திங்கள், 1 அக்டோபர், 2018

ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்த 15 நாட்களுக்குள் திட்டம்: அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.