சனி, 23 மே, 2020

மே 23, வரலாற்றில் இன்று.

தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும்  தமது பாடல்களால் உடுமலைப்பேட்டைக்கு ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த உடுமலை நாராயண கவி அவர்களது நினைவு தினம் இன்று (1981).

25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் இனமென்று அடையாளம் வைத்தார்.

தமது 5 ஆவது வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். 12 ஆவது வயதிலேயே பெற்றோரை பின்னர் தமது உறவினர் வீட்டில் வளர்ந்தார். கைத்தொழில்கள் புரிந்தும், சிறு சிறு வியாபாரங்கள் செய்தும் பொருளீட்டினார். சிறு வயதிலேயே இசையார்வம் மிகக் கொண்ட கவிஞர், உடுமலை சரபமுத்துச்சாமிக் கவிராயர் ஆசிரியராக இருந்த ஆரிய கான சபையில் சேர்ந்து நாடகக் கலைஞராக விளங்கினார். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடன்றி, அவரின் உதவியால் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கலையை முறையாகக் கற்றார்.

இந்த நேரத்தில் நாராயண கவிக்கு, பேச்சியம்மாளுடன் திருமணம். பின் மதுரைக்குச் சென்றுவிட்டார். அங்கு மதுரையில் நாடகக் கலைஞர் எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களுடன் நாடகக் கலையில் தொடர்பு கொண்டார்.  நாடகக் குழுக்களுக்கு மேடை நாடகப் பாடல்களை எழுதிக் கொடுத்தார்..

இந்த நிலையில் கிராமஃபோன் கம்பெனியிலிருந்த நாராயண ஐயருடைய அறிமுகம் ஏற்பட்டது. நாராயண ஐயருடன் சென்னைக்குச் சென்றார். அவரின் உதவியினாலேயே கிராமஃபோன் இசைத்தட்டுக் கம்பெனிக்குப் பாடல்களை எழுதிக்கொடுக்கத் துவங்கினார். இவரின் கவித்திறமையைக் கண்ணுற்ற திரைப்பட இயக்குநர் ஏ.நாராயணன், இவரைத் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதிடச்செய்தார்.

அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்கள் பல கல்கத்தாவிலேயே தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் கல்கத்தா சென்று ‘கிருஷ்ணன் தூது’ படத்திற்குப் பாடல்களை எழுதினார். இதேபோல் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பான ‘தூக்கு தூக்கிக்கு’ கதை, வசனம், பாடல்களை எழுதினார். 1936 இல் பல நாடகங்களுக்கு இவருடைய பாடல்கள் சிறப்பைக் கொடுத்தன. பின்னர், ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘நல்ல தம்பி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பிரபாவதி’, ‘காவேரி’, ‘சொர்க்கவாசல்’, ‘தூக்கு தூக்கி’, ‘தெய்வப்பிறவி’, மாங்கல்ய பாக்கியம், ‘சித்தி’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ஆதி பராசக்தி’, ‘தேவதாஸ்’ போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர்களுக்கு பல தனிப் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

மக்களிடையே இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டின. தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயண கவிராயர், மகாகவி பாரதியாரின் நட்பிற்குப் பிறகு சமுதாயப் பாடல்களை எழுதத் துவங்கினார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, நாராயண கவிராயர் ஆஸ்தான கவிஞரானார். கலைவாணருக்காக கவிஞர் எழுதிய ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் மிகவும் புகழ் பெற்றது.

மகாகவி பாரதியாருடைய நண்பர் வ.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அவரது காலத்திலிருந்தே அனைத்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.

இயல்பாகவே இனிமையான சுபாவம் படைத்த கவிராயர், நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும், தலை வணங்காத உறுதியுடையவர். பிறருக்கு என்ன உதவியாயினும், செய்யக்கூடியவர். அவருடைய சிறப்பான பாடல் திறத்திற்கு சில சான்றுகள்:
மாங்கல்ய பாக்கியம் படத்தில்
ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்
என்றே தேறுவது அறிவாகும் அது
நன்றேயாகுமென உணர்ந்திடாது-
மக்கள் உன்றே கூறுவது தவறாகும்……
தூக்கு தூக்கி படத்தில்
1-குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
2-பெண்களை நம்பாதே- கண்களே பெண்களை நம்பாதே
3-சுந்தரி சௌந்தரி நிரந்தரியே……
தெய்வப்பிறவி படத்தில்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்லம் தங்கம்……..
எங்கள் வீட்டு மகாலெட்சுமி படத்தில்
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு சேர்க்கலாமடி….
திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும், புகழையும் வைத்திருந்தார். இவரது பாடல்களில் பழமையின் வலிமை, புதுமையின் எளிமை, கவிதையின் இனிமை, கருத்தின் பெருமை, இசையின் எளிமை, இசையின் செம்மை, தமிழின் கவித்தன்மை- முதலிய அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தன.

• கா...கா...கா... (பராசக்தி)
• அந்தக்காலம் (நல்லதம்பி, 1949, பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)
போன்ற பாடல்ககளை இயற்றி இருந்தார்.