வெள்ளி, 12 ஜூன், 2020

*😷முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ₹100 அபராதம்.-கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.*

முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்!

சமூகவிலகலைக் கடைபிடிக்காத நிறுவனங்கள்,
கடைகளுக்கு  பூட்டு! சீல் !

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் எச்சரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதே போல் இருசக்கர வாகனங்களில் வரும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதனை மீறுவோருக்கு அபராதமாக ரூ.100 விதிப்பதோடு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய்ச் சட்டம் 1897 ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கையும் தொடரப்படும். மேலும் அனைத்து ஷோரும்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் மக்கள் செல்லும் போது ஒரே நேரத்தில் கடையில் ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும். அரசு ஊடரங்கை அமல்படுத்தியபோதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோய் பரவலை தடுக்க இயலாது.

 எனவே, பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தவும் , வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் .
எனவே , பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக