சனி, 23 மே, 2020

மே 23, வரலாற்றில் இன்று.

தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும்  தமது பாடல்களால் உடுமலைப்பேட்டைக்கு ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த உடுமலை நாராயண கவி அவர்களது நினைவு தினம் இன்று (1981).

25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் இனமென்று அடையாளம் வைத்தார்.

தமது 5 ஆவது வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். 12 ஆவது வயதிலேயே பெற்றோரை பின்னர் தமது உறவினர் வீட்டில் வளர்ந்தார். கைத்தொழில்கள் புரிந்தும், சிறு சிறு வியாபாரங்கள் செய்தும் பொருளீட்டினார். சிறு வயதிலேயே இசையார்வம் மிகக் கொண்ட கவிஞர், உடுமலை சரபமுத்துச்சாமிக் கவிராயர் ஆசிரியராக இருந்த ஆரிய கான சபையில் சேர்ந்து நாடகக் கலைஞராக விளங்கினார். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடன்றி, அவரின் உதவியால் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கலையை முறையாகக் கற்றார்.

இந்த நேரத்தில் நாராயண கவிக்கு, பேச்சியம்மாளுடன் திருமணம். பின் மதுரைக்குச் சென்றுவிட்டார். அங்கு மதுரையில் நாடகக் கலைஞர் எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களுடன் நாடகக் கலையில் தொடர்பு கொண்டார்.  நாடகக் குழுக்களுக்கு மேடை நாடகப் பாடல்களை எழுதிக் கொடுத்தார்..

இந்த நிலையில் கிராமஃபோன் கம்பெனியிலிருந்த நாராயண ஐயருடைய அறிமுகம் ஏற்பட்டது. நாராயண ஐயருடன் சென்னைக்குச் சென்றார். அவரின் உதவியினாலேயே கிராமஃபோன் இசைத்தட்டுக் கம்பெனிக்குப் பாடல்களை எழுதிக்கொடுக்கத் துவங்கினார். இவரின் கவித்திறமையைக் கண்ணுற்ற திரைப்பட இயக்குநர் ஏ.நாராயணன், இவரைத் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதிடச்செய்தார்.

அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்கள் பல கல்கத்தாவிலேயே தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் கல்கத்தா சென்று ‘கிருஷ்ணன் தூது’ படத்திற்குப் பாடல்களை எழுதினார். இதேபோல் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பான ‘தூக்கு தூக்கிக்கு’ கதை, வசனம், பாடல்களை எழுதினார். 1936 இல் பல நாடகங்களுக்கு இவருடைய பாடல்கள் சிறப்பைக் கொடுத்தன. பின்னர், ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘நல்ல தம்பி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பிரபாவதி’, ‘காவேரி’, ‘சொர்க்கவாசல்’, ‘தூக்கு தூக்கி’, ‘தெய்வப்பிறவி’, மாங்கல்ய பாக்கியம், ‘சித்தி’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ஆதி பராசக்தி’, ‘தேவதாஸ்’ போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர்களுக்கு பல தனிப் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

மக்களிடையே இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டின. தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயண கவிராயர், மகாகவி பாரதியாரின் நட்பிற்குப் பிறகு சமுதாயப் பாடல்களை எழுதத் துவங்கினார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, நாராயண கவிராயர் ஆஸ்தான கவிஞரானார். கலைவாணருக்காக கவிஞர் எழுதிய ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் மிகவும் புகழ் பெற்றது.

மகாகவி பாரதியாருடைய நண்பர் வ.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அவரது காலத்திலிருந்தே அனைத்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.

இயல்பாகவே இனிமையான சுபாவம் படைத்த கவிராயர், நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும், தலை வணங்காத உறுதியுடையவர். பிறருக்கு என்ன உதவியாயினும், செய்யக்கூடியவர். அவருடைய சிறப்பான பாடல் திறத்திற்கு சில சான்றுகள்:
மாங்கல்ய பாக்கியம் படத்தில்
ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்
என்றே தேறுவது அறிவாகும் அது
நன்றேயாகுமென உணர்ந்திடாது-
மக்கள் உன்றே கூறுவது தவறாகும்……
தூக்கு தூக்கி படத்தில்
1-குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
2-பெண்களை நம்பாதே- கண்களே பெண்களை நம்பாதே
3-சுந்தரி சௌந்தரி நிரந்தரியே……
தெய்வப்பிறவி படத்தில்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்லம் தங்கம்……..
எங்கள் வீட்டு மகாலெட்சுமி படத்தில்
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு சேர்க்கலாமடி….
திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும், புகழையும் வைத்திருந்தார். இவரது பாடல்களில் பழமையின் வலிமை, புதுமையின் எளிமை, கவிதையின் இனிமை, கருத்தின் பெருமை, இசையின் எளிமை, இசையின் செம்மை, தமிழின் கவித்தன்மை- முதலிய அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தன.

• கா...கா...கா... (பராசக்தி)
• அந்தக்காலம் (நல்லதம்பி, 1949, பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)
போன்ற பாடல்ககளை இயற்றி இருந்தார்.
மே 23, வரலாற்றில் இன்று.

உலக ஆமைகள் தினம் இன்று.

ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வெள்ளி, 22 மே, 2020

அண்ணா பல்கலைக் கழக சிறப்புத் தகுதியும்-
69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதியும் முக்கியம்! முக்கியம்!!
------------------------------------------
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு (சென்னை) சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு (அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோரும், நிதி, சட்டம், உயர்கல்வித் துறை செயலாளர்களும் இக்குழுவில் உள்ளனர்). இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
நேற்று (20.5.2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதில் அவர்கள்  முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திப்படி,
அண்ணா பல்கலைக் கழக சிறப்புத் தகுதியை மத்திய அரசு அளிக்கும் திட்டத்திற்கு - ஒரு முக்கிய நிபந்தனையின் பேரில் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். அதாவது 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில், இதனை நிராகரிப்பது என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழக அ.தி.மு.க. அரசும், அமைச்சர்களும் இதில் எந்தவித சமரசத்திற்கும் இடம்தராமல் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என்ற உத்திரவாதம் - ஆணையின்மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே, தனது ஒப்புதலை வழங்குவதில் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம்.

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

21.5.2020
சென்னை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் இன்று (22.5.2020) மாலை 4.30 மணிக்கு மரியாதை நிமித்தமாக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்  திரு.மு.ஆ.உதயக்குமார் அவர்களை சந்தித்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

மே 22, வரலாற்றில் இன்று.

 2018, மே 22 - இந்த நாள், தமிழ் வரலாற்றில் ரத்தத்தால் சிவந்த கறுப்பு நாள். இத்தனைக்கும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களும் சரி, தூத்துக்குடியில் போராடியவர்களும் சரி, கேட்டதெல்லாம் என்ன? சுவாசிக்க சுத்தமான காற்று, உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம்... அவ்வளவுதான்.

99 நாள்கள் வரை அமைதியாகத்தான் நடந்தது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம். நூறாவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைக் காரணம் காட்டி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தங்கள் நிலத்தையும் கடலையும் காற்றையும் பாழ்படுத்தும் ஒரு நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறை 13 உயிர்களைக் குடித்து அடக்கியது.  களத்தில் நின்றவர்கள், உத்வேகத்தில் போராடச் சென்றவர்கள், ஆர்வத்தில் உடன் சென்றவர்கள் என அடக்குமுறைக் குண்டுகளுக்கு இரையான 13 உயிர்களும் தூத்துக்குடியின் பிரச்னையை உலகப் பிரச்னையாகக் கொண்டு நிறுத்தினர்.

‘தீவிரவாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள், சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்று போலீஸும் அரசும் கூறியவை பொய்யில் நனைத்த வார்த்தைகள் என்பதற்கு உதாரணம், 17 வயது மாணவி ஸ்னோலின் மரணம். அவரோடு கார்த்திக், மணிராஜ், கந்தையா, தமிழரசன், ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வ சேகர், காளியப்பன், சண்முகம், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். அரசு வன்முறை அம்பலப்படுவதற்குக் காரணமான, வீரஞ்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு விதையான இந்தத் தியாகிகள், தமிழகம் மறந்துவிடக்கூடாத வரலாற்று நாயகர்கள்.

-விகடன்
மே 22, வரலாற்றில் இன்று.

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இனறு.


# சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன்.

தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.

எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார்.

பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம். இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார்.

 ‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர்.

இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.

கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார்.

தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.

ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56ஆவது வயதில் (1977) காலமானார்

Whatsapp கொடுத்துள்ள ஒரு Trick...

வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் காலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம். 

இவற்றை அழிக்க Whatsapp கொடுத்துள்ள ஒரு Trick...

வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம்.

செயற்படுத்தும் படிமுறை...

◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

◆ பின்பு GROUP INFO வை அழுத்தவும்.

◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.

01. Mute Notification

02. Custom

03. Media Visibility

இதில் Media Visibility ஐ அழுத்தவும்,அதில்
Default
 Yes
 No
என்று காணப்படும், அதில் No வை அழுத்தி பின்னர் Ok பண்ணவும்.

இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்  சேமிக்கப்படமாட்டாது.
மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.
மே 22, வரலாற்றில் இன்று.

ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்ற தினம் இன்று(1906).
மே 22, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவரும், பிரம்ம சமாஜத்தை நிறுவியவருமான ராஜா ராம் மோகன் ராய் (Raja Ram Mohan Roy) பிறந்த தினம் இன்று.

  √ வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் ராதாநகர் கிராமத்தில் (1772) பிறந்தார். உயர் கல்விக்காக பாட்னா சென்றவர், 15 வயதுக்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்களையும் ஆழ்ந்து கற்றார். சிலை வழிபாடு, சடங்குகள், சாதிவெறி, மதவெறி, பழமைவாதங்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தந்தையுடன் கருத்து வேறுபாடு எழுந்தது.

  √ கொல்கத்தாவில் வட்டிக் கடையில் வேலை செய்தார். பின்னர் 5 ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். ஆங்கில நாகரிகம் பிடித்திருந்ததால், இங்கிலாந்துக்கு பலமுறை சென்று வந்தார்.

  √  சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளைக் கண்டு வெகுண்டார். சாதி, மத, சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக கொல்கத்தாவில் 1815-ல் ஆத்மிக சபையை உருவாக்கினார்.

  √ இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார். பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்.

  √ வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.

  √ ஆங்கிலம், இந்து, பெர்ஷியன், வங்காள மொழிகளில் பல கட்டுரைகளை எழுதினார். ஆங்கில முறைக் கல்வி போதிக்கும் பள்ளியை 1822-ல் நிறுவினார். மேற்கத்திய - இந்திய கற்றல் முறை இணைந்த பாடத்திட்டம் கொண்ட வேதாந்த கல்லூரியை 1826-ல் நிறுவினார். இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் முக்காடு அணியும் முறைக்கு எதிராக குரல் எழுப்பினார்.

  √  கோயில்களில் உயிர் பலி போன்ற சடங்குகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம், மத நல்லிணக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டினார்.

  √ வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். 1833-ல் வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால், சதி ஒழிக்கப்பட்டது.

  √  மாபெரும் கல்வியாளர், சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். மேற்கத்திய மருத்துவம், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர்.

  √ மோசமான பழக்கங்கள், சடங்குகளை ஒழித்து சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவரும், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராஜா ராம் மோகன் ராய் 61 வயதில் (1833) மறைந்தார்.
மே 22, வரலாற்றில் இன்று.

 சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் இன்று.

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது

இன்றைய நாட்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பது இயற்கை சார்ந்த வனச்சுற்றுலா என்பதில் சந்தேகமில்லை. வனச்சுற்றுலா நடக்கும் முதுமலை,பந்திப்பூர் போன்ற இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதே அதற்கு சாட்சி.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்துவார்கள்.இந்த வருட உலக பல்லுயிர் தினத்தின் கருவாக சுற்றுலா வளர்ப்பும்-பல்லுயிர்சூழல் பெருக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அதாவது சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வருவாய் பெருகுகிறது.அதன் மூலம் வன உயிர்களை காக்கலாம் என்பதே.

இருந்தாலும் சிலவற்றை எப்போதும் சொல்வதைப்போல, மீண்டும் அசை போடுவோம்.
இந்த மாதிரியான தினங்கள் எதற்காக அனுசரிக்கப் படுகிறது என நாம் முதலில் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப் பின்பற்றி நடக்க ஆரம்பிப்போம்...

முதலில் இந்த தினம் கொண்டாட்ட தினங்களில் ஒன்றல்ல அதாவது, நரகாசூரனை அழித்த தினம் தீபாவளி தினம் தீமை ஒழிந்தநாளாக கருதப்படுவதால் அது கொண்டாட்டத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது...

இப்படி வருடம் முழுவதுமே பல நாட்களை கொண்டாட்ட நாட்களாக பழக்கப்படுத்திவிட்ட சமூகத்தில் வாழ்வதால் நமக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டநாளை யாராவது சில அக்கறையுள்ளவர்கள் சில தினங்களை சில காரணங்களுக்காக வலியுறுத்தல் நாளாக அனுசரிக்கச்சொல்வதால் அது கொண்டாட்டப் புத்தியிலேயே பார்க்க வைக்கிறது...

உண்மையில் இவ்வாறான நாட்கள் நம்மை எச்சரிப்பதற்காக...
நினைவூட்டுவதற்காக,
சாலையில் வைத்திருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் போன்றவையே இந்த நாட்கள்...

சரி உலகப் பல்லுயிர்ப் பரவல் நாள் எதற்கு ?

இதுவும் நம்மை எச்சரிக்கவே என்னை கடந்த எதுவுமில்லை என்கிற மனிதனின் இறுமாப்பிற்கு எச்சரிக்கை விடும் நாட்களில் இதுவும் ஒன்று.

மரம் தானே என மரத்தை வெட்டியும்,இன்னும் பிற பேராசைச் செயல்களாலும் பலகோடி ஆண்டுகளாக உருவான புவிச்சூழலையே சிதைத்துவரும் மனிதனால், மீண்டும் பழைய நிலைக்கு பூமியை மாற்றுவதென்பது ஒரே நாளில் செய்யமுடியாத காரியம். இதை புரிந்து கொண்டால் மனிதர்களால்தான் இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்கிற புத்தி காணாது போய்விடும்.

இந்த மாதிரியான ஆதிக்கபுத்தியை கழட்டிவைக்கச் சொல்லும் நாட்களில் இதுவும் ஒன்று.  மற்ற உயிரினங்களை விட மிக மிக தாமதமாகவே இந்தப்பூமியில் பிறந்த பூமிக்குடும்பத்தின் கடைக்குட்டிதான் மனிதன்...

இந்தவகையில் பார்த்தால் முதல் உரிமை மற்ற உயிர்களுக்கே...
இதை உணர்ந்தால் அத்துமீறி அழிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வரும்?..

இந்த பூமியில் வாழ்கிற அத்தனை உயிர்களுமே மிக மிக அவசியமானவை அதில் முக்கியமானவை எது ?...
எது நமக்கு நன்மை செய்கிறதோ...
அதாவது, "நமக்கு உணவாகவோ அல்லது பணமாகவோ மாற்றக்கூடியவையான உயிரினங்கள் நன்மை செய்யும் உயிரினங்களாக பார்க்கப்படுகிறது"....
மற்றவை தீமை செய்பவையா ?

உண்மை என்னவென்றால் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கு மனிதன்தான்...
"தீமை செய்யும் உயிரினம் "

மரங்களை அழித்தோம்...
அதன் விளைவு

பல பறவைகள் அழிந்தது ,
காலநிலை மாற்றம்,
புவிச்சூடு,
காற்று சீர்கெட்டு அபாய நிலையை நோக்கி பூமி...

இனி நீர் வணிகம் போல காற்றுவணிகச் சூழலையும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...

இங்கு மற்ற உயிர்கள் எதற்கு இருக்கின்றன என்கிற காரணம் வேண்டுமானால் நமக்குத்தெரியாமல் இருக்கலாம‌் ஆனால் இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை என்பதை உணர்ந்து பல்லுயிர்ச்சூழல் தழைக்க பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவற்றை சிதைக்கின்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்போம்...

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்ப்போம்...
பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவோம்,
சைக்கிளை தூசிதட்டி ஓட்டிப் பழகுவோம்,
மின் பயன்பாட்டைக் குறைத்து
ஆடம்பரத்தைக் குறைப்போம் எளிமையை கடைபிடிப்போம்...
அழகிற்காகவும், மூடநம்பிக்கையாலும்,
உயிரினங்களின் இறகுகள்,
சிறகுகள்,
தோல்,
கொம்பு,
பல்,
மயிர்கள்,
நகங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்...

அதனதன் வாழிடச்சூழலை மேலும் அழிக்காமல் இருப்போம் இல்லையெனில் மனிதன் வாழும் சூழலே அற்றுவிடும். பிற உயிர்களற்ற சூழலில் மனிதன் அனாதையாகி விட மாட்டான் அழிந்தே விடுவான்.

இருப்பதைக்கொண்டு இன்பமாக அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வோம்.