திங்கள், 21 டிசம்பர், 2020

அறிவியலுக்கு எதிரான அமைப்போடு அறிவியல் மாநாடு நடத்துவதா? மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி. கேள்வி???

அறிவியலுக்கு எதிரான அமைப்போடு 
அறிவியல் மாநாடு நடத்துவதா? 

மத்திய அமைச்சருக்கு 

சு. வெங்கடேசன் எம் பி. கேள்வி?

மதுரை:

அறிவியல் மாநாட்டினை அரசு அல்லாத, அறிவியலுக்கு  எதிரான அமைப்போடு இணைந்து நடத்துவதா? என்று  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு  சு. வெங்கடேசன் எம்.பி.,  எழுதியுள்ள கடிதம் வருமாறு:

டிசம்பர்  7ம்தேதி கடிதத்தில் 2020 டிசம்பர்22 முதல் 25 வரை மெய்நிகர் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு 5 ஆசிரியர்களையும், 50 மாணவர்களையும் பரிந்துரைக்குமாறு வேண்டப்பட்டுள்ளேன். 

இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவது நல்ல முன்னெடுப்பு. இருப்பினும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சம்பந்தமான விவரங்களை ஆழ்ந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். 

இந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளில் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் கழகம் (CSIR), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றோடு விஞ்ஞான பாரதி (VIBHA) என்ற அரசு அல்லாத ஓர் நிறுவனமும் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சர்வதேச திருவிழாவின் முதன்மையான நோக்கமாக, சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் அறிவியல் முனைப்பை வளர்ப்பது, இளம் உள்ளங்களில் அறிவியல் ஞானம் மற்றும் கருத்துக்களை பகிர்வது, அறிவியல் - தொழில்நுட்பம்- கண்டுபிடிப்புகள் குறித்த அண்மைக்கால வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அதற்கான இந்தியப் பங்களிப்புகளைக் காட்சிப்படுத்துவது உள்ளிட்டவற்றை “சுயசார்பு இந்தியா மற்றும் உலக நலன்” என்ற கருத்தாக்கத்தை மையமாகக்கொண்டு முன்னிறுத்துவது என அறிவிக்கப் பட்டுள்ளது. 

அறிவியல் திருவிழாவின் 
லட்சியத்திற்கு எதிராக...

ஆனால் இந்த அறிவியல் திருவிழாவின் அறிவிக்கப்பட்ட லட்சியத்திற்கு முற்றிலும் எதிராக இயங்குகிற ஓர் அரசு சாரா அமைப்பான விஞ்ஞான பாரதியை இதில் இணைத்திருப்பது வேதனைக்குரியது ஆகும். 

அந்த அமைப்பின்  செயல்பாடுகள் அறிவியல் முனைப்புடன் இருக்கிறதென்ற நம்பிக்கையை தருவதாக இல்லை. மதச்சார்பின்மை விழுமியங்களைக் கொண்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை. 

மக்களின் மத உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்கிற அமைப்பாகவும் இது இருக்கிறது என்பதே பரவலான கருத்து. 

அறிவியல் உலகளாவியது. அது சீராக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மக்களைப் பிரிக்கிற சிந்தனைகளுக்கு  இடம் தராமல், சமூகத்தின் பொது நலனுக்கு அதைப் பயன்பட செய்ய வேண்டும்.  

மும்பையில் 2015 இல் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் விஞ்ஞானபாரதி அமைப்பின் தலைவர் விஜய் பாட்கர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்பது அப்போதைய செய்தி. 

அவரே ஒரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட போது, சர்ச்சைகள் எழுந்த காரணத்தால் இந்தியக் குடியரசுத் தலைவரால் அம்முன்மொழிவு நிராகரிக்கப் பட்டது என்பதும் ஊடகங்கள் தந்த இன்னொரு செய்தி. 

மேற்கூறப்பட்ட மும்பை மாநாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வுத்தாள் சமர்ப்பிக்கப்பட்டதையும் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

ஆகாய விமானங்கள் ஆதி இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், அத்தகைய தொழில் நுட்பத்தை வளர்த்தெடுத்து பிரதமரின்“மேக் இன் இந்தியா” முன்முயற்சியின் கீழ்உள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குமாறும் அந்த ஆய்வுத்தாள் கூறியிருந்தது. 

இது ஒட்டுமொத்த அறிவியல்சமூகத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. 

இது போன்ற போலி அறிவியல் கருத்துக்களையும் மற்றும் இதுபோன்ற கருத்துக்களை கொண்டுள்ள நபர்களால் தலைமை தாங்கக்கூடிய  அமைப்புகளையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. 

ஆட்சியாளர்களின் 
அரசியல் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றவா?

“நாக்பூர்” வேர்களைக் கொண்ட  இந்த அரசு சாரா அமைப்பை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஊடுருவ அனுமதிப்பதன் குறுகிய நோக்கம், இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்கே. 

இது அறிவியல் திருவிழா என்ற திரையின் பின்னால் செய்யப்படுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. 

கடந்த 15 ஆண்டுகளாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சில திட்டங்கள் பற்றி குறிப்பிட விழைகிறேன். தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாடு போன்றவை அவை. 

இந்தியா முழுமையும் உள்ள வானவில்லை ஒத்த அமைப்புகளை உள்ளடக்கி இவை நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவது  காலத்தால் சோதிக்கப்பட்ட மேற்கண்ட முன் முயற்சிகளை சிதைக்கிற 
உள்நோக்கம் கொண்டவை என்று நான் அழுத்தமாக கருதுகிறேன். 

இந்தியாவில் இரண்டு முக்கியமான நிறுவனங்கள் சமூகத்தில் அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில், வளர்ப்பதில் நற்பெயரை பெற்றுள்ளன. 

ஒன்று, தேசியஅறிவியல் தொழில் நுட்ப தொடர்பு மையம் (NCSTC). இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட வானவில் அமைப்புகளைக் கொண்ட வலைப் பின்னல் ஆகும். 

இந்தியா முழுவதும் விரிந்துள்ள பின்னல் எல்லா மாநிலங்களிலும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வருகிறது. 

இரண்டாவது, விஞ்ஞான பிரச்சார் அமைப்பு. இது தனித்து இயங்கும் பல நிபுணர்கள், அமைப்புகளை இணைத்து இயங்கும் சுயேச்சையான நிறுவனம் ஆகும்.இத்தகைய நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இவற்றை ஒதுக்குவது நீண்ட கால விளைவுகளை உருவாக்கும். 

இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ள வலுவான அடித்தளத்தை நொறுக்கிவிடும். 

நமது அரசியல் சாசனம், அறிவியல் முனைப்பை இந்தியச் சமூகத்தில் உருவாக்க வேண்டுமென்று நமக்கு கட்டளை விடுத்துள்ளது. விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவது இக் கட்டளையின் சீவனை மறுதலிப்பது ஆகும். 

நம் தேசத்தின் எதிர்காலத் தலைமுறை அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும். 

விஞ்ஞான பாரதிபோன்ற அமைப்புகளை இது போன்ற அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் அரசு ஈடுபடுத்துவதை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக