செவ்வாய், 27 அக்டோபர், 2020

அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.

'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் பிறந்த தினம் இன்று.

இந்தியாவின் 10ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்.. 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர்  நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூர் சேர்ந்தவர்  கொச்சேரில் ராமன் நாராயணன். இவர்,  1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பிறந்தார்.
குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார். 

இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார். பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன். தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்த கே.ஆர். நாராயணன், ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றி, நேருவின் பாராட்டைப் பெற்றவர். ஐ.எஃப்.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையின்பேரில், 1992-ம் ஆண்டு இந்தியாவின் 9-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சங்கர் தயாள் சர்மாவின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், 1997-ம் ஆண்டு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.

ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் பிரதமர்களாக இருந்த அக்காலகட்டத்தில், 1997 ஜூலை 25 முதல் 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர். தலித் பிரிவில் இருந்து நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்த தலைவர். இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டபோது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்து பெருமைக்குரியவர். நாட்டின் சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த சிறப்பும் கே.ஆர். நாராயணனுக்கு உண்டு.

கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி சாதனை புரிந்தார். அதுவரை இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்த வேறு எவரும் தேர்தலில் பொதுவாக வாக்களிப்பதில்லை. ஆனால், அந்த மரபை முதல்முறையாக மாற்றியதுடன், குடியரசுத் தலைவரும் வாக்களிக்கக் கடமைப்பட்டவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர்.

மேலும் குடியரசுத் தலைவர் என்றால், மத்திய அரசின், 'ரப்பர் ஸ்டாம்ப்'  என்ற முத்திரையையும் உடைத்தெறிந்த பெருமை கே.ஆர். நாராயணனையேச் சேரும். மத்திய அமைச்சரவை அனுப்பி வைக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவர் அதனை பலமுறை தனது பதவிக் காலத்தில் நிரூபித்தும்  உள்ளார். உதாரணத்திற்கு, 1998-ல், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பீஹார் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முடிவு செய்து, மத்திய அமைச்சரவை அனுப்பிய  பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பினார். 

காங்கிரஸ்காரராக அரசியல் வாழ்க்கையைத தொடங்கிய போதிலும், கடந்த 1992-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் இது" என தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினார்.

மத்திய அமைச்சராக பதவி வகித்தபோதும், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த போதிலும், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட தன்னால் இயன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்வியில், கேரள மாநிலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றம் அடைய அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்றத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

குடியரசுத் தலைவராக உயர்ந்த நிலையில் இருந்தாலும், பல்வேறு மரபுகளை மாற்றி, தனது வாழ்நாள்வரை மிகவும் எளிய மனிதராகவே வாழ்ந்த கே.ஆர். நாராயணன், 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று 85ஆவது வயதில், உடல் நலக்குறைவால், டெல்லியில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக