புதன், 2 அக்டோபர், 2019

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் - பொன்னீலன்

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் அறிமுகம் 

பொன்னீலன்

---------------------------------
எழுத்தாளர் சுகுமாரன் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாழ்க்கையை மேற்கொண்டவர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டியவர். அவரிடமிருந்து ‘‘வீழ்ச்சி’’ என்ற பெயரில் 288 பக்கங்கள் கொண்ட ஒரு நாவல் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிறது. தன் முதல் நாவலை 65_வது வயதில் எழுதி வெளியிட்டிருக்கும் சுகுமாரன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல் பல வரலாறுகளின், பல பிரச்சனைகளின் பின்னலாக வளர்ந்திருக்கிறது. தங்கதுரை என்னும் இளைஞர் சென்னையின் ஒரு பகுதியில் உள்ள திருமுழுக்கு சபைக்குச் சொந்தமான பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியர்களுக்குப் பின் மூன்றாவது ஆசிரியராகச் சேர்கிறார். இந்தப் பெண் ஆசிரியர்கள் கல்விப் பணியை ஒரு தொண்டாகக் கருதாமல் வயிற்றுப்பாட்டுக்கான வாய்ப்பாகக் கருதிச் செயல்படுபவர்கள். சமூக உணர்வு குறைந்தவர்கள். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்காக வேறு எதையும் செய்ய விரும்பாதவர்கள்.

தங்கதுரை நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்புகிறார். அவர் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் இருந்து ஆறாவது வகுப்புக்குப் போகும் மாணவர்கள் தரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற புகார் பக்கத்து உயர்நிலைப் பள்ளியில் இருந்து வரும்போது, அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. பள்ளிக் கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும். கழிப்பறை கட்ட வேண்டும். சத்துணவுக்காக ஒரு காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் தொடங்கும் அவர் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

தங்கதுரை பணியாற்றிய காலம் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எழுச்சிமிக்க காலம். ஆசிரியர் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மாஸ்டர் இராமுண்ணி, அவர் கால ஆசிரியர்களை ஒரு சமூகமாக இணைத்து, இயக்க உணர்வையும் அரசியல் உணர்வையும், ஊட்டி ஆசிரியர்களுக்குப் பல சலுகைகள் பெற்றுக் கொடுத்தப் பெருஞ் சாதனையாளர்.

ஆனாலும் அறுபதுகளில் ஆசிரியர்களின் நிலை விரும்பத்தக்க அளவில் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் பள்ளிகளில் வந்து, தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, வகுப்பு வகுப்பாகச் சென்று பாடல்கள் பாடியும், வேடிக்கை செய்தும் காசு சேகரித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. நாவலில் ஒரு இடம் வரும். ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்லுவார். ‘‘பேசாம பென்சன் வாங்கிட்டுப் போங்க சார். முப்பது வருசம் ஆனா அரைச் சம்பளம். இப்ப அந்தப் பிடித்தம் இந்தப் பிடித்தம் எல்லாம் போக வாங்குறதைவிடப் பென்சன்ல அதிகம் வாங்குவீங்க.’’

இப்படி ஒரு குரல் ஆசிரியர் சமூகத்தினுள் எழுவதற்காக ஆசிரியர் இயக்கம், ஆசிரியர் கூட்டு இயக்கம் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கம், ஆகியன எத்தனை விரிவான போராட்டங்களை நடத்தின. எத்தனைத் தியாகங்களைச் செய்தன. எத்தனை பேரை உயிர்ப் பலி கொடுத்தன. ஆண்களை மீறிப் பெண்கள் எழுச்சி கொள்ள, எப்படி அவர்களுக்கு இயக்க ஆற்றல் ஊட்டப்பட்டது இவையெல்லாம் மிக பெரிய சாதனை வரலாறுகள். இந்த எழுச்சிகளை, இவற்றுக்கான முயற்சிகளை இயக்க உணர்வு கொண்ட ஆசிரியர்கள் செய்துகாட்டினார்கள். தலைவர்களின் அந்த அலைச்சல்களை, போராட்டங்களை, நாவலாசிரியர் சுகுமாரன் நாவலில் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தொடக்கக் கல்வித்துறை தனியாக உருவானது, தொடக்கக் கல்வி அலுவலர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் உருவானது. அடுத்த கட்டமாக அவர்கள் மூத்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்பட்டனர். இவற்றின் லாப நட்டங்கள் என்ன? தங்கதுரை யோசிக்கிறார். மனதில் மகிழ்ச்சி இல்லை.

இதற்கு இணையாக இன்னொரு புறத்தில், இந்த இயக்கங்களின் வீச்சுக்களால் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாயின. இதுவும் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் ஒரு பெருஞ்சாதனை. ஊராட்சித் தலைவர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது, அடங்காதவர்களைப் பந்தாடுவது, ஆகிய நிலைகள் மாறி, ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக உயர்ந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் பெருஞ்சாதனைகள், நாவலாசிரியர் சொல்லுவதுபோல பள்ளி நிர்வாகிகள் கொடுக்கு இல்லாத தேளாக ஆக்கப்பட்டது ஆசிரியர்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

இன்னொரு புறம் சத்துணவுப் பிரச்சனை. காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், எல்லாருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளியினுள்ளே நுழைந்தது மதிய உணவு அடுப்பு, அந்த அடுப்பை ஊதும் பணியை மட்டுமல்ல, அதற்காக மக்களிடம் தேவைப்படும் பணத்தை வசூல் செய்யும் பணியையும் அரசாங்கம் தலைமையாசிரியர்கள் தலையிலேயே சுமத்தியது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அந்த மதிய உணவு சத்துணவாக மேம்படுத்தப்பட்டது. அரசின் கைகள் இன்னும் கொஞ்சம் தாராளமாயின. ஆனாலும் அந்த உணவுக்கான பொருள்கள் மாணவர்களுக்கு ஒழுங்காகப் போய் சேரவில்லை. அடிக்கு ஒரு தரம் பல அதிகாரிகள் பள்ளிக்கு வந்து உணவு இருப்பை பார்வையிட்டு தொந்தரவு கொடுத்தார்கள். இதில் வெறுப்படைந்த ஆசிரியர் இயக்கம் போராட்டத்தோடு போராட்டமாக இதையும் ஒரு கோரிக்கையாக வைத்துச் சத்துணவு அமைப்பாளர்களை நியமிக்க வைத்தது.

இவைகளுக்கெல்லாம் மேலாண போராட்டம் ஆசிரியர்களுக்கும் போனஸ் வேண்டும். முப்பதாண்டுகள் வேலை பார்த்ததும் முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். கருணைத் தொகை முழுமையாக வேண்டும். பொங்கல் பணம் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு முன்வைத்தது. இம்மாதிரிக் கோரிக்கைகளுக்காகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் தலைமைச் செயலகப் பணியாளர்கள், எல்லாரும் இணைந்து நாட்டையே நடுங்க வைத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அரசு இயந்திரமே செயலிழந்து நின்றது. கைது, சஸ்பென்ட், டிஸ்மிஸ் அது இது எனப் பல பாணங்களை விட்டும், இந்தக் கூட்டு இயக்கம் ஒடுங்கவில்லை. முடிவு? கூட்டு இயக்கத்தினரின் கோரிக்கைகள் பெரும்பான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை ஏற்றுக் கொள்ளப்பட்டனவா. ஏற்றுக் கொள்ளப்படவில்லையா என்பதல்ல பிரச்சினை. இந்தக் கூட்டு இயக்கம் அரசின் இரும்புக்கரத்தைப் பணிய வைத்தது என்பது சாதனை. இதன் வீச்சு அடுத்த தேர்தலிலும் எதிரொலித்தது.

தங்கதுரை வேலை பார்த்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சிறு குறையால் வெறுப்படைந்த தங்கதுரை போராட்டத்தில் இருந்த பின்வாங்கினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு வீழ்ச்சி.

அன்றைய முதலமைச்சர் இந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். வேறு வழியில்லாமல் வீதிமன்றத்தில் இருந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போனது. நீதிபதி ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கூறினார். வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு போனது. உயர்நீதிமன்றக் கனம் நீதிபதிகள் நீதிபதி தினகரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். தொழில் சங்க தலைவர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்திற்குப் போனார். அது இயக்கத்தை முடமாக்கும் தீர்ப்பை அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கத்திற்கு இது பேரிடி.

நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய நீதிமன்றமே அதிகாரத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டது இயக்க வரலாற்றின் ஒரு தொடக்கம். படிப்படியாக இந்தப் பார்வை விரிவாகப் பட்டது மட்டுமல்ல. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே போராடும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டது. தங்கதுரை மேலும் இடிந்து போகிறார்.

எழுச்சிகளுக்குப் பின்னான இம்மாதிரியான வீழ்ச்சிகளின் கதைதான் நாவல். அக்காலத்து முதல்வர்கள், ஆசிரியர் இயக்கத்தலைவர். அரசு ஊழியர் இயக்கத் தலைவர்கள் அரசியல் கட்சிகள், தங்கதுரையின் நண்பர்களான மார்டின், மாரடைப்பில் இறந்துபோன தியாகராஜன், குமரன், சாரதி துரைராஜ், அவர் பள்ளி ஆசிரியர்களான பங்கஜம், ஸ்டெல்லா டீச்சர் அவர் மனைவி ஜான்சி, இப்படிப் பல பண்புகள் கொண்ட ஆசிரியர்களை, அவர்களுடைய பலங்களை, பலவீனங்களை நுட்பமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

நாவலின் சிறப்பு அதன் ஓட்டம், வாசிக்க அலுப்புத் தராத விறுவிறுப்பான ஓட்டத்துக்கு நூலாசிரியரின் இயக்க சம்பந்தமான செய்திகள் துணை நிற்கின்றன.

எளிய மொழியை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் விதம் இந்த விறுவிறுப்புக்கு மேலும் துணை செய்கிறது. மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும் நுட்பமான இடங்களையெல்லாம் கவனமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர் இயக்க வாழ்வின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால எழுச்சியையும், வீழ்ச்சி என்று சொல்லி முடியாத ஒரு பின்வாங்குதலையும் வரலாற்றுப் போக்கில் பதிவு செய்வதில் இந்த நாவல் வெற்றி பெற்றிருக்கிறது.