செவ்வாய், 1 அக்டோபர், 2019

தமிழ்நாடு அரசு விதிகளின் படி விலையில்லா நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்...

தமிழ்நாடு அரசு விதிகள் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபடும், வேறுபடும் சீரற்றச் செயல்பாட்டை  ஆட்சேபிப்போம்!கண்டிப்போம்!தண்டனை கோருவோம்!
-------------------------------- 
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் கல்வித்துறை செயல்முறைகள் அனைத்தும் 
 ஏக காலத்தில், ஒரே மாதிரியாக,
ஒரே சீராக அமலாகி வருகிறது என்று தான் நம்பிக்கை வைக்கப்படுகிறது.
இத்தகு நம்பிக்கையை இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் தவிடுபொடியாக்குகிறது.  
எப்படி ?!என்கிறீர்களா?!இதோ!இப்படித்தான்.

பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் செய்யப்படும் என்கிறது பள்ளிக் கல்வித்துறை. ஆனால் இராசீபுரத்தில் மட்டும் இதை எதிர்பார்க்க கூடாது.

சரக்குந்து வாடகைக்கு வைத்து , அரசு செலவில்,
அரசு நிதியில் பள்ளிக்கே நலத்திட்டப்பொருள்கள் மாநிலமெங்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 ஆனால் இராசிபுரம் ஒன்றியத்தில் மட்டும் சரக்குந்து வைத்து நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. அரசுவிதிகளுக்கு நேர்எதிராக பள்ளித்தலைமையாசிரியர்களும்,ஆசிரியப்பெருமக் களும் சாக்குப்பைகளை கொண்டுவந்து நலத்திட்டப்பொருள்களை எடுத்துச்செல்லவேண்டுமென்று இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்தால் பணிக்கப்படுகிறது .

கடந்தவாரம் விலையில்லாச் சீருடையை 
தூக்கிச் சுமந்தனர்.
இந்தவாரம் பாடநூல்கள் ,
குறிப்பேடுகள் தூக்கி சுமக்கின்றனர். கொஞ்சமும் கூட மனிதநேயமும், ஈவும்,இரக்கமும் இன்றி பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக் களை அலைக்கழித்து, சுமை தூக்கிடச் செய்து சுமைதூக்கிகளாக்கி  வேடிக்கை பார்க்கும்,  
அழகு பார்க்கும் நெறியற்ற, முறையற்றச் செயலை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி்ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சேபிக்கிறது.
இது குறித்து கீழ்க்கண்டவாறு கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1)விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் பள்ளி விநியோகத்திற்கு என்று இராசிபுரம் 
வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது தானே?!இவ்வாறு  ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்து அளித்திடல் வேண்டும். பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு இதுவரை கடந்த கல்வி ஆண்டுகளிலும்  ஏற்படுத்தியுள்ள செலவுகளை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  ஈடுசெய்திடவேண்டும்; திருப்பித்தந்திடவேண்டும்.

2)தமிழ்நாடு அரசு விதிகளை அப்பட்டமாக, மிகத்துணிச்சலாக புறந்தள்ளிவிட்டு பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக்களை சுமைதூக்கிகளாக்கி படாதபாடு படுத்தி துன்பம் விளைவித்ததற்கு இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் மன்னிப்பு வேண்டுதல் வேண்டும்.

3)எதிர்வரும் விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் விநியோகத்தில் எவ்விதமான குறைபாடும் ஏற்படாது ,அரசு விதிகள் மீறப்படாது என்று உத்திரவாதம் அளித்திடல் வேண்டும்.

4)தமிழ்நாடு அரசின் நிதியினை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  தவறாக கையாண்டது, முறைகேடாக செலவிட்டது குறித்து ஆய்வும், விசாரணையும் நடத்தி தவறிழைத்தவர்களின்  மீது கடுமையான  ஒழுங்குநடவடிக்கைகள்  மேற்கொள்ளல் வேண்டும். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில் சுணக்கமான நிலை 
நிர்பந்தங்களின் வழியில் உருவாக்கப்படின் அல்லது  காணப்படின் ,
பல்வேறு வகைகளிலும் பெரிதும்.  பாதிக்கப்பட்டுள்ள இராசீபுரம் ஒன்றியத் தலைமையாசிரியர்களுக்கான  ,ஆசிரியப்பெருமக்களுக்கான  நீதிக்கான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட அமைப்பு  மேற்கொள்ளும்! நீதிக்கான நெடும்பயணத்தில் ஆசிரியர் மன்றமே வெல்லும்!
#நாளை நமதே!
நன்றி.
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக