புதன், 16 ஜனவரி, 2019

கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்...

2019 கல்வி ஆண்டு முதல், அனைத்து கல்வி நிலையங்களிலும், 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேறியது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த மசோதா, பெரும்பாலானோர் ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி,  இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், இந்த மசோதா, சட்டமானது. ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளோர், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் உள்ளோர், நகர்ப்பகுதியில், 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர், இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதி உடையோராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்~ மத்திய அரசு ஒப்புதல்…

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனால் இவர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பலன்கள் நீட்டித்து வழங்கப்படுகிறது.  இதனை 2016 ஜனவரி 1ந்தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.  

தபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்~வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்…

'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் புதிய வங்கி சேவை பயன்பாட்டிற்கென அலைபேசி செயலியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் வங்கி சேவை புதிதாக துவங்கப்பட்டது. 

இவ்வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை டிபாசிட் செய்யலாம். பண பரிமாற்றங்களுக்கு, தபால் துறை வங்கியில் பணம் எடுக்க எவ்வித கட்டணமும் கிடையாது. கடன் மற்றும் கிரெடிட் கார்டு கிடையாது. பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப்படும். பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யலாம். புதிதாக கணக்கு துவங்க ஆதார் கார்டு எண் மட்டும் போதும்.

ஐ.பி.பி.பி. வங்கி செயலி: தபால் துறை'ஐ.பி.பி.பி.,' எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் வரவு செலவுகளை பார்க்கலாம். பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும்.

மின்சாரம், அலைபேசி, தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி ஆதார், பேன் எண்ணை இணைத்தல், வாரிசு, முகவரி மற்றும் இமெயில் மாற்றமும் செய்யலாம். போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


குடியரசு தின விழா நாளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்~ பள்ளிக்கல்வி இயக்குனர்…

குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15, நவ. 14., தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு, தனித்திறமையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்க வேண்டும். மேலும் தேர்ச்சி விகிதத்தில் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில பெற்றோர் -ஆசிரியர் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் ரமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் ஒன்றிய செயற்குழு கூட்டம் ~ நாளிதழ் செய்திகளில்....

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

தொடக்கக் கல்வி- அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டமை, உபரி இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்து ஆணையிடல் -சார்பு...

21.1.2019 தமிழகம் முழுவதும் 2381அங்கன்வாடி மையங்களுக்கு,இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணி நியமனம் செய்யயுள்ள ஆணையினை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அங்கம் வகிக்கும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஒருமித்த முடிவு செய்து அறித்துள்ளது...


அங்கன் வாடியில் இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செல்வதை கண்டித்து, வரும் 18/I/19 அன்று ஜாக்டோ ஜியோ  ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளது.

மாறுதல் ஆணைகளை ஆசிரியர்கள் பெற வேண்டாம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்  கேட்டுக் கொள்கிறது.

பொங்கல் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நீதிமன்றத்தை நாட இருக்கிறது,  அதற்கான நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் உடனே தடையாணை பெறுவதற்கு விரைந்து செயல்படுதல் உள்ளிட்ட அனைத்து முயற்சியும்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.

மாற்று இயக்கத்தினர், சில மன்ற உறுப்பினர்களை அணுகி நீதிமன்ற செல்ல தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்தால், அதனை மன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கவும்,

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு மூலம் நீதிமன்றத்தை 
நாட உள்ளது என்பதை ஆசிரிய பெருமக்களுக்கு ம் மன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  
தெரிவித்துக் கொள்கிறது.

பாவலர்
க.மீனாட்சிசுந்தம் Ex.mlc,
பொது செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்!

அன்பானவர்களே!வணக்கம் .

சமூகநலத்துறையின் அங்கன்வாடி மைய எல்கேஜி.,யூகேஜி.,
வகுப்புகளுக்கு தொடக்கக்கல்வித்துறையின் இடைநிலை ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர் எனும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி்அமைச்சர் அவர்களின் கூற்றைக் கவனித்து ,
எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து கொள்வீர்!, 18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்! 
-முருகசெல்வராசன்.,
மாவட்டச்செயலாளர்.,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை)