சனி, 16 நவம்பர், 2019

நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

ஊமைத்துரை நினைவு தினம் இன்று (1801).

 வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை.
இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.

 ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.

இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை,
 அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது

காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

தேசிய  பத்திரிகை தினம் இன்று.

நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனாநயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி ஜனநாயக நாட்டில் மிக முக்கியமானது. மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி அதற்கு தீர்வு கிடைக்கும் பணிகளையும் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

மாணவர்களுக்கு பொது அறிவுத் தகவல்கள் -3









நவம்பர் மாதம் 3வது வாரச் செயல்பாடுகள்_இயக்குநர் செயல்முறை



சொந்த ஒன்றியங்களிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வாய்ப்பு...

பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அய்ஏஎச் நியமனம் பொருத்தமற்றதாகும். முந்தைய நடைமுறையே தொடரப்படவேண்டும்.இதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டும்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைஇயக்ககத்துக்கு இந்தியஆட்சிப் பணி அதிகாரி( அய்.ஏ.எச்.,)
நியமனம் செய்வதென்பது 
கடந்த காலத்திலும் பேசப்பட்டது;
செய்யப்பட்டது.
அக் காலக்கட்டங்களில் எல்லாம் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் மிகவலுவாக வியூகம் அமைத்துப் போராடி முறியடித்த வரலாறு உண்டு.
சர்வசிக்ச அபியான் என்ற பெயரை அப்படியே இந்தி மொழியில் தமிழகத்தில்  நுழைய  அனுமதிக்காது அனைவருக்கும் கல்வித்திட்டம் என்று  மாற்றம் கண்டவர்கள் தமிழ்நாட்டு தொடக்கக்கல்வி ஆசிரியப்பெருமக்கள்.
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (எச்பிடீ)மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த அய்.ஏ.எச்.,அதிகாரியை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநராக தற்காலிகமாக பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டக் 
காலக்கட்டத்தில் மிகக்கடுமையான எதிர்ப்பினை 
பதிவு செய்து தொடக்கக்கல்வி  இயக்ககப்
பொறுப்பிலிருந்து அய்ஏஎச் அதிகாரியை விடுவிக்கச்செய்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்.
புதியவரைவுக்கொள்கைவரைவறிக்கை 2019ஐ தமிழகத்தில் எவ்விதமான விவாதமும் இன்றி  விருப்பம் போல் அமல்படுத்துவதின் ஒருபகுதி இத்தகு அய்ஏஎச் நியமனம் என்பதே யெதார்த்தமான உண்மையாகும். தற்போது தமிழ்நாட்டு ஆசிரியர்கள்  எதிர்க்கவேண்டியது; ஆட்சேபிக்க வேண்டியது அய்ஏஎச் நியமனத்தை என்பதைவிட , புதியகல்விக் கொள்கையின் வரைவறிக்கை 2019 என்பதே மிகச்சரியானதாகும்;
மிகப்பொருத்தமானதாகும்.இவ்விலக்குநோக்கி பயணிப்போம்!
தீரமுடன் படைநடத்துவோம்!
சங்கே முழங்கு!
-முருகசெல்வராசன்.
நவம்பர் 15,
வரலாற்றில் இன்று.

ஐசக் பிட்மேன் சுருக்கெழுத்து(short hand)முறையை அறிமுகப்படுத்தின இன்று (1837).

 இதுவே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்தாகும். 15 மொழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. விரைவாக எழுதுவதற்காக சுருக்கமாக எழுதும் முறைகள் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகமாயின.

 1588இல் டிமோத்தி ப்ரைட் என்பவர், ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும் 500 குறியீடுகளை அறிமுகப்படுத்தினார். 1590இல் பீட்டர் பேல்ஸ், 1602இல் ஜான் வில்லிஸ், 1618இல் எட்மண்ட் வில்லிஸ், 1626இல் தாமஸ் ஷெல்ட்டன், 1633இல் தியோஃபிலஸ் மெட்கால்ஃபே, 1654இல் ஜெரமியா ரிச், 1682இல் வில்லியம் மேசன், 1720இல் ஜான் பைரோம், 1786இல் சாமுவேல் டேய்லர், 1834இல் ஜெர்மெனியில் ப்ரான்ஸ் காபெல்ஸ்பெர்ஜர் உள்ளிட்டோர் மாறுபட்ட சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் சுருக்கெழுத்து முறைகள் பண்டைய கிரீஸ் நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதை, கி.மு. 4ஆம் நூற்றாண்டுகால மார்பிள் பலகையால் அறிய முடிகிறது. சீனாவில் நீதிமன்ற விசாரணைகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்யும் முறை இருந்துள்ளது. கையால் எழுதும்போது ஒன்றோடொன்று இணைந்த எழுத்துக்களால் எழுதும் கர்சிவ் எடுத்துமுறையை லாங்ஹேண்ட்  என்று குறிப்பிடுவதிலிருந்து ஷார்ட்ஹேண்ட் என்ற சொல் பிறந்தது.

 மை தொட்டு எழுதும் பேனாக்களை, காகிதத்திலிருந்து எடுக்காமல் எழுதவே இந்த கர்சிவ் உருவானது. மத்தியக்கால லத்தீன் மொழிச்சொல்லான கர்சிவஸ் என்பதிலிருந்து உருவான, 18ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மொழிச்சொல் கர்சிவோ என்பதற்கு தொடர்ச்சியான என்று பொருள்.

 பிட்மேனுக்குப் பின்னும் பல சுருக்கெழுத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பிட்மேன் சுருக்கெழுத்து முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் டீலைன், அமெரிக்காவில் க்ரெக் ஆகிய சுருக்கெழுத்து முறைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

செய்தியாளர், செயலாளர் முதலான பணிகளுக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி கட்டாயம் என்றிருந்த நிலையை, எளிதில் எடுத்துச் செல்லும் ஒலிப்பதிவுக் கருவிகள், டிஜிட்டல் கேமரா, மொபைல் ஃபோன் ஆகியவற்றின் வளர்ச்சியும், பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருட்களின் வரவும் முடிவுக்கு இட்டுச்சென்றன.
நவம்பர் 15,
வரலாற்றில் இன்று.

கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) பிறந்த தினம் இன்று.

  சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை  அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923இல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 15,
வரலாற்றில் இன்று.

நன்றி சொல்லும் தினம் இன்று.

வாருங்கள் நன்றி சொல்வோம்.

கடைசியா யாருக்கு, எப்பொழுது நன்றி சொன்னீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?


 அன்றாட வாழ்வில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலருடைய உதவியும், வழிநடத்தலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
சில நேரங்களில் அதை நாம் கவனித்து அவர்களுக்கு நன்றி சொல்லி விடுகிறோம்.


 ஆனால், பிறந்ததில் இருந்து கடைசி வரை நம்முடன் வரும் உறவுகளுக்கு நன்றி சொல்லியிருப்போமா என்று கேட்டால், அதற்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இதுவரை சொல்லாமல் இருந்தாலும் இன்று ஒரு நிமிடம் மன நிறைவோடு உங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

 இன்னைக்கு மட்டும் ஏன் நன்றி சொல்லணும்னு கேட்கிறீங்களா? ஏன்னா இன்னைக்கு 'சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்'.

 நாம் பிறந்தது முதல் நமக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் செய்யும் இருவர் உண்டு. அவர்கள்தான் அம்மா, அப்பா. நம்மளோட வெற்றிக்கு முதல்ல சந்தோஷப்படுறவங்க நம்மள பெத்தவங்களாதான் இருக்க முடியும். நம்மளோட கோபம், பாசம், வெறுப்புனு எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டுவோம். ஆனா, அவங்க நமக்காக பல விஷயங்களை செய்யுறாங்கனு தெரிஞ்சும் அதை பெரிசா பொருட்படுத்த மாட்டோம். நன்றியை எதிர்ப்பார்த்து அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், ஒருமுறை பாசத்தோடு அவர்களை கட்டியணைத்து நன்றி கூறிப் பாருங்கள், அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முயற்சி பண்ணித்தான் பாருங்களேன் !

 அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாத ரகசியங்களைக் கூட, நண்பர்கள் கிட்ட தைரியமா சொல்ல முடியும். யாரிடமாவது பல்ப் வாங்கினதாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பாராட்டு பெற்றதாக இருந்தாலும் சரி, அவங்ககிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. நம்ம போடுற மொக்கை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, நம்மளோடவே இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நம்முடைய நண்பர்கள் மட்டும்தான். அந்த நண்பர்கள், ஒரே பாலினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர் பாலின நண்பர்களாகவும் இருக்கக்கூடும். நாம செய்யுற தப்புகளுக்கு நம்ம நண்பர்களைத் தான் முதலில் திட்டுவார்கள் நம்மளப் பெத்தவங்க. அந்த திட்டுகள எல்லாம் வாங்கிக் கொண்டும், நம்ம கூடவே இருக்குற நண்பர்களுக்கு என்னைக்காவது நன்றி சொல்லி இருப்போமா? அந்த நன்றி ஃபார்மலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில தட்டியோ, கன்னத்தில் அறைந்தோ, உங்களுடைய பாசத்தையும், அன்பையும் எப்படி வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ அப்படி தெரிவித்தாலே அவர்கள் காலம் முழுக்க உங்களோட இம்சைகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று விடுவார்கள்.

