சனி, 20 அக்டோபர், 2018

அரசுப் பள்ளி மாணவரும் சாதனையாளர் ஆகலாம்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்


அரசுப் பள்ளி மாணவரும் நன்றாகப் படித்து அறிவியல்அறிவை வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறினார்.
நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் தான் படித்த பள்ளியில் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்தைத் திறந்துவைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளித் துறையில் இஸ்ரோ அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு உதவும் வகையிலான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணிகளில் இஸ்ரோ இதுவரை ஈடுபடவில்லை.
மீனவர்கள் கடலில் மீன்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்பட இஸ்ரோ மீனவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது. மீனவர்களுக்கு கடல் எல்லைகளைக் கண்டறியும் கருவிகளை கொடுப்பதற்கு இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இது மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
இஸ்ரோ செயல்படுத்தும் டெலிமெடிசின் திட்டம் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே மருத்துவ வசதியைப் பெறும் திட்டமாகும். இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்படும்.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இத்திட்டத்தில் உலகின் நான்காவது நாடாக இந்தியா வெற்றியடையும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிய சாதனையாளர்களாக வர முடியாது என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நன்றாகப் படித்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டால், அரசுப் பள்ளி மாணவர்களும் சாதனையாளர்களாக வலம் வர முடியும் என்றார் அவர்.