வியாழன், 4 ஜனவரி, 2018

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும்...


தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

அரசு ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி புகைப்படம், பணியில் சேர்ந்த தேதி, பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை தயாரித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்து வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றது. 
அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி முதல் அனைத்து வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது அணிய வேண்டும். அப்படி அடையாள அட்டை அணியாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக