புதன், 18 டிசம்பர், 2019

தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் பதக்கம் வென்ற மாணவ/மாணவிகளுக்கு அரசு பணி ஒதுக்கீடு 2%சதவீதம்- தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


சிந்தனை செய்க!..... தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் , தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லையா?

சிந்தனை செய்க!
--------------------------------
தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் ,
தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லை போலும்?!
******************
தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முதல் சாய்சு தொடக்கக்கல்வித்துறையின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தான் போலும்.
தொடக்கக்கல்வி துறையின் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் ஒருவர் விடாது பணிநியமனம் அளித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போலும்.
இதனால் தான் என்னவோ இறந்து போன ஆசிரியர்களுக்கு கூட வஞ்சனை இல்லாது பணிஆணை வழங்கி விடுகிறார்கள். பணிநிறைவு பெற்றவர்கள் மனம் கோணாதும் பார்த்துக் கொள்கிறார்கள்.  பணிநிறைவு ஆசிரியர்களுக்கும் ஆணைகளை
வாரி வழங்கி விடுகிறார்கள். மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்ணாசிரியரின் பிஞ்சுக்குழந்தை சிணுங்கினால்  மனம் தாங்கிக் கொள்ள இயலாதென, குழந்தைபிறந்து இரண்டு மாதம்,மூன்று மாதம் ஆகிஉள்ள  இவ்வாசிரியைக்கும் ஆணை தந்து விடுகின்றனர். இதையெல்லாம் விட திசம்பர் மாதத்தில் குழந்தைப் பேறுக்கு 
நாள் குறிக்கப்பட்டுள்ள வயிற்றில் பிள்ளையைத் தாங்கிக் கொண்டுள்ள பெண் ஆசிரியைக்கும் வஞ்சகமின்றி பணியாணை வழங்கிவிடுகின்றனர்.
குழந்தைப் பராமரிப்புக்கு 18மாதம்காலம் விடுப்பு அளிக்கும் இந்திய தேசத்தில் தான் தேர்தல் என்று வந்துவிட்டால் பாலூட்டினால் என்ன?!பாயாசம் குடித்தால் என்ன?!மோர் குடித்தால் எங்களுக்கு என்ன?!தேர்தலுக்கு வந்து சேர்!என்று உத்தரவு இடுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிக்கு விலக்கு என்பதெல்லாம் "சுத்த கம்பக்" என்று சொல்லும் அளவிற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் ஒரு ஆணைக்கு இரண்டாணைகள்  தருகிறார்கள். இரத்து செய்து தாருங்கள் என்றால் மனிதாபிமானத்தோடு வட்டாரக்கல்வி அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகமென அங்குமிங்கும் வரவழைத்து  இந்த பெயருக்கெல்லாம் முடியாது; வாய்ப்பில்லை என்று பணிபார்க்க பணிப்பார்கள்.
இருதய பாதிப்பா?சிறுநீரகம் பாதிப்பா?கண்கள்பாதிப்பா?நரம்பு பாதிப்பா?எலும்பு பாதிப்பா? எந்தப் பாதிப்புக்கும் நிவாரணம் இல்லை; ஆள் இல்லை .
மரியாதையாக பணிபாரும்.
தேர்தல் பணி பார்க்கலையினா இப்ப பார்க்கிற பணியே போயிடுமென அன்பாய் சொல்லி ஆணை பிறப்பிப்பார்கள். கணவனுக்கு, மகனுக்கு,
மகளுக்கு , சிறுகுழந்தைக்கு
உடம்பு சரியில்லை என்றாலும், மகளுக்கு,
மருமகளுக்கு மகப்பேறு என்றாலும்  ,
தனக்கே உடம்பு சரி் இல்லை என்றாலும் 
அதை எல்லாம் இரக்க உணர்வு நிறைய இருந்தும், அறவே
காதுக் கொடுத்து கேளாது
பணிக்கு செல்லுங்கள்
 என்று பண்பாய் சொல்லுவார்கள்.  உயரமான மலை என்றாலும்,
அதல பாதாளம் என்றாலும் கருமைசூழ்
அடர் வனம் என்றாலும்,
கடும் பனிப்பொழிவு என்றாலும், பேருந்து வசதி இல்லை என்றாலும் ,
பெண், ஆண் என்று  பேதம் பாராது
சரிநிகர் சமமெனக்கூறி  ரிச்க்கை...ரச்க்குபோல் சுவைக்கனும்
என்றெல்லாம் ஆற்றுப்படுத்தி  ஒரு வாய் காபிக்கு வழி இல்லாதப் பகுதிக்கு அனுப்பிவைப்பார்கள்.
இதற்கு மேல் ஏதாவது சொன்னால்,
எதையாவது கேட்டால் தேர்தல்பணி ஆற்றும் நேரத்தில்  அசாம்பாவிதம் வந்து 
நடக்க கூடாதது நடந்துவிட்டால் நச்ட ஈடு வீடுபோய் சேர்ந்துவிடும்  என்பார்கள்.

