தேசத்துக்கு மக்கள் அகதியாக செல்வது அதிகரித்து வருகின்றன.

சொந்த நாட்டு மக்கள் மீது இனம், மொழி, மதப்பாகுபாடு கொண்டு சக மனிதனை அழிப்பதால் தான் பெரும்பாலான மக்களின் இடப்பெயர்ச்சி நடக்கிறது. அதுவும் பெரும்பான்மையான மக்கள் வாழும் நாட்டில் அந்த மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள். அந்த பெரும்பான்மை மக்களின் ஆசைக்காக சிறுப்பான்மையினமாக உள்ள மக்களை அரசாங்கமே முன் நின்று நசுக்குவது, உரிமைகளை பறிப்பது என்பது காலம் காலமாக நடப்பது தான், ஆனால் இப்போது அது அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து போராடியும் உரிமை கிடைக்காமல், உயிருக்கு பயந்துக்கொண்டு அந்நிய தேசத்துக்கு சென்று அடைக்கலம் தேடும் அகதிகள் 21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு வரை வாணிபம் செய்ய இடம் பெயர்ந்தவர்கள் இன்று வாழவே முடியாத நிலையில் இடம்பெயர்கிறார்கள்.

உலகளவில் இன்று, 12 கோடி அகதிகள் தன் தாய்நாட்டை விட்டு பிற நாட்டிலும், உள்நாட்டிலேயே அகதியாக 35 கோடி மக்களும் உள்ளதாக ஐ.நாவின் யுனிசெப் நிறுவனம் 2014ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்தை வைத்து கூறுகிறது. உலகளவில் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் கடந்த 15 ஆண்டுகளாக அதிகளவில் அகதிகளாக உருவாகியுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் சோமாலியாவும், ஈராக்கும், சிரியாவும் வரிசை கட்டி நிற்கிறது. இந்த நாடுகளில் நடப்பது முழுக்க முழுக்க உள்நாட்டு இனமோதல்களே. அதேபோல், 50 ஆண்டுகளாக அகதிகளாக அதிகளவு மக்கள் இடம் பெயர்ந்து இன்று உலகில் 55 நாடுகளில் இலங்கையை சேர்ந்த ஈழ தமிழ் மக்கள் அகதிகளாக தஞ்சடைந்துள்ளனர். இந்த அளவுக்க வேறு எந்த நாட்டு அகதிகளும் கிடையாது என்கின்றனர்.

அகதிகளாக தஞ்சமடைபவர்கள் அருகில் உள்ள நாடுகளில் தான் அதிகளவில் தஞ்சமடைகின்றனர். வங்கதேசம், மியான்மார், இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவிலும், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிலும் என அகதிகளாக செல்கின்றனர். அகதிகளாக செல்ல நேரிடம் மக்கள், தங்களுக்கு தோதான நாடுகளாக மேற்கத்திய நாடுகளையே அதிகம் விரும்புகின்றனர். ஐரோப்பிய நாடுகள் அதில் முன்னிலை வகிக்கின்றன. காரணம், அகதிகளுக்கான முழு சலுகையை இந்த நாடுகள் வழங்குகின்றன. மற்ற நாடுகள் அதில் 25 சதவிதத்தை கடைப்பிடித்தாலே பெரியதாக இருக்கின்றனர்.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு அகதியாக செல்பவர்கள் நடந்தோ, படகுகளிலோ தான் கள்ளத்தனமாக நீண்ட தூரம் பயணம் செய்து செல்கின்றனர். அப்படி செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதி உரிமை பெறும் முன்பே பல்வேறு இயற்கை காரணங்களால் மரணத்தை தழுவுகின்றனர் என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

அகதிகளுக்கான உரிமைகள் பெற்று தர, அவர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை, அகதிகளுக்கான ஆணையம் என ஒன்றை 1954 டிசம்பர் 14லேயே உருவாக்கிவைத்துள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற போது தான் அகதிகள் உருவாக்கம் அதிகரித்தது. அப்படி இடம் பெயரும் மக்களுக்கு பல சிக்கல்கள் எழுந்தன. இது உலக நாடுகளில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தின. இந்த பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு அகதிகளுக்கான ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம், அகதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்கள். இதன் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. அகதிகள் நலனில் சிறப்பாக செயல்படுவதாக இரண்டு முறை நோபால் பரிசு பெற்றுள்ளது இவ்வாணையம்.

2000த்துக்கு முன்பு வரை ஆப்ரிக்கா நாடுகள் அகதிகள் உருவாவதை தடுக்க, அகதிகள் தினம் என ஜீன் 20ந்தேதியை முன் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தன. கடந்த 2000 டிசம்பர் 4ந்தேதி நடந்த ஐக்கிய நாட்டு சபையில் ஆணையம், ஆப்ரிக்கா நாடுகள் உருவாக்கிய ஜீன் 20 என்கிற அகதிகள் தினத்தை, ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்மென தீர்மானம் கொண்டு வந்தது. அந்த நாளை ஐ.நாவும் ஏற்றுக்கொண்டது, அதன் உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக இன்று உலகமே  அகதிகள் தினம் கடைப்பிடித்து வருகிறது.

128 நாடுகளில் 11 ஆயிரம் பணியாளர்களுடன் அகதிகளுக்காக ஐ.நாவின், அகதிகள் ஆணையம் செயல்படுகிறது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக