புதன், 2 அக்டோபர், 2019

நீட்' எனும் மோசடிக் குதிரை

'நீட்' எனும் மோசடிக் குதிரை

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே தேர்வு என்று நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பாஜக அரசை எதிர்த்து, இதனால் சாமானியர்களின் மருத்துவக் கனவு பறிபோகும் என்று தமிழகம் வெகுண்டெழுந்தது.

2017-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் 5 மணி நேரம் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து போராடி சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.  ஆனால் சூத்திரனுக்கு படிப்பதெற்கு என்று சொல்லும் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களின் ஆட்சியில் சாமானியர்களுக்கு கல்வி கிடைப்பதை அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா என்ன?

எத்தனைப் போராட்டம் நடத்தினாலும் நீட் இருந்தே தீரும் என்றார்கள்; விளைவு, தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த அனிதா உட்பட 5 மாணவிகளை பறிகொடுத்தோம். இந்த அய்ந்து மாணவிகளும் படிப்பில் சோடை போனவர்கள் கிடையாது; மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தங்களின் திறமைகளை எடுத்துரைத்தவர்கள். ஆனால் பணமிருந்தால் தான் படிப்பு என்று ஆன பிறகு திறமைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப்போனதுதான் மிச்சம்!

நீட் தேர்வு என்றால் ஏதோ தீவிரவாத தடுப்புப் பயிற்சி முகாமிற்குள் நுழையும் எதிரிகளைப் போல் கடுமையான சோதனைகள், ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவி ஒருவர் போட்டுவந்த முழுக்கைச் சட்டையை அதில் பல டிசைன்கள் இருந்த காரணத்தால் வேறு சட்டை அணிந்துவா என்று சொல்ல, மாணவி வேறு வழியில்லாமல் தந்தையின் சட்டையை வாங்கி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பொதுவெளியில் உள்ளாடைகள் தெரிய கூனிக்குறுகி நீட் தேர்வு எழுதச்சென்றதை தொலைக்காட்சி வாயிலாகக் கண்டு தமிழகம் கொதித்தெழுந்தது,  ஆனால் அரசு எளிதாக ஒரே வார்த்தை கூறியது, 'நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக இத்தனை நடவடிக்கைகள்' என்று வேடிக்கை காட்டியது.

ஆனால், செப்டம்பர் இறுதிவாரம் நடந்த கூத்து ஒன்று பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நீட் தேர்வின் போது சீனாவில் இருந்ததாகவும், மும்பையில் அவருக்குப் பதில் வேறு ஒரு நபர் நீட் தேர்வை எழுதியதாகவும், அதற்காக ரூ.40 லட்சத் திற்கு மேல் கையூட்டுப் பெறப்பட்டது என்றும் யாரோ ஒருவர் தேனி மருத்துவக்கல்லூரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகுதான் உதித் சூரியா என்ற மாணவனின் விவரங்களை சோதித்த போது மும்பையில் நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்ட புகைப்படமும், உதித் சூரியாவின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தது. அதன் பிறகு தான் இதுவரை வட இந்தியாவில் நடந்து, இன்றும் நடந்துகொண்டு இருக்கும் வசூல் ராஜா கதைகள் இங்கும் நடந்துள்ளன என்று தெரியவந்தது.

அதன் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை நடந்த போது தொடர்ந்து ஆள் மாறாட்ட ஏமாற்று வேலைகள் வெளிவந்து குட்டு உடைந்தது.

இதுவரை 6 பேர் சிக்கியுள்ளார்கள். இந்த நிலையில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன. இந்த செய்தி வந்த பிறகு தமிழகம் முழுவதிலுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் மூலம் சேர்ந்து படித்த 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி, விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு மாணவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். சான்றிதழ் சரிபார்ப்பதற்கு வராத மாணவர்கள் குறித்து விசாரணை நடத்த அந்த அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இது போன்று எதுவுமே நடக்காதது போல் அன்றாட வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.  பிஜேபி ஆண்ட மத்தியப் பிரதேசத்தில் "வியாபம்" விவகாரத்தில் முதலமைச்சரே ஊழல் செய்தார் என்று சான்றுகளோடு வந்த பிறகும் அந்த விவகாரத்தை ஊற்றி மூடிய வட இந்திய அரசியல் வாதிகள், நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டை தமிழகத்தோடு முடித்துக் கொள்வார்கள். ம.பி.யில் 10ஆம் வகுப்புப் படித்த மாணவன் எல்லாம் மருத்துவர் ஆன நிலை உண்டு. இப்பொழுது தமிழ் நாட்டில்  ஒரு மாணவருக்கு ரூ.40 லட்சம்  விளையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.   இதுவரை கைதான 6 மாணவர்கள் மற்றும் காணாமல் போயுள்ள 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று பார்த்தால் எத்தனைக் கோடிகள் கைமாறியிருக்கும்? இது தமிழகத்திற்கு மட்டுமே. இதையே நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆயிரம் கோடிகளைக் கூட தொட்டு விடும்.

