வியாழன், 16 ஜூலை, 2020

*🌐ஜூலை 16, வரலாற்றில் இன்று:சர்வதேச பாம்புகள் தினம்.*

ஜூலை 16, வரலாற்றில் இன்று.

சர்வதேச பாம்புகள் தினம் இன்று.

உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ.

ஆனாலும் அவற்றில் உலகம் முழுவதிலும்  வெறும் 600 வகைப்பாம்புகளே நஞ்சுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றிலும் வெறும் 200 வகைப்பாம்புகளே மனிதனைக் கொல்லும் அளவு விஷம் உடையவை.

மற்றவையெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. மனிதனின் இடையூறு இல்லாமல் எந்தப் பாம்பு வகைகளும் மனிதனைச் சீண்டுவதே இல்லை.

பாம்புகள் சுமார் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மூதாதையர் இனத்திலிருந்து பரிணமித்து உருவானவை. ஆனால் மனிதன் வெறும் இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் ஆடையின்றித் தோன்றியவன்.

பாம்புகள் பற்றிய பழமொழியால் அவற்றின் மீது தீரா வெறுப்பிலுள்ள நமக்கு அவற்றின் படைப்பின் காரணத்தை உணர்ந்தால் பாம்பின்மீது மரியாதையே வரும்.

"பாம்பு என்றால் படையும் நடுங்கும்"

"காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது"

"பாம்பைக் குட்டியிலேயே கொன்றுவிடு"

 இதுவெல்லாம் பாம்பினைப் பற்றிய தமிழ் பழமொழிகள்.

அப்படி என்னதான் பயம் எனத் தெரியவில்லை. ஆனால் அதன்மீதான பயம் மனிதனுக்கு இன்றுவரை நீங்கவில்லை.

பயத்தின் இன்னொரு வடிவம் சரணாகதி அதன்விளைவுதான் பாம்பு வழிபாடு.

 பாம்பை வழிபடுகிறோம.் அதுவே நேரில் வந்தால் கல்லையும் கம்பையும் தூக்குகிறோம்.

ஒருபோதும் பாம்புகள் மனிதனைத் தேடித்தேடி, துரத்தித்துரத்தி எல்லாம் இதுவரை கடித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மனிதனைக் கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் விஷப்பாம்புகளின்
இரை பட்டியலில் மனிதன் ஒருபோதும் இல்லை.

மனிதனைக் கடிப்பதென்றால் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே கடிக்க முயலும். அதுவும் நாம் அதை எந்தவித்த்திலாவது தாக்க முயன்றால் தான். முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது.

கடிக்கிற எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. உலகம் முழுவதும் 2,968 வகையான பாம்புகள் இருக்கிறது.இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை.

அவைகள்
நாகபாம்பு(நல்லபாம்பு)
கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.

இவைகளில் நாகப்பாம்பானது,
பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நாகபாம்பு தமது தலையை உயர்த்தி படம் எடுக்கும்.ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வளரும். நாகப்பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இவை  எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும்.

விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது மிகத்தவறான கருத்தாகும். பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனுக்கு சாவைக்கொண்டு வந்துவிடுகிறது.

பாம்புகள் பற்றிய மக்களின் தவறான கருத்துகள் உலவுகிறது அவை.

 நாகப்பாம்பு மகுடியின் இசைக்கு தக்கபடி படம் எடுத்து ஆடும்.

நாகப்பாம்பும் சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பாம்புகள்.

நாகப்பாம்பு நீண்டநாள் யாரையும்  தீண்டாமல் இருந்தால் தலையில் நாகமாணிக்கம் உருவாகும்,அதன் ஒளியில் இரவில் இரைதேடும்.

நாகப்பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் இணை  கொன்றவரை பழி வாங்கும் வரை காத்திருக்கும்(இந்த அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு நன்றி)

பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.

மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் வெண்குஷ்டம் வரும்.

பச்சைப் பாம்பு கண்களை குறிபார்த்து கொத்தும்.

கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும்.

இவ்வாறு நம்பப்படுகிற எதுவுமே உண்மையல்ல..

அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் சுமார் முப்பதாயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் சுமார் நாற்பதாயிரத்திற்கு மேல் சுருட்டை விரியன் விஷம் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

 எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக