புதன், 20 மே, 2020

மே 20,
வரலாற்றில் இன்று.


தர்மாம்பாள் பிறந்த தினம் இன்று.



கரந்தை எஸ். தர்மாம்பாள் (1890 - 1959) தமிழக பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.


கரந்தை எஸ். தர்மாம்பாள் 1890 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் பிறந்தவர். அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயினறு, மருத்துவராகப் பணியாற்றியவர்.


இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், தன்அயரா உழைப்பினால், 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.

இம்மாநாட்டிலேயே,
ஈ. வெ.இராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.

தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, 1940 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டத்திற்கு இவர் வைத்த பெயர் இழவு வாரம். இப்போராட்டத்தின் பலனாக அன்றைய கல்வி அமைச்சர்
தி. சு.அவிநாசிலிங்கம்  தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார். 1938ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறைக்கும் சென்றார்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும் உருவாக்கப்பெற்ற மாணவர் மன்றத்தின், தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.


அக்காலத்தில், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு ஏழிசை மன்னர் என்னும் பட்டம் வழங்கியவர் இவர்.


பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தர்மாம்பாளுக்கு, அன்றைய தமிழர்கள் வீரத் தமிழன்னை என்னும் பட்டத்தினை வழங்கினர்.

தர்மாம்பாள் அவர்கள், தனது 69 ஆவது வயதில்,1959 ஆம் ஆண்டு காலமானார்.


கரந்தை எஸ்.தர்மாம்பாளின் நினைவினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.

 சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.