வியாழன், 18 அக்டோபர், 2018

பள்ளி நேரத்தில் 'அலுவலக பணி,' எனக் கூறி ஆசிரியர்கள் C.E.O அலுவலகத்தில் அரட்டை - 10 கண்காணிப்பு கேமரா பொறுத்த மதுரை CEO அதிரடி உத்தரவு

மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலக (சி.இ.ஓ., ) வளாகத்தில் பாதுகாப்பு கருதி 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இவ்வளாகத்தில் மதுரை மாவட்ட கல்வி அலுவலகம் (டி.இ.ஒ.,) எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் தணிக்கை அலுவலகங்கள் உள்ளன.


வெளி நபர் பலர் வளாகத்திற்குள் டூவீலர், கார்களை நிறுத்தி 'பார்க்கிங்' ஆக மாற்றுவதாக சர்ச்சை எழுந்தது. இங்கு பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கும் அறை, அரசு இலவச லேப்டாப்கள் வைக்கும் அறை உள்ளன.



பள்ளி நேரத்தில் 'அலுவலக பணி,' எனக் கூறி ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் இங்கு வந்து அரட்டை அடிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வளாகத்தை கண்காணிப்புக்குள் கொண்டு வர 10 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஒரு மாதம் வரை இதன் பதிவுகள் அழியாமல் இருக்கும்.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதுகாப்பு, நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையின்றி ஆசிரியர்கள், அலுவலர்கள் இங்கு வரக் கூடாது. கேமராக்கள் கண்ட்ரோல் சி.இ.ஓ., கோபிதாஸ் அறையில் உள்ளன. அவர் வெளியில் சென்றாலும் பிரத்யேக 'ஆப்' மூலம் அலைபேசியிலேயே கேமராக்களை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்