புதன், 1 ஜூலை, 2020

*🌐ஜூலை 1,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் கோவை ஞானி பிறந்த தினம் இன்று.*

ஜூலை 1,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் கோவை ஞானி பிறந்த தினம் இன்று.

எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை அடுத்துள்ள சோமனூரில் 1935 ஜூலை 1 அன்று, கிருஷ்ணசாமி - மாரியம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஞானிக்கு மூன்று வயதானபோது குடும்பம் அவிநாசியில் உள்ள கள்ளிப்பாளையத்திற்குக் குடிபெயர்ந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில் ஞானி அங்கு படித்தார். தந்தை தானிய வியாபாரி. மிக வறுமையான சூழல். கற்றாழையையும், புழுத்த மக்காச்சோளத்தையும் உண்ணும் சூழலிலும் கல்வியைத் தொடர்ந்தார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர், தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழிலக்கியம் கற்றார். அங்கு நிலவிய தமிழ்ச் சூழலாலும் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, முத்து சண்முகம் போன்ற தமிழறிஞர்களாலும் ஞானியின் தமிழார்வம் விரிவடைந்தது. பல்கலைக்கழகம் இவருக்கு பல வாசல்களைத் திறந்துவிட்டது. கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மெய்யியல், அறிவியல் எனப் பல்துறை நூல்களை வாசித்தார். அது இவரது பார்வையை விசாலமாக்கியது.

படிப்பை முடித்தபின் தமிழாசிரியர் பணி கிடைத்தது. தன்னுடன் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய இந்திராணியை திருமணம் செய்துகொண்டார். ஓய்வு நேரத்தை வாசிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டார். மார்க்சியம் இவரை ஈர்த்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், திறனாய்வு எனப் பல களங்களில் மார்க்சிய சித்தாந்தத்தின் வழியே ஆய்வுகளை மேற்கொண்டார். நண்பர்களுடன் கோவையில் 'சிந்தனை மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கியவர், 'புதிய தலைமுறை' என்ற இதழை வெளியிட்டார். அதில் காத்திரமான பல கட்டுரைகள் வெளியாகின. 'இராவணன்' என்ற புனைபெயரில் கவிதைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். மணிவாசகன், கபிலன், கதிரவன், தமிழ்மாறன் என்று பல புனைபெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நா.பா.வின் நாவல்களை விமர்சித்து இவர் எழுதிய கடிதம் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே 'புதிய தலைமுறை' வெளிவந்தது. தொடர்ந்து 'வானம்பாடி' கவிதை இதழிலும் முக்கியப் பங்காற்றிய ஞானி அதிலிருந்து வெளியேறினார். 'வேள்வி', 'பரிமாணம்', 'நிகழ்', 'தமிழ்நேயம்' போன்ற இதழ்களில் வெவ்வேறு பொறுப்புகளில் பங்காற்றினார். எழுத்தாளர் ஜெயமோகனை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஞானிதான். ஜெயமோகனின் முதல் சிறுகதையான 'படுகை' நிகழில் வெளிவந்ததன் மூலம் ஜெயமோகனின் கலை, இலக்கியப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து 'நிகழ்' இதழில் ஜெயமோகனின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார்.

ஞானி சிறந்த கவிஞரும்கூட. அகலிகையின் கதையை 'கல்லிகை' என்ற நீள்கவிதையாக வெளியிட்டிருக்கிறார். அகலிகையை மார்க்சிய கோணத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் பார்க்கிறார். 'கல்லும் முள்ளும் கவிதைகளும்', 'தொலைவிலிருந்து' போன்றன இவரது கவிதைத் தொகுப்புகளாகும். தாகூரின் 'சண்டாளிகா' நாடகத்தை 'தீண்டாதவள்' என்று இவர் வடித்துள்ளது முக்கியமானது. சமயம் குறித்தும் விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டவர் ஞானி. இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு என்பதே ஞானியின் ஆய்வு முடிவு. அதே சமயம் ஞானியை நாத்திகர் என்றும் மதிப்பிட்டுவிட முடியாது. சமயம்பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒரு நேர்காணலில், "அண்ணாமலையில் நான் படிக்கிறபொழுதே தியானம் செய்வதில் ஈடுபட்டு இறுதியில் நானே பிரம்மம் என்ற பேருணர்வைப் பெற்றேன். 'அத்வைதம்' என்ற பேருணர்வுக்கான பொருண்மைத் தெளிவை நாளடைவில் விவேகானந்தர், தாகூர், பாரதி முதலியவர்களைப் பற்றிய படிப்பறிவின் மூலம் பெற்றேன். இந்தப் பார்வை மார்க்சியத்தின் மீதான எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது" என்கிறார்.

தனது தியான அனுபவம் பற்றி ஞானி, "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, தனியறையில் காலை நேரத்தில் அரைமணி நேர தியானமென்று தொடங்கி நாளடைவில் மிக வித்தியாசமான அனுபவங்களை அடைந்தேன். தியானத்திலிருக்கும்போது கண்ணுக்குள் ஒரு நீலநிற ஆகாயம். அதன் மத்தியில் நீலநிறம் விலகி மையத்தில் ஒரு மேகம். சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மேகம் விலகிக் கண்ணைக் கூசச்செய்கிற மாதிரி சூரியன்.... திடீரென்று மேலே உச்சந்தலையிலிருந்து குளிர்ந்த நீர் அப்படியே மெல்லக் கீிழிறங்கும். அதனுடைய ஆனந்தமும் பரவசமும் அளவில்லாதது... ஒரு கட்டத்தில் வேறுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டன. விடுதியில் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறேன். நான்கைந்து நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உற்றுப்பார்த்தபோது நாய்களோடு நான் இருக்கிறேன். ஒருமுறை ரயிலில் பயணம் செய்யும்போது எனக்கெதிரே ஒரு அம்மா குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்ததில் நான் குழந்தையாகி விடுகிறேன்." என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் நாவல்கள் குறித்து இவரது திறனாய்வுகள் மிக முக்கியமானவை. கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்மனாபன், பொன்னீலன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரது படைப்புகள் மட்டுமல்லாமல் ஜெயமோகன், சு.வேணுகோபால், பாலகுமாரன். ம.வே.சிவகுமார், சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன் எனப் பலரது படைப்புகள் குறித்து இவர் எழுதியிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகள் கூர்ந்து வாசிக்கத்தக்கன. ஞானியின் ஆய்வுப்போக்கு குறித்து ஜெயமோகன் "நவீன விமரிசனக் கோட்பாடுகளுடன் மார்க்சியத்தை உரையாட வைத்தலிலும் அழகியல் நீதியாக இலக்கியத்தை அணுகும்படி மார்க்சியத்தை மாற்றி அமைத்தலிலும் ஞானியின் பங்கு முக்கியமானதாகும்" என்கிறார். ஞானியின் நடை மிக எளிமையானது. தெளிவானது. குழப்பமான சிந்தனைப் போக்குகளோ, பரபரப்பான வார்த்தைச் சொல்லாடல்களோ, வாசகரை மயக்கும் உத்திகளோ இல்லாமல் நேரடியாக உரையாடலாக எழுதுபவர் ஞானி. அதுவே அவரது பலம்.

சிறந்த தமிழ் பெண்ணெழுத்தாளர் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 'மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்', 'தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்', 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்', 'படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்', 'தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்', 'நானும் என் தமிழும்', 'தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்', 'நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்', 'செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்', 'தமிழிலக்கியம் இன்றும் இனியும்' போன்ற இவரது திறனாய்வு நூல்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்து இவர் எழுதியிருக்கும், 'மணல்மேட்டில் ஓர் அழகிய வீடு', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்', 'மெய்யியல்' போன்ற நூல்கள் சமயம், கடவுள், தத்துவம் தொடர்பானவை. இவை தவிர்த்து, 'பெண்கள் வாழ்வியலும் படைப்பும்', 'மார்க்சியத்தின் எதிர்காலம்', 'படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும்', 'விடுதலை இறையியல்', 'இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்', 'அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்' போன்ற தொகுப்பு நூல்கள் முக்கியமானவை. 'மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு' ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை ஆராய்கிறது. 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்' என்ற ஆய்வு நூல் 1980களில் வெளிவந்த சுமார் 30 எழுத்தாளர்களின் 65 நாவல்களை ஆராய்கிறது. 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்' என்ற நூல், நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து விளக்குகிறது. 28 திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட 48 நூல்களை எழுதியிருக்கிறார் ஞானி. அவரது வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏதுமில்லை என்பதையும், 'ஞானி' பெயருக்கேற்றாற் போல் ஓர் உண்மையான பக்குவநிலையில்தான் வாழ்ந்து வருகிறார் என்பதையும் அவரது படைப்புகளைக் கூர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

1988ல் ஞானிக்குக் பார்வைக்குறைவு ஏற்பட்டது. அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்றாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. உதவியாளர்கள் மூலம் வாசித்தலும், எழுதுதலும், பத்திரிகை வெளியீடும் தொடர்ந்தது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வைத்திறன் இல்லாதபோதும் உதவியாளரின் ஒத்துழைப்புடன் இவர் ஆற்றிவரும் தமிழ்ப்பணி குறிப்பிடத் தகுந்தது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலம்பு, குறள், கம்ப ராமாயணம் எனப் பண்டை இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர். தமிழாசிரியர் பணி அதற்கு உறுதுணையாக இருந்தது. பாரதியைத் தன் ஆசானாகக் கருதியவர். முனைவர் பட்டம் பெறாவிடினும் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறார். பல பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன. பல கருத்தரங்களில் பங்கேற்றுச் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார். ஞானியின் 'மார்க்சியம் பெரியாரியம்' எனும் நூலுக்குத் தமிழக அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 'செம்மொழி ஞாயிறு' என்னும் பட்டத்தை வழங்கியது. கனடாவின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான 'இயல் விருது' வழங்கியது. 'விளக்கு' விருதும் பெற்றவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் 'பரிதிமாற் கலைஞர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

தமிழகத்தின் மார்க்சியத் திறனாய்வாளர்களுள் முக்கியமானவரான ஞானி, தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மனைவி புற்றுநோயால் 2012ல் காலமானார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். 80 வயதாகும் இவருக்குப் பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். விளம்பரமின்றி அமைதியாக வாழ்ந்துவரும் ஞானியின் படைப்புகளைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. kovaignani.org என்ற அவரது இணைய தளத்தில் ஞானியின் நூல்கள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கும் 'இலக்கியப் பிதாமகர்' ஞானி, தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பு என்றும் எண்ணிப் போற்றத்தக்கது.

*ஜூலை 1, வரலாற்றில் இன்று:கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று.*

ஜூலை 1, வரலாற்றில் இன்று.

 கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று.

அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.
நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து
காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !
முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் பிறந்த தினம் இன்று.

*🌐ஜூலை 1, வரலாற்றில் இன்று:தேசிய மருத்துவர்கள் தினம் இன்று.*

ஜூலை 1, வரலாற்றில் இன்று.

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது  முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.

 1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் ராய். 1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80-வது வயதில் அவர் மறைந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961-ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தார். இவரது பிறந்த நாளான ஜூலை 1-ம் தேதியிலேயே இவர் மரணம் அடைந்தார். அவரின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர்கள் டாக்டர்தான். டாக்டர்களைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது.

*🌐ஜூலை 1,* *வரலாற்றில் இன்று:இந்தியாவுக்கு ஆகஸ்டு 15ஆம் நாளில்* *சுதந்திரம் வழங்க பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவு செய்த தினம் இன்று(1947)*

ஜூலை 1,
வரலாற்றில் இன்று.

இந்தியாவுக்கு ஆகஸ்டு 15ஆம் நாளில்
 சுதந்திரம் வழங்க பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவு செய்த தினம் இன்று(1947.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிரிட்டன், தனக்கு கீழ் இருந்த பல நாடுகளுக்கு விடுதலை அளித்தது. அதன்படி இந்தியாவிற்கும் விடுதலை அளிக்க பிரிட்டன் முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் நாராளுமன்றத்தில் 1947ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி அன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்தது.

செவ்வாய், 30 ஜூன், 2020

Go.Ms.No:288 date 29.6.2020 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்நாள் சான்று பெற நேரில் கருவூலத்திற்கு வருவதில் இருந்து இந்த ஆண்டு (2020 ஏப்ரல், மே, ஜூன்) விலக்கு - தமிழக அரசு ஆணை வெளியீடு

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.

சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பாரத ரத்னா விருதை பெற்ற மூன்றாவது அறிவியல் அறிஞர் ஆவார். இதற்கு முன்னர் சர்.சி.வி.ராமன்,அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர் தன்னுடைய பட்டப்படிப்பை மைசூர்,பனராஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலையில் செய்தார்.
அமெரிக்காவில் தீரா ஆர்வம் கொண்ட திறமை மிகுந்த ஆய்வாளராக அறியப்பட்ட காலத்திலேயே நேருவின் அழைப்பில் இந்தியா நோக்கி வந்த எண்ணற்ற விஞ்ஞானிகள் வரிசையில் இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

 பின்னர் ஐ ஐ டி கான்பூரில் வேதியியல் துறை தலைவரான காலத்தில் திடப்பொருள் மற்றும் பொருள் வேதியியல் துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வுகளை ஈடுபடும் ஆய்வகங்களை அமைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகள்,
பங்களிப்புகள் செய்தார். பின்னர் ஐ ஐ எஸ் சி இயக்குனராக பத்தாண்டுகள் அதே பணியை சிறப்பாக செய்தார்.
திடப்பொருள் வேதியியல் துறையை உலகளவில் முன்னேற்றியத்தில் மிக முக்கியமான பங்கு அவருக்கு உண்டு என்கிற அளவுக்கு அவரின் ஆய்வுகள் இருந்தன. இந்திய அரசின் அறிவியல் முன்னெடுப்புகளில் TWAS,JNCASR முதலிய முக்கியமான அமைப்புகளை உருவாக்குவதிலும் அரசின் திட்டங்களை வகுப்பதிலும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்.
உலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கிற முறைகளை உருவாக்கியுள்ளார் இவர். குறை கடத்தி மற்றும் கார்பன் நானோட்யூப்களை பிரிக்க எளிய முறையும் இவரின் பங்களிப்பே. இவரின் ஆய்வுகள்,கண்டுபிடிப்புகள் ஆற்றல் பிரித்தல்,பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல்,மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றை சாதிப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது துவங்கி எண்ணற்ற அமைப்புகளின் உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர் விரைவில் நோபல் பரிசு பெறுவார் என்று அடித்துச்சொல்லுகிறார்கள்
குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல் மனப்பாடம் செய்யவே தூண்டுகிறது,
அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும் என்று அழுத்தி சொல்லும் இவர் அரசு ஒட்டு மொத்த ஜிடிபியில் இரண்டு சதவிகிதத்தை அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

*🌐ஜூன் 30,* *வரலாற்றில் இன்று:பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.*

ஜூன் 30,
வரலாற்றில் இன்று.

 பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.

முருகுப்பிள்ளை நவரத்தினசாமி ( பிப்ரவரி 16, 1909 - ஜூன் 30, 1969) இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்.நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் பிறந்த தினம் இன்று.

இவர் 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், ப்ரூக்ளின் நகரில் பிறந்தார்.

நியுக்ளிக் அமிலங்களின் உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கிய முதல் விஞ்ஞானி பால் பெர்க் ஆவார்.

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:இயற்கையின் செய்தித் தொடர்பாளன் மா.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1912)*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

 இயற்கையின் செய்தித் தொடர்பாளன் மா.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1912).

நான் ஒரு தேவாங்காகப் பிறந்திருக்கலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

‘என் மரணத் தருவாயில் ஒரு ‘வக்கா'வின் குரலை நான் கேட்க நேரிடலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இயற்கையை இயற்கைக்காகவே நேசிக்கும் ஒரு மனிதனால் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். மா.கிருஷ்ணனால் அது முடிந்தது.

மாதவையா கிருஷ்ணன் எனும் மா.கிருஷ்ணன் 1912-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்று பிறந்த தமிழர், சென்னையில் வாழ்ந்தவர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு உயிர்மூச்சாக இருந்த முன்னோடி. எனினும், தமிழ் மொழி அறிந்த வாசகர்களிடையே அவருடைய எழுத்து சென்று சேர்ந்ததைவிட, ஆங்கிலத்தில் அவர் எழுதிய படைப்புகள்தான் பெரும் வாசகப் பரப்பைப் பெற்றுத் தந்தன.

காட்டுயிர்கள் குறித்து வறட்டுத்தனமான விவரணைகளை எழுதாமல், நேரடிக் கள அனுபவங்கள், ஆய்வுகள் மூலமாகவும், ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்தும் இயற்கையை உயிர்ப்புள்ளதாகத் தீட்டினார்.

பன்முக ஆளுமை

தமிழில் அவர் எழுதிய படைப்புகள் ‘மழைக்காலமும் குயிலோசையும்' மற்றும் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்' என இரண்டு தலைப்புகளில் முறையே எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன் மற்றும் பெருமாள் முருகன் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டுச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின. அந்தப் புத்தகங்கள் தமிழர்களிடம் மெல்ல மெல்லப் பரவலாகிவரும் நிலையில், அவருடைய ஆங்கிலப் படைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது நலம்.

தன் வாழ்நாளில் (1912 முதல் 1996 வரை) ஆங்கிலத்தில் எழுதியவற்றை ‘ஜங்கிள் அண்ட் பேக்யார்ட்' மற்றும் ‘நைட்ஸ் அண்ட் டேஸ்' ஆகிய தலைப்புகளில் புத்தகங்களாக வெளியிட்டார். ஆனால் துர்பாக்கியம், அந்த இரண்டு புத்தகங்களும் தற்போது அச்சில் இல்லை.

இந்தியாவின் காட்டுயிர் குறித்து ‘ஜவஹர்லால் நேரு நிதி நல்கை'யை முதன்முதலில் பெற்ற அவர், ‘Ecological survey of the larger mammals of peninsular India’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வை ‘India's wildlife in 1959-70’ தலைப்பில் ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழகம்' பதிப்பித்தது. அது தற்போது அச்சில் இல்லை.

மிக நீண்ட தொடர்

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘தி ஸ்டேட்ஸ்மேன்' ஆங்கில நாளிதழில் 1950-ம் ஆண்டு முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக 46 ஆண்டுகளுக்கு ‘கன்ட்ரி நோட்புக்' என்ற தலைப்பில் இயற்கை தொடர்பான கட்டுரைகளை அவர் எழுதிவந்தார். இந்திய இதழியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் வெளிவந்த தொடர்களில் ஒன்று இது.

அந்தக் கட்டுரைகளில் சிலவற்றை ‘நேச்சர்ஸ் ஸ்போக்ஸ்மேன்' என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணன் எடுத்த காட்டுயிர் ஒளிப்படங்கள், சில பதிவுகளைத் தொகுத்து ‘ஐ இன் தி ஜங்கிள்' என்ற தலைப்பில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் சாந்தி, ஆஷிஷ் சந்தோலா புத்தகமாகப் பதிப்பித்துள்ளனர். பறவைகள் தொடர்பாகப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான அவருடைய கட்டுரைகளை ‘ஆஃப் பேர்ட்ஸ் அண்ட் பேர்ட் ஸாங்' என்ற தலைப்பில் அவர்களே தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு கிருஷ்ணன் எழுதிய கடிதங்கள் ‘புக் ஆஃப் பீஸ்ட்ஸ்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையின் முதல் வரி, அந்தப் புத்தகத்தில்தான் காணக் கிடைத்தது.

2 ஆயிரத்துக்கும் மேல்

மா.கிருஷ்ணன் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும், ஒளிப்படக் கலைஞராகவும் மட்டுமில்லாமல் கலை, கிரிக்கெட், கர்னாடக இசை போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியம் மீது அவருக்கிருந்த ஆர்வம், தமிழில் ‘கதிரேசன் செட்டியாரின் காதல்' என்ற துப்பறியும் நாவலாகவும், ஆங்கிலத்தில் ‘தி டேல்ஸ் ஆஃப் தாவூத் கான் அண்ட் அதர் ஸ்டோரீஸ்' எனவும் வெளிப்பட்டது.

‘தான் உயிரோடிருந்தவரை அவர் எழுதிய கட்டுரைகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்' என்று ராமச்சந்திர குஹா தான் தொகுத்த புத்தகத்தில் கூறியுள்ளார். அவற்றில் தற்சமயம் நமக்குக் கிடைத்திருப்பது கால்வாசிதான் என்று சொன்னால் மிகையில்லை. மீதமிருக்கும் அவரது எழுத்தும் பதிப்பிக்கப்பட்டால், அவரின் அறியப்படாத ஆளுமையும் தெரிய வரலாம்.

சின்ன விஷயங்களின் மனிதர்

இன்றைக்கு யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம் போன்ற 'பெரிய' விலங்குகள் குறித்து எழுதுவதும் பேசுவதும் மட்டும்தான் சுற்றுச்சூழல் என்று நம்ப வைக்கச் சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. காரணம், மேற்கண்டவை வசீகரமானவையாகக் கருதப்படுவதுதான். அதிலும் குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அமைப்புகள் அவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

ஆனால், யானை, சிங்கம் அளவுக்கு ‘வசீகரம்’ இல்லாத பாம்பு, பல்லி, பூனை, பூச்சி, மீன் போன்ற ‘லெஸ்ஸர் கரிஸ்மாடிக்' உயிரினங்களைப் பெரும்பாலோர் சீந்துவதில்லை. ஆனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாகாத 1950, 60-ம் ஆண்டுகளிலேயே பூனை, பல்லி, நாய் போன்றவை குறித்து மிகுந்த அவதானிப்புடன் அவர் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய பதினோறாம் வயதில் வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்திருக்கிறார் என்பதை அறியும்போது, மக்களின் ஆர்வம் திரும்பாத ‘சின்ன உயிரினங்கள்' மீது அவர் கொண்டிருந்த அக்கறை தெரிய வரும்.

பறவைகளின் தோழன்

பறவையியலாளர் சலிம் அலியை 'பறவை மனிதர்' என்று சொன்னால், மா.கிருஷ்ணனை ‘பறவைகளின் தோழன்' என்று சொல்லலாம். பறவைகளைத் தேடி அவர் காடுகளுக்குச் செல்வதும், பறவைகள் அவரின் வீட்டுக்கு வருவதும் எனப் பறவைகளும் அவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்துவந்துள்ளனர். தன் கையெழுத்தைக்கூட ஒரு பறவை பறப்பதுபோலப் போடுவார் என்றொரு தகவல் உண்டு.

பறவைகள் மீது சிரத்தையுடன் செயல்பட்ட அவர், பறவை நோக்குதல் குறித்தும் ஒரு அருமையான விஷயத்தைச் சொல்கிறார். "நீங்கள் நாள் முழுக்க ரயிலில் பயணிக்க வேண்டியதிருக்கலாம். அப்போது புத்தகம் படிக்க முடியாதபடியோ அல்லது பேச்சுத் துணைக்கு ஆளற்றோ அல்லது தூங்கும் வழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவாறே செல்லுங்கள். உங்கள் இருக்கையிலிருந்து கொஞ்சம் கீழாக, சற்றுச் சாய்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். இப்போது ஜன்னல் வழியே மேலே பாருங்கள். மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருக்கும். அவற்றில் சில பறவைகள் அமர்ந்திருக்கும். நீங்கள் ஆனந்தமடைய அவையே போதும்" என்கிறார்.

அடுத்த முறை நீங்கள் ரயிலில் செல்லும்போது இவ்வாறு பாருங்கள். ஏதேனும் ஒரு பறவையின் வடிவத்தில் மா.கிருஷ்ணன் உங்களுக்குத் தென்படலாம்!

தனக்கு இருந்த இருமொழிப் புலமையின் காரணமாகத்தான் பல பறவைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை அவரால் இனம் காண முடிந்தது. ஆங்கிலத்தில் ‘நைட் ஹெரான்' எனும் பறவை ‘வக்கா' என்று முன்பு தமிழில் அழைக்கப்பட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.

‘தேசியப் பறவையாக எதைத் தேர்வு செய்வது' என்பது குறித்த விவாதத்தில் கானமயில்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைப் பற்றியும் எம்.கிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். ‘எதிர்காலத்தில் அவை அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலை வரலாம்' என்று அன்றே அவர் யூகித்திருக்கிறார். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1961! இன்று அது நிஜமாகி இருக்கிறது.

சேவல் சண்டையை ஒரு விளையாட்டாகப் போற்றும் அவர், ‘அப்படியான சேவல்கள் அழிவின் நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம், சண்டைக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றால் வேறு பயன்கள் எதுவுமில்லை' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

'இந்தியாவில் சில விஷயங்களைத் தனிமைப்படுத்திவிட்டு வாழ்க்கை நகராது. உதாரணத்துக்கு ஒருவர் உறக்கத்தை விட்டுக் காலையில் கண் விழிக்கும்போதும், மாலையில் ஒருவர் உறக்கத்தின் விளிம்பிலும் எங்கோ தூரத்தில் ஒரு காகம் கரைவதை உணரவே செய்வார்' என்று காகம் குறித்துத் தன் பார்வையைப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுவாக, ‘டிட்- யூ - டூ - இட்?' (நீ அதைச் செய்தாயா?) என்கிற தொனியில் கீச்சிடும் பறவை, வேடர்கள் வரும்போது தன் சகாக்களுக்கு ‘டோன்ட் யூ ஸீ ஹிம்?' (நீ அவனைப் பார்க்கவில்லையா?) என்று கேட்பதுபோல இருக்கும். அதனால்தான் அந்தப் பறவைக்குத் தமிழர்கள் ‘ஆள்காட்டிப் பறவை' என்று பெயரிட்டிருக்கலாம்" என்று ஆங்கிலத்தில் 'ரெட் வேட்டில்ட் லேப்விங்' என்று ஷ பறவையின் தமிழ்ப் பெயருக்குச் சற்றே கிண்டலாக விளக்கம் தருகிறார் கிருஷ்ணன்.

*☀தேசிய மதிய உணவுத்திட்டம்-கொரோனா நோய் காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளி செயல்படாத நாட்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவூட்டு செலவினத் தொகை வழங்குதல்-மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரம் கேட்டல் சார்பாக சமூக நல ஆணையர் பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதம்.*

*☀தேசிய மதிய உணவுத்திட்டம்-கொரோனா  நோய் காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளி செயல்படாத நாட்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவூட்டு செலவினத் தொகை வழங்குதல்-மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரம் கேட்டல் சார்பாக சமூக நல ஆணையர் பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதம்.*