திங்கள், 4 மே, 2020

மே 4,
வரலாற்றில் இன்று.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் நினைவு தினம் இன்று.


 முகம்மது இஸ்மாயில்(Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின்  தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.


திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.



தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

 இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார்,

 பாகிஸ்தான் தோற்றத்தற்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.



1947 இல் பாகிஸ்தான் உருவானபோது, அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.


அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.


அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.

சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946ஆம் ஆண்டு முதல் 1972ஆம்ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.
மே 4,  வரலாற்றில் இன்று.

பியானோ வை கண்டுபிடித்த
பார்தலோமியோ கிறிஸ்டோஃபொரி பிறந்த தினம் இன்று.

 1655ஆம் ஆண்டு வெனிசில் பிறந்த இவர் சுத்தியல் இயங்குமுறையைக் (hammer mechanism) கண்டுபிடித்ததன் மூலம் இசை உலகிற்கு பெரும் பங்களிப்பை செய்தார். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டுதான் தேவைக்கு ஏற்றபடி கூட்டி குறைத்து இசையைக் கொண்டு வரும் கருவியை அவர் கண்டுபிடித்தது. இந்த கருவிக்கு இத்தாலியில் இவர் ‘பியானோ போர்ட்’ என்று பெயர் வைத்தார். பியானோ என்றால் ‘மென்மை’ என்றும் ‘போர்ட்’ என்றால் சத்தம் என்றும் அர்த்தம்.
மே 4, வரலாற்றில் இன்று.

திப்பு சுல்தான் நினைவு தினம் இன்று.

புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய
வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .
எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி
மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி .
ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து
போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்
படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.
கி.பி.1767முதல் கி.பி.1769 வரை
தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில்
ஆங்கிலப் படைக்கும், மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய
மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது.
ஹைதர் அலி போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட ,  மன்னர்
ஆனார் திப்பு. அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள்
போரக்களத்திலேயே கழித்தார்.

‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது
ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள்.
பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும்
முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.

உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதி முறையை
பின்பற்றினார், தனித்த எடை,அளவுகள் ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார். இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில் பெரிய ராஜ்யங்களை, அவர் காலத்தில் ஆண்ட மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம் என்று சொல்லியபடியே ஆண்ட பொழுது தனித்து நின்று தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம்
கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது
சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே
பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக
சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துக்காட்டு இவர். நூற்றி ஐம்பத்தாறு
கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில்
மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும். கோயில்களுக்கு
செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும்
2,13,959 அளிக்கப்பட்டது. இவர் ஆட்சியில்,
சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய
உறவு பாராட்டினார்.

மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை
சீரமைத்துக் கொடுத்தார்.

அவர் காலத்தில் சந்தன விற்பனை தேசியமயமானது. பட்டுப்புழு உற்பத்தியை தன் ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக
இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும் முனைந்தார்.  கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,
முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட
நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின்
நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர்
நிலங்களை பெற்றார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த
மக்கள் இந்த முறைகளால், அங்கே இடம் பெயர்வதும் நடந்தது. நான்கு மைல்களுக்கு
ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .

ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு
சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத்
தடுத்து சட்டம் இயற்றியுள்ளார்.
கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.
ஆங்கிலேயரோ அதே காலத்தில் வங்கத்திலும், பீகாரிலும் கஞ்சாவை
உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும் வகையில் அதை ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தனர்.

திப்பு அதே சமயம் ஆங்கிலேயருக்கு யாரேனும் உதவுகிறார்கள் என்று தெரிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும் யோசிக்கவில்லை. இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை
மே 4,  வரலாற்றில் இன்று.

சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை சேதங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும்.

ஞாயிறு, 3 மே, 2020

நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச்சாவடிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


மே 3, வரலாற்றில் இன்று.

 இந்தியாவில் முதல் சினிமா 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியான தினம் இன்று (1913).

இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது?

இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 106 முடிந்து, 107இல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்திய மக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம்.

நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?  அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்டம் என்று அறிவியலின் உச்ச சுகங்களைக் கண்டுகொண்டிருக்கும் நாம், அனைத்தையும் மறந்து, 1913ல் மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்போம்.

திரையில் காணும் முதல் திரைப்படம் என்ற அனுபவமே அலாதியான ஓர் ஆச்சரியம் தான் அவர்களுக்கு. நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களை திரையில் காணும்போது, ஓடிவரும் காட்சியில், திரையைக் கிழித்து நம் மேல்வந்து விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சியிருப்பார்கள். படத்தில் நெருப்பு சார்ந்த காட்சிகள் இருந்திருந்தால், அச்சத்தோடும், அதிர்ச்சியோடும் கண்டு களித்திருப்பார்கள். வீடியோவிற்கு என தனி ரீல் பெட்டிகள், ஒலிக்கு தனியாக ஆம்ப்ளிஃபயர் என்று அனைத்துமே வித்தியாசமாகத்தானே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறை காணாத, சினிமாவின் அறிமுகநிலை அது.

இந்த சினிமா வரலாற்றுக்கு அடிகோலாக, சினிமா மேல் ஆர்வத்தையும், சினிமாவிற்கு கலைஞர்களை ஈர்க்க ஆதாரமே இந்த ராஜா ஹரிச்சந்திரா தான். இந்தியாவின் முதல் முழுநீள மெளனப்படம் (Silent Film). 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் மராத்திய மண்ணில் தயாரானது. இப்படத்தை இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகிப் பால்கே எழுதி, இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் பண்பாடு சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், மக்களின் மனநிலைக்கு ஏற்ற படங்களாகவே உருவானது. அதாவது புராணங்கள், இதிகாசங்களைச் சார்ந்த நாடக பாணியிலான படங்களே உருவானது. நாடகங்களின் தாக்கங்கள் நிறைந்திருந்த காலகட்டத்தில் வெளியான ராஜா ஹரிச்சந்திரா படமும், புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைக்கருவே.

நீதிநேர்மை தவறாத மன்னராக ராஜா ஹரிச்சந்திரா, தன்னுடைய ராஜ்யத்தை துறந்து, தன் மனைவி, மகனுடன் சென்று முனிவர் விஸ்வாமித்ரருக்கு இனி ராஜ்யம் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்துகொடுப்பது போன்றதொரு கதைக்களமே திரைப்படம். இந்தப் படத்தை எடுத்துமுடிக்க 7 மாதங்களும், 21 நாட்களும் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி படத்திற்கான டைட்டில் ஆங்கிலம், மராத்தி மற்றும் ஹிந்தியில் போடப்பட்டிருக்கிறது.  மராத்தியின் பிரபல நாடகநடிகரான தத்தாத்ரேயா தமோதர், ராஜா ஹரிச்சந்திர மன்னராக நடிக்க, ராணியாக நடித்தவரும் ஓர் ஆண் கலைஞரே. அந்த நேரத்தில் பால்கேவிற்கு பெண் நடிகர் கிடைப்பதில் சிக்கல் இருந்த சமயம். அதையும் தாண்டி படத்தை சவால்களுக்கு மத்தியில் எடுத்துமுடித்தார் பால்கே.

இந்தப் படத்தை முதன்முறையாக பாம்பே  Coronation Cinema என்ற இடத்தில் திரையிடப்பட்டது. அந்தசமயம் மக்கள் கூட்டம் அரங்கத்தையும்  தாண்டி வீதிவரைக்கும் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,  பட அச்சுகள் தயாரிக்கப்பட்டு கிராமப் பகுதிகளுக்கும் திரையிட்டுக் காட்டினார் இயக்குநரான பால்கே.

ராஜா ஹரிச்சந்திரா படத்தின் வெற்றி பால்கேவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. பல படங்களை இயக்கவும், தயாரிக்கவும் இப்படம் வழிகாட்டியாக அமைந்தது.

பால்கேவிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமா இந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சமாக, உலக சினிமா தரத்திற்குச் செல்ல, இப்படமே ஆதாரம்.
மே 3, வரலாற்றில் இன்று.

அழகியலையும் அறிவியலையும் குழைத்து தந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று.

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்.

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935ஆம் ஆண்டு.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!

* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.
மே 3, வரலாற்றில் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை துவக்கப்பட்ட தினம் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை முதன் முதலாக 1941ஆம் ஆண்டு மே 3 அன்று தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அரை மணிநேரம் தமிழில் தென்இந்தியா மற்றும் இலங்கைக்கு உலகச் செய்திகள் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்கிறது.
மே 3, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான ஜாகிர் உசேன் (Zakir Husain) நினைவு தினம் இன்று.

# ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் (1897) பிறந்தார். இவரது ஆரம் பக் கல்விக்குப் பிறகு, குடும்பம் உத்தரப் பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தது. தந்தை பிரபல வழக்கறிஞர். 10 வயதில் தந்தையும் அடுத்த 4 ஆண்டுகளில் தாயும் இறந்தனர்.

# சுய முயற்சியால் படித்தவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கு படித்த போது, காந்தியடிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவரது ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது.

# தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அலிகாரில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1920-ல் டெல்லிக்கு மாற்றப் பட்டது. ஜமியா மில்லியா இஸ்லாமியா எனப் பெயர் மாற்றப்பட்டது.

# ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1927-ல் நாடு திரும்பியவர், மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சீரிய தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணி புரிந்தார்.

# சுதந்தரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை சோதனை முறையில் இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

# இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராகத் திகழ்ந்தார். ஆதாரக் கல்வி முறை, கல்வி வளர்ச்சி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் ‘ரிபப்ளிக்’ நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

# இவர் ஜமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் தூய்மையாக கல்லூரிக்கு வருவதை வலியுறுத்தினார். ஆனாலும், மாணவர்கள் அழுக்கு ஷுவுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், கல்லூரி வாசலில் பிரஷ், பாலிஷுடன் நின்றுகொண்டார். அழுக்கு ஷுவுடன் வந்த மாணவர்களிடம், ‘காலைக் காட்டு. நான் பாலிஷ் போடுகிறேன்’ என்றார். வெட்கம் அடைந்த மாணவர்கள் இனி அழுக்கு ஷுக்களுடன் வருவதில்லை என உறுதியேற்றனர்.

# காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்துக்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

# 1956-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பிஹார் ஆளுநராகப் பதவியேற்றார். 1962-ல் குடியரசு துணைத் தலைவராகவும், 1967-ல் 3-வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்’ என்று கூறியவர்.

# கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 1954-ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கெய்ரோ பல்கலைக்கழகங்கள் இலக்கிய மேதை பட்டம் வழங்கின. 1963-ல் பாரத ரத்னா விருது பெற்றார். நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் 72-வது வயதில் (1969) மறைந்தார்.
மே 3, வரலாற்றில் இன்று.

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், தற்காலச் சமூகத்தின் நிலை, அறிவியல், அரசின் செயல்பாடு, கலாச்சாரம், வியாபாரம், விளையாட்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்தமாகவும் உண்மையான நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை பொறுப்புணர்வுடன் வெளியிடவும், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமைக்கான பத்திரிக்கை சுதந்திரத்தினை காப்பதற்கும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1986-ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப்பற்றி எழுதியதற்காக கொலை செய்யப்பட்டார். இதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும்விதமாக மே-3 ஆம் நாளினை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது.

 இந்நாளில் யுனெஸ்கோ அமைப்பு உலகில் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளருக்கான விருதினை வழங்கி கௌரவிக்கிறது.