இப்படியாக எல்லாம் இச்டப்படுத்தி , கச்டப்படுத்தி தேர்தல் பணி வாங்குபவர்களே! அரசுப்பள்ளிகளில் 
மாணாக்கர்
சேர்க்கை குறைகிறது. ஆசிரியர்கள் பணியிடம்
உபரி ஆகிறது ஆசிரியருக்கென கட்டாய ஓய்வுத்திட்டம் வருகிறது. அரசுப்பள்ளி இயற்கை மரணத்தை 
நோக்குகிறது. பள்ளியே இல்லை; ஆசிரியரே இல்லை எனும் நிலை வருகிறது என்று ஆரூடம் பிதற்றுகிறது (?!)
ஆமாம் ,  அப்போது எல்லாம்
,இந்த ஆசிரியர் இல்லாத பேரவலம்  சூழும்  போதெல்லாம்   எதிர் வரும் காலங்களில்  தேர்தல்  வேலையை எப்படி செய்வர்?!சிந்தனை செய் மனமே!
இந்த நிலை வரும் போது  ஆசிரியர்கள் குறைவாக பணியில் உள்ளார்கள் 
என்றோ?!
தேர்தல் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது என்றோ ?! தேர்தலையே நடத்தாது விட்டுவிடவா முடியும்.?!
மாற்று யோசனை ஏதாவது செய்து தானே ஆக வேண்டும்.!
அந்த யோசனையை இப்போதே செய்தால்   ,
கோடி புண்ணியமாவது கிட்டாதா?!என்ன?! 

-பாதிக்கப்படுவோருக்கான ஆதங்கக் குரல்...
டிசம்பர் 18,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நினைவு தினம் இன்று.

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாக
வும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்
பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செல்லப்பா அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

 எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

சரஸாவின் பொம்மை
மணல் வீடு
சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்

வாடி வாசல்
ஜீவனாம்சம்
சுதந்திர தாகம்
முறைப்பெண்
மாற்று இதயம்
இன்று நீ இருந்தால்

சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி காலமானார்.


  • இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
டிசம்பர் 18,
வரலாற்றில் இன்று.

நவீன அணு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுகிற ஜெ.ஜெ. தாம்சன் பிறந்த தினம் இன்று.

அணுவியலின் அடிப்படையான எலக்ட்ரானைக் கண்டறிந்தவர். காந்தவியல், மின்சாரவியல், ஐசோடோப்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

1906 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
டிசம்பர் 18, வரலாற்றில் இன்று.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று.

2000இல் யுனெஸ்கோ,
தாய் நாட்டில் வாழ இயலாத போர்/இயற்கை பேரிடர், காரணமாக புலம்பெயர்ந்த மக்கள், உரிமை, பாதுகாப்பு, வாழ்வாதார உரிமை போன்ற மனிதர் குல நற்பணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கும் தினம் இன்று.

வேலைவாய்ப்பு கருதி வெளிநாடுகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தினம் இன்று.

உலகில் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் /சகோதரிகள் என்ற உணர்வை வலுப்படுத்த வேண்டிய தினம் இன்று.
டிசம்பர் 18,
 வரலாற்றில் இன்று.

ரஷ்யாவின் "இரும்பு மனிதர்" ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம் இன்று.

செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தைக்கும், சலவை செய்தும் வீட்டு வேலைகள் செய்வதுமான இருந்த தாய்க்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் ஸ்டாலின்.

புரட்சியாளர் லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் – ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கியவர் ஸ்டாலின்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளைத் தோற்கடித்தார். சோவியத் ரஷ்யாவை ஒரு உலக வல்லரசாக உருவாக்கிய இரும்பு மனிதர் ஸ்டாலின்.

செவ்வாய், 17 டிசம்பர், 2019




🔥தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில்  பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 16.12.2019 பிற்பகல் 5.15 மணியளவில் ஆசிரியர் கோரிக்கைகள் சார்பாக சந்தித்து பேசப்பட்டது. இச்சந்திப்பில் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்,மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  திரு.ப.சதீஷ்,மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார்,ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி ,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,மகளிர் அணி அமைப்பாளர் திருமதி வீ.மாலதி,உறுப்பினர்கள் திரு.காமராஜ்,சூசை அந்தோணி உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இச்சந்திப்பில்  கீழ்க்கண்ட பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.ச.காமராஜ் அவர்களின்  ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பத்தின் மீது விரைந்து ஆணை வழங்கிட வேண்டும்.மேலும் காமராஜ் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஆசிரியர்பயிற்சி பட்டயச் சான்று ஆகிய கல்வித்தகுதிக்கு 6 மாதங்களுக்கு முன் உண்மைத்தன்மை கோரி விண்ணப்பித்தும் சான்று பெறுவதற்கு  காலதாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து உண்மைத்தன்மை  சான்று பெற்றுத்தர வேண்டும்.

தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களின்மீது உரிய ஆணையினை விரைந்து வழங்கிட வேண்டும்.

தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்த  ஆசிரியர்களுக்கு பணிப்பதிவேடு மாவட்டக் கல்வி அலுவலகம் சென்றுள்ளதாகக் கூறி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பங்களை திருப்பி அளிப்பதை விடுத்து  ஒப்படைப்பு தேதி முதல்  ஆணை வழங்கிட வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது.இதில் நிறைவான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

க.சேகர்.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று.

தாம்சன் (சூன் 26 1824 - டிசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த இவர்  இயற்பியல் அறிஞர்  ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 மின்காந்தவியல், வெப்பவியல் என பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை, இவர் நினைவாக கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியியல் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler)ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம்  17-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக் நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

இங்கிலாந்தின் வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான சர் ஹம்ப்ரி டேவி சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy)   பிறந்த தினம் இன்று.

இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.

டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான காப்பு விளக்கு உதவியது.

இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் (1778) தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் அப்பாவை இழந்தார். ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரிகோரி வாட், இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார்.

இளம் டேவிக்கு மிகப் பெரிய உறு துணையாக இருந்து வழிகாட்டினார். அறிவியலில் நாட்டம் கொண்டிருந்த இவர் டேவிஸ் கில்பர்ட் என்ற மருத்துவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

இவரது அறிவுத் திறனாலும் பேச்சாற்றலாலும் ராயல் இன்ஸ்ட்டி டியூட்டில் வேலை கிடைத்தது. அறுவை சிகிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார். நைட்ரஸ் ஆக்சைடின் மயக்க விளைவைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். துணிச்சலுடன் அந்த வாயுவை தானே நுகர்ந்து பார்த்தார். மயக்கமடைந்தார்.

தொடர்ந்து பரிசோதித்து இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார். லாஃபிங் கேஸ் எனப்படும் இந்த வாயுவைக் கண்டறிந்த டேவியின் புகழ் உலகெங்கும் பரவியது.

1756இல் பிரிஸ்டலில் ஃபெனுமாடிக் அமைப்பில் இணைந்த டேவி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒரே வருடத்துக்குள் நைட்ரஸ் ஆக்சைடு குறித்த புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார். இந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 1801இல் ராயல் இன்ட்டிட்யூட்டில் உரையாற்றினார்.

தோல் பதனிடல், வோல்டா மின்கலம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வேதியியல் கூட்டுப் பொருள்களை மின்னாற் பகுப்பு மூலம் எவ்வாறு பிரிப்பது என்பதை இவர் விளக்கினார். சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டினார்.

இந்த அடிப்படையில்,ஆல்கலைஸ்கள் உலோக ஆக்சைடுகளே என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வாயுக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அவை தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தன. குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய பல்வேறு தனிமங்களையும் கண்டறிந்தார்.

ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால், ‘மின்சார ரசாயனத்தின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ஐயோடின் பற்றி ஆய்வு செய்தார். வைரம் ஒரு கரிமப் படிவம் என்பதை நிரூபித்தார். 1815-ல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். இது ‘டேவிஸ் லாம்ப்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், சோடியம், பேரியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்தார். 1812இல் சர் பட்டம் வழங்கப்பட்டது. தனது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

எலிமன்ட்ஸ் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசபி, எலிமன்ட்ஸ் ஆஃப் அக்ரி கல்சுரல் கெமிஸ்ட்ரி மற்றும் கான்சொலேஷன்ஸ் இன் டிராவல் உள்ளிட்ட இவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். ராயல் சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்கள் தொடர்ந்து இந்தப் பதவியில் பணியாற்றினார். பிறந்த நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சர் ஹப்ம்ரி டேவி 1929ஆம் ஆண்டு, 50ஆவது வயதில் காலமானார்.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

ஓய்வூதியர் தினம் இன்று.

இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982 ஆம் நாளில் இந்திய உச்ச நீதிமன்றம் ஓய்வூதியம்
குறித்து வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை நினைவு கூறும் வகையில் இந்த
நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால்
இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.