செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஒன்பது வகை தகவல்களுடன் ஸ்மார்ட் அட்டை

🔥🔥🔥ஒன்பது வகை தகவல்களுடன், 'ஸ்மார்ட்' அட்டை

💧💧💧அரசு பள்ளி மாணவர்களுக்கு, ரத்தப்பிரிவு உட்பட, ஒன்பது வகையான தகவல்களுடன், 12 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் தகவல்களை, கியூ.ஆர்., கோடு வழியாக அறிந்து கொள்ளலாம்.

பள்ளி கல்வி துறையில், டிஜிட்டல் முறையில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், புதிய திட்டமாக, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்குவது நிறைவேற்றப்பட உள்ளன. துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஸ்மார்ட் கார்டுக்கான செயல்முறை அறிக்கையை, பள்ளி கல்வி செயலகத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கான செலவை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று, பள்ளி கல்வி செயலர் பிரதீப் யாதவ், நேற்று அரசாணையாக பிறப்பித்தார். இதன்படி, 12.70 கோடி ரூபாய் செலவில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அட்டை தயாரிப்பு பணிகளை, தமிழ்நாடு பாடநுால் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளில், மாணவ - மாணவியரின் பெயர், அடையாள தகவல், பிறந்த தேதி,
தந்தை பெயர், முழு முகவரி, படிக்கும் பள்ளியின் பெயர், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் ஆண்டு, மாணவரின் புகைப்படம், மாணவரின் ரத்த வகை பிரிவு என, ஒன்பது தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த தகவல்களை, பார் கோடு மற்றும், கியூ.ஆர்.,கோடு வழியாக, கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் தகவல்கள் அனைத்தும், பள்ளிகள் வழியாக சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக, டிஜிட்டல் வழியில் தொகுக்கப்பட்டு, அட்டைகள் வழங்க தயார் நிலை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிர் காக்க உதவும் : மாணவர்களின் தகவல்களை, ஸ்மார்ட் அட்டையில் உள்ள, க்யூ.ஆர்.,கோடு அல்லது, பார் கோடு வாயிலாக, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து விலகும் மாணவர், மீண்டும் எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற, தகவலை இதன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை மாணவர்கள் இடையில் விட்டு விட்டால், அந்த விபரங்களையும் எளிதில் அறியலாம். ரத்தப்பிரிவு சார்ந்த விவரம், 'ஸ்மார்ட்' அட்டையில் இருப்பதால், மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும் போது, மருத்துவ சிகிச்சைக்கு, ஸ்மார்ட் அட்டையின் தகவல்கள் உதவியாக இருக்கும்.

தனியார் பள்ளிக்கும் தேவை : அரசு மற்றும் அரசு உதவி பெறும், 45 ஆயிரத்து, 744 பள்ளிகளில் படிக்கும், 70.59 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. மிகுந்த பயனளிக்கும் இத்திட்டம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அறிவிக்கப்படவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து அமல்படுத்தினால் மட்டுமே, மாணவர்களின் தகவல்களை முழுமையாக சேகரிக்க முடியும். எனவே, தனியார் பள்ளிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.