முதலாவதாக 'நீட்' என்பதே பெரும் மோசடி; இப்பொழுது அந்த 'நீட்' தேர்வு எழுதுவதிலும், மோசடி 'நீட்'டுக்காகத் தனிப் பயிற்சி என்பதிலும் பெரும் பணம் கொள்ளை! இந்த லட்ச ணத்தில் 'நீட்' தகுதியின் அளவு கோலாம் - வெட்கக் கேடு!!
கலி.பூங்குன்றன்.

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் - பொன்னீலன்

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் அறிமுகம் 

பொன்னீலன்

---------------------------------
எழுத்தாளர் சுகுமாரன் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாழ்க்கையை மேற்கொண்டவர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டியவர். அவரிடமிருந்து ‘‘வீழ்ச்சி’’ என்ற பெயரில் 288 பக்கங்கள் கொண்ட ஒரு நாவல் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிறது. தன் முதல் நாவலை 65_வது வயதில் எழுதி வெளியிட்டிருக்கும் சுகுமாரன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல் பல வரலாறுகளின், பல பிரச்சனைகளின் பின்னலாக வளர்ந்திருக்கிறது. தங்கதுரை என்னும் இளைஞர் சென்னையின் ஒரு பகுதியில் உள்ள திருமுழுக்கு சபைக்குச் சொந்தமான பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியர்களுக்குப் பின் மூன்றாவது ஆசிரியராகச் சேர்கிறார். இந்தப் பெண் ஆசிரியர்கள் கல்விப் பணியை ஒரு தொண்டாகக் கருதாமல் வயிற்றுப்பாட்டுக்கான வாய்ப்பாகக் கருதிச் செயல்படுபவர்கள். சமூக உணர்வு குறைந்தவர்கள். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்காக வேறு எதையும் செய்ய விரும்பாதவர்கள்.

தங்கதுரை நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்புகிறார். அவர் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் இருந்து ஆறாவது வகுப்புக்குப் போகும் மாணவர்கள் தரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற புகார் பக்கத்து உயர்நிலைப் பள்ளியில் இருந்து வரும்போது, அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. பள்ளிக் கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும். கழிப்பறை கட்ட வேண்டும். சத்துணவுக்காக ஒரு காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் தொடங்கும் அவர் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

தங்கதுரை பணியாற்றிய காலம் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எழுச்சிமிக்க காலம். ஆசிரியர் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மாஸ்டர் இராமுண்ணி, அவர் கால ஆசிரியர்களை ஒரு சமூகமாக இணைத்து, இயக்க உணர்வையும் அரசியல் உணர்வையும், ஊட்டி ஆசிரியர்களுக்குப் பல சலுகைகள் பெற்றுக் கொடுத்தப் பெருஞ் சாதனையாளர்.

ஆனாலும் அறுபதுகளில் ஆசிரியர்களின் நிலை விரும்பத்தக்க அளவில் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் பள்ளிகளில் வந்து, தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, வகுப்பு வகுப்பாகச் சென்று பாடல்கள் பாடியும், வேடிக்கை செய்தும் காசு சேகரித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. நாவலில் ஒரு இடம் வரும். ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்லுவார். ‘‘பேசாம பென்சன் வாங்கிட்டுப் போங்க சார். முப்பது வருசம் ஆனா அரைச் சம்பளம். இப்ப அந்தப் பிடித்தம் இந்தப் பிடித்தம் எல்லாம் போக வாங்குறதைவிடப் பென்சன்ல அதிகம் வாங்குவீங்க.’’

இப்படி ஒரு குரல் ஆசிரியர் சமூகத்தினுள் எழுவதற்காக ஆசிரியர் இயக்கம், ஆசிரியர் கூட்டு இயக்கம் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கம், ஆகியன எத்தனை விரிவான போராட்டங்களை நடத்தின. எத்தனைத் தியாகங்களைச் செய்தன. எத்தனை பேரை உயிர்ப் பலி கொடுத்தன. ஆண்களை மீறிப் பெண்கள் எழுச்சி கொள்ள, எப்படி அவர்களுக்கு இயக்க ஆற்றல் ஊட்டப்பட்டது இவையெல்லாம் மிக பெரிய சாதனை வரலாறுகள். இந்த எழுச்சிகளை, இவற்றுக்கான முயற்சிகளை இயக்க உணர்வு கொண்ட ஆசிரியர்கள் செய்துகாட்டினார்கள். தலைவர்களின் அந்த அலைச்சல்களை, போராட்டங்களை, நாவலாசிரியர் சுகுமாரன் நாவலில் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தொடக்கக் கல்வித்துறை தனியாக உருவானது, தொடக்கக் கல்வி அலுவலர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் உருவானது. அடுத்த கட்டமாக அவர்கள் மூத்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்பட்டனர். இவற்றின் லாப நட்டங்கள் என்ன? தங்கதுரை யோசிக்கிறார். மனதில் மகிழ்ச்சி இல்லை.

இதற்கு இணையாக இன்னொரு புறத்தில், இந்த இயக்கங்களின் வீச்சுக்களால் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாயின. இதுவும் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் ஒரு பெருஞ்சாதனை. ஊராட்சித் தலைவர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது, அடங்காதவர்களைப் பந்தாடுவது, ஆகிய நிலைகள் மாறி, ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக உயர்ந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் பெருஞ்சாதனைகள், நாவலாசிரியர் சொல்லுவதுபோல பள்ளி நிர்வாகிகள் கொடுக்கு இல்லாத தேளாக ஆக்கப்பட்டது ஆசிரியர்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

இன்னொரு புறம் சத்துணவுப் பிரச்சனை. காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், எல்லாருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளியினுள்ளே நுழைந்தது மதிய உணவு அடுப்பு, அந்த அடுப்பை ஊதும் பணியை மட்டுமல்ல, அதற்காக மக்களிடம் தேவைப்படும் பணத்தை வசூல் செய்யும் பணியையும் அரசாங்கம் தலைமையாசிரியர்கள் தலையிலேயே சுமத்தியது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அந்த மதிய உணவு சத்துணவாக மேம்படுத்தப்பட்டது. அரசின் கைகள் இன்னும் கொஞ்சம் தாராளமாயின. ஆனாலும் அந்த உணவுக்கான பொருள்கள் மாணவர்களுக்கு ஒழுங்காகப் போய் சேரவில்லை. அடிக்கு ஒரு தரம் பல அதிகாரிகள் பள்ளிக்கு வந்து உணவு இருப்பை பார்வையிட்டு தொந்தரவு கொடுத்தார்கள். இதில் வெறுப்படைந்த ஆசிரியர் இயக்கம் போராட்டத்தோடு போராட்டமாக இதையும் ஒரு கோரிக்கையாக வைத்துச் சத்துணவு அமைப்பாளர்களை நியமிக்க வைத்தது.

இவைகளுக்கெல்லாம் மேலாண போராட்டம் ஆசிரியர்களுக்கும் போனஸ் வேண்டும். முப்பதாண்டுகள் வேலை பார்த்ததும் முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். கருணைத் தொகை முழுமையாக வேண்டும். பொங்கல் பணம் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு முன்வைத்தது. இம்மாதிரிக் கோரிக்கைகளுக்காகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் தலைமைச் செயலகப் பணியாளர்கள், எல்லாரும் இணைந்து நாட்டையே நடுங்க வைத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அரசு இயந்திரமே செயலிழந்து நின்றது. கைது, சஸ்பென்ட், டிஸ்மிஸ் அது இது எனப் பல பாணங்களை விட்டும், இந்தக் கூட்டு இயக்கம் ஒடுங்கவில்லை. முடிவு? கூட்டு இயக்கத்தினரின் கோரிக்கைகள் பெரும்பான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை ஏற்றுக் கொள்ளப்பட்டனவா. ஏற்றுக் கொள்ளப்படவில்லையா என்பதல்ல பிரச்சினை. இந்தக் கூட்டு இயக்கம் அரசின் இரும்புக்கரத்தைப் பணிய வைத்தது என்பது சாதனை. இதன் வீச்சு அடுத்த தேர்தலிலும் எதிரொலித்தது.

தங்கதுரை வேலை பார்த்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சிறு குறையால் வெறுப்படைந்த தங்கதுரை போராட்டத்தில் இருந்த பின்வாங்கினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு வீழ்ச்சி.

அன்றைய முதலமைச்சர் இந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். வேறு வழியில்லாமல் வீதிமன்றத்தில் இருந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போனது. நீதிபதி ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கூறினார். வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு போனது. உயர்நீதிமன்றக் கனம் நீதிபதிகள் நீதிபதி தினகரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். தொழில் சங்க தலைவர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்திற்குப் போனார். அது இயக்கத்தை முடமாக்கும் தீர்ப்பை அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கத்திற்கு இது பேரிடி.

நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய நீதிமன்றமே அதிகாரத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டது இயக்க வரலாற்றின் ஒரு தொடக்கம். படிப்படியாக இந்தப் பார்வை விரிவாகப் பட்டது மட்டுமல்ல. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே போராடும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டது. தங்கதுரை மேலும் இடிந்து போகிறார்.

எழுச்சிகளுக்குப் பின்னான இம்மாதிரியான வீழ்ச்சிகளின் கதைதான் நாவல். அக்காலத்து முதல்வர்கள், ஆசிரியர் இயக்கத்தலைவர். அரசு ஊழியர் இயக்கத் தலைவர்கள் அரசியல் கட்சிகள், தங்கதுரையின் நண்பர்களான மார்டின், மாரடைப்பில் இறந்துபோன தியாகராஜன், குமரன், சாரதி துரைராஜ், அவர் பள்ளி ஆசிரியர்களான பங்கஜம், ஸ்டெல்லா டீச்சர் அவர் மனைவி ஜான்சி, இப்படிப் பல பண்புகள் கொண்ட ஆசிரியர்களை, அவர்களுடைய பலங்களை, பலவீனங்களை நுட்பமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

நாவலின் சிறப்பு அதன் ஓட்டம், வாசிக்க அலுப்புத் தராத விறுவிறுப்பான ஓட்டத்துக்கு நூலாசிரியரின் இயக்க சம்பந்தமான செய்திகள் துணை நிற்கின்றன.

எளிய மொழியை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் விதம் இந்த விறுவிறுப்புக்கு மேலும் துணை செய்கிறது. மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும் நுட்பமான இடங்களையெல்லாம் கவனமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர் இயக்க வாழ்வின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால எழுச்சியையும், வீழ்ச்சி என்று சொல்லி முடியாத ஒரு பின்வாங்குதலையும் வரலாற்றுப் போக்கில் பதிவு செய்வதில் இந்த நாவல் வெற்றி பெற்றிருக்கிறது.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

சந்தேகமே வேண்டாம்.. கீழடி வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு.. திராவிடம் அல்ல.. - ஆர்.பாலகிருஷ்ணன் IAS




கேள்வி: கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை: ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தை சேர்ந்தது.
கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌

சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லை பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.

கேள்வி: சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டை கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.

1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.

2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.

சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டு தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டு கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டு பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்ச கட்டமும் ஆகும்.
சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாக தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்து தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும். இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும். 
-R Balakrishnan IAS

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் தலைமையாசிரியர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்து செயல்முறை- CEO


Go RT No:4083 விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு திரு.சண்முகம் IAS அரசு முதன்மை செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


02.10.2019 நடைபெறும் கிராம் சபை கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - நாமக்கல் CEO

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 30.09.19்அன்று படைத்துள்ள பத்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்கள்











தமிழ்நாடு அரசு விதிகளின் படி விலையில்லா நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்...

தமிழ்நாடு அரசு விதிகள் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபடும், வேறுபடும் சீரற்றச் செயல்பாட்டை  ஆட்சேபிப்போம்!கண்டிப்போம்!தண்டனை கோருவோம்!
-------------------------------- 
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் கல்வித்துறை செயல்முறைகள் அனைத்தும் 
 ஏக காலத்தில், ஒரே மாதிரியாக,
ஒரே சீராக அமலாகி வருகிறது என்று தான் நம்பிக்கை வைக்கப்படுகிறது.
இத்தகு நம்பிக்கையை இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் தவிடுபொடியாக்குகிறது.  
எப்படி ?!என்கிறீர்களா?!இதோ!இப்படித்தான்.

பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் செய்யப்படும் என்கிறது பள்ளிக் கல்வித்துறை. ஆனால் இராசீபுரத்தில் மட்டும் இதை எதிர்பார்க்க கூடாது.

சரக்குந்து வாடகைக்கு வைத்து , அரசு செலவில்,
அரசு நிதியில் பள்ளிக்கே நலத்திட்டப்பொருள்கள் மாநிலமெங்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 ஆனால் இராசிபுரம் ஒன்றியத்தில் மட்டும் சரக்குந்து வைத்து நலத்திட்டப்பொருள்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. அரசுவிதிகளுக்கு நேர்எதிராக பள்ளித்தலைமையாசிரியர்களும்,ஆசிரியப்பெருமக் களும் சாக்குப்பைகளை கொண்டுவந்து நலத்திட்டப்பொருள்களை எடுத்துச்செல்லவேண்டுமென்று இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்தால் பணிக்கப்படுகிறது .

கடந்தவாரம் விலையில்லாச் சீருடையை 
தூக்கிச் சுமந்தனர்.
இந்தவாரம் பாடநூல்கள் ,
குறிப்பேடுகள் தூக்கி சுமக்கின்றனர். கொஞ்சமும் கூட மனிதநேயமும், ஈவும்,இரக்கமும் இன்றி பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக் களை அலைக்கழித்து, சுமை தூக்கிடச் செய்து சுமைதூக்கிகளாக்கி  வேடிக்கை பார்க்கும்,  
அழகு பார்க்கும் நெறியற்ற, முறையற்றச் செயலை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி்ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சேபிக்கிறது.
இது குறித்து கீழ்க்கண்டவாறு கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1)விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் பள்ளி விநியோகத்திற்கு என்று இராசிபுரம் 
வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது தானே?!இவ்வாறு  ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்து அளித்திடல் வேண்டும். பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு இதுவரை கடந்த கல்வி ஆண்டுகளிலும்  ஏற்படுத்தியுள்ள செலவுகளை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  ஈடுசெய்திடவேண்டும்; திருப்பித்தந்திடவேண்டும்.

2)தமிழ்நாடு அரசு விதிகளை அப்பட்டமாக, மிகத்துணிச்சலாக புறந்தள்ளிவிட்டு பள்ளித்தலைமையாசிரியர்களை, ஆசிரியப்பெருமக்களை சுமைதூக்கிகளாக்கி படாதபாடு படுத்தி துன்பம் விளைவித்ததற்கு இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகம் மன்னிப்பு வேண்டுதல் வேண்டும்.

3)எதிர்வரும் விலையில்லா நலத்திட்டப்பொருள்களின் விநியோகத்தில் எவ்விதமான குறைபாடும் ஏற்படாது ,அரசு விதிகள் மீறப்படாது என்று உத்திரவாதம் அளித்திடல் வேண்டும்.

4)தமிழ்நாடு அரசின் நிதியினை இராசீபுரம் வட்டாரக்கல்வி நிர்வாகம்  தவறாக கையாண்டது, முறைகேடாக செலவிட்டது குறித்து ஆய்வும், விசாரணையும் நடத்தி தவறிழைத்தவர்களின்  மீது கடுமையான  ஒழுங்குநடவடிக்கைகள்  மேற்கொள்ளல் வேண்டும். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில் சுணக்கமான நிலை 
நிர்பந்தங்களின் வழியில் உருவாக்கப்படின் அல்லது  காணப்படின் ,
பல்வேறு வகைகளிலும் பெரிதும்.  பாதிக்கப்பட்டுள்ள இராசீபுரம் ஒன்றியத் தலைமையாசிரியர்களுக்கான  ,ஆசிரியப்பெருமக்களுக்கான  நீதிக்கான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட அமைப்பு  மேற்கொள்ளும்! நீதிக்கான நெடும்பயணத்தில் ஆசிரியர் மன்றமே வெல்லும்!
#நாளை நமதே!
நன்றி.
-முருகசெல்வராசன்.