திங்கள், 30 டிசம்பர், 2019

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு நகலை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கவும்: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் செய்தி:
-----------------------------
வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு நகலை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கவும்: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
------------------------------

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளரிடம் வழங்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கௌரி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேலுமணி, தாரணி அமர்வு முன்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கையை முழுவதுமாக வீடியோபதிவு செய்யக்கோரி முறையிட்டனர்.

முன்னதாக இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், "குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது. அதோடு அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு நீதிபதிகள் இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது," தேர்தல் ஆணையம் தரப்பில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மற்றும் அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், "வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்" எனக்கூறி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி பதிவின் ஒரு நகலை, வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் தேர்தல் ஆணையம் வழங்க” உத்தரவிட்டு உள்ளது.