பெற்றோர், நண்பர்களைத் தாண்டி, அடுத்தபடியாக நம் வாழ்க்கையை அழகாக்கவும், நம்முடைய பொறுப்புகளை அதிகரிக்கவும், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வரும் உறவு, வாழ்க்கைத் துணை. இந்த உறவில் அதிகப்படியான புரிதல் கட்டாயம் தேவைப்படும். வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கைத் துணையுடன் உட்கார்ந்து பேசும் வாய்ப்புகள் கூட மிகவும் குறைவாகி விட்டது. இருவரும் ப்ளான் பண்ணி நேரம் செலவிட முடிவெடுத்தாலும், ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, போட்ட திட்டங்கள் அனைத்தும் சிலநேரங்களில் வீணாகி விடுவதும் உண்டு. பேச நேரம் கிடைக்கவில்லை என இத்தனை நாள் கவலைப்பட்டிருந்தாலும், இன்று இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, அவர்களுக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் சென்று, உங்களின் காதலை வெளிப்படுத்துங்கள். வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் உங்களுடன் கடைசிவரை வரப் போகும் உறவு என்பதை உணருங்கள். நன்றி என வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும், அதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். இதன்பிறகு எத்தனை முறை நீங்கள் சொதப்பினாலும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

 மேலே சொன்ன அத்தனை பேரும் நம்முடன் ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதால், நமக்காக நாம் செய்யும் தவறுகளையும், நாம் காணும் வெற்றிகளையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்காக நன்மை செய்வதில் அக்கறை கொண்டு இருப்பவர்கள். இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி உள்ள மக்களுக்குக்கு நாம எதுவும் செய்யாவிட்டாலும், இந்த சமூகம் நமக்காக பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. இருசக்கர வண்டியில் 'சைடு ஸ்டாண்ட்' எடுக்காமல் போகும்போது, அதை நமக்கு தெரியப்படுத்தும் நபருக்கு நாம் எந்த விதத்திலும் சொந்தமில்லை. ராணுவத்தில் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட குடும்பத்துக்காக போராடி உயிரை இழக்கவில்லை.

நமக்கும் அவர்களுக்கு உறவு எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நமக்காகவும், நம்முடைய சொந்தங்களுக்காவும்தான் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதக் கவலையும் இன்றி பாட்டு கேட்டுக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ வருகிறோம், ஆனால் நம்மைப் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறார்கள் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும். முக்கியமான ஒரு இடத்துக்கு சீக்கிரமே போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது நாம அதிகம் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஆட்டோதான். ஏறின அடுத்த நிமிடம் நினைத்த இடத்துக்கு போயாக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாம் கொடுக்கும் அவஸ்தைக்கு ஆயிரம் முறைகூட நன்றி சொல்லலாம். மிக முக்கியமாக தலைவலி இருக்கோ இல்லையோ, வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் தவறாமல் வேலைக்குச் செல்லும் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம், அலுவலகத்தில் அல்லது பக்கத்தில் இருக்கும் டீ கடைதான். டீயா, காப்பியா என கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், அங்கு சென்றால் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது போல உணர்கிறோம். இவர்களுக்கு எல்லாம் எப்போதாவது நாம் நன்றி சொல்லியிருப்போமா? இதுவரை சொல்லாவிட்டாலும் இன்று நன்றி சொல்லுங்கள்! நேரடியாக நம்முடைய நன்றியைத் தெரிவிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்காகவும், குடும்பத்துகாகவும் தினமும் பிரார்த்தனை செய்யலாமே.

வாழ்க்கை என்பது நாம் எதிர்ப்பார்த்தபடி எல்லா நேரங்களிலும் அமையாது, அப்படி அமையும்போது, கட்டாயமாக நம்மையும் தாண்டி, வேறு சிலருடைய உழைப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும். முடிந்தவரை நம்முடைய 'ஈகோ-வை' விட்டுவிட்டு, அந்தந்த நேரத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் அன்பு பாராட்டி, வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள்! கிடைத்த வாழ்க்கையை வரமாக்குவதும், சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. இதனைப் படித்ததற்கு மிகவும் நன்றி!!
நவம்பர் 15,
வரலாற்றில் இன்று

மனித உரிமைகள் ஆதரவாளர் வினோபா பாவே நினைவு தினம் இன்று.

மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.

இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951ஆம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.

13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தை இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்