ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் SSA ~~ 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மூடல்

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில்  15  மாணவர்களுக்கும் குறைவான  எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.




அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும், அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு  மானியமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ்  (சமக்ரா சிக்‌ஷா அபியான்) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த  ஒருங்கிணைந்த பள்ளி மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.


2018-19ம் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் தமிழகத்தில் 31 ஆயிரத்து 266 அரசு ெதாடக்க பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளுக்கு ₹97 கோடியே 18  லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே  இந்த மானியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 28 ஆயிரத்து 263 அரசு தொடக்க  மற்றும் மாவட்ட நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் ₹89.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.


15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டிருக்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதி திராவிடர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, சமூக  நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும்.  நிதி ஒதுக்கீடு தொகைக்கு கூடுதலாக எந்த காரணத்தை கொண்டும் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கக்கூடாது என்று சமக்ரா சிக்‌ஷா அபியானின் மாநில  திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.


மேலும் விடுவிக்கப்படுகின்ற பள்ளி மானிய  தொகையில் 10 சதவீதம் ஸ்வச்சா திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட வில்லை. தமிழகத்தில் 3003 பள்ளிகள் 15 மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் இந்த பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தமிழக அரசு ஏற்கனவே 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்  தற்போது 15 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்படுகின்ற பள்ளிகளை அருகே உள்ள நடுநிலை, உயர்நிலை  பள்ளிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாலேயே ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள்  குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் அரசு பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும்.


தமிழக அரசு பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை


* தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு கணக்கின்படி 31,266 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


* 15 முதல் 100 மாணவர்கள் வரை எண்ணிக்கையில் 21 ஆயிரத்து 378 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.


* 101 முதல் 250 மாணவர்கள் வரை எண்ணிக்கையுடன் 6167 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.


* 251 முதல் 1000 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் 714 ஆகும்.


* ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 4 பள்ளிகள் மட்டுமே உள்ளன.


* 3003 பள்ளிகளில் 15க்கும் குறைவான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்