சனி, 10 நவம்பர், 2018

வீட்டு மனை வரன்முறை அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு



சென்னை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணப் பதிவு குறித்த விவரங்களை நவம்பர் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016 -ஆம் ஆண்டு அக்டோபர் 20 -க்கு முன்பாக வீட்டுமனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளைப் பொருத்து உள்ளாட்சி அமைப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள், தடையின்மைச் சான்று வழங்கப்பட்ட மனைகளைப் பொறுத்தும் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த சார் பதிவகத்தின் பெயர், வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கடந்த 3 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்திருந்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வரும் 16 ஆம் தேதி ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என காலக்கெடு நீட்டித்துள்ளது தமிழக அரசு. மேலும் http://